Monday, December 30, 2024

என்றென்றும் புன்னகை

பகுதி 7 - வெற்றிக்கொடி கட்டு

அன்று அத்தனை பேரும் என்னை திரும்பிப் பார்க்க வீணா அத்தனை சந்தோஷத்துடனும் சிரிப்புடனும் என்னை பார்த்து சொன்னாள் 

'ஏய், நீதான் க்ளாஸ் பர்ஸ்ட்' 

எனக்கு அதிர்ச்சி கலந்த சந்தோஷம் 'என்ன சொல்ற, நிஜமாவா' என்றேன்.

'ஆமா, சிவகாமியைக்காட்டிலும் 5 விழுக்காடு அதிகம், உன் பக்கத்துல கூட யாரும் வர முடில, கன்கிராஜுலேஷன்ஸ்.....' என கையை நீட்டினாள்.  

'5 சப்ஜெக்ட்டில் 3இல் நீதான் பர்ஸ்ட்' என்றாள்.

'Maths III?' என்றேன்

'அதிலும் நீதான் பர்ஸ்ட்' என்றாள். என்னாலேயே நம்ப முடியவில்லை என்றாலும் அதுதான் உண்மையாக இருந்தது.

அவளுடன் கைகுலுக்கிவிட்டு திரும்பவும் ஏகப்பட்ட பேர் வந்து கைகுலுக்கினர். சம்பத் 'சூப்பர் மாமா' என கைகுலுக்கினான். கோகுல் 'ஐ நோ மேன், யூ வில் டூ இட், நான்தான் அப்போவே சொன்னேன்ல, யூ ஆர் டேலண்ட்டட்னு' என்றான். திரும்பி பார்த்தால் வீணாவை காணவில்லை. 

ஸ்டாஃப் ரூமுக்கு வர சொல்லி அங்கே தெரிந்த ஆசிரியர்கள், தெரியாத ஆசிரியர்கள் என எல்லாரும் வாழ்த்துக்கள் சொன்னனர். யாரெனவே தெரியாத சில சீனியர்களும் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். உண்மையில் எதிர்பாராது நிகழ்ந்த அந்த வெற்றியை எப்படி எதிர்கொள்வதென தெரியவில்லை. சில தினங்கள் நாம் ஏதும் செய்யாமலே மிக வெற்றிகரமான நாளாக அமையும். அப்படி ஒரு நாளாகத்தான் அந்த நாள் அமைந்தது. சம்பத்துக்கு அன்று சந்தோஷம் தாங்கவில்லை, வாத்தியார்களிடமெல்லாம் போய் வாயடித்துக் கொண்டிருந்தான், 'பாத்தீங்கல்ல, பாய்ஸ்தான் கெத்து' என்று, வேங்கடம் எனும் நாமம் வாத்தியார் 'நீ மார்க் வாங்கி கிழிச்சிருந்தா கூட பரவால்ல, அவன் மார்க் வாங்குனதுக்கு நீ இங்க வந்து அனத்திகிட்டுருக்க' என அவனை வாரினார். 'யார், வாங்கினா என்ன சார், பசங்கதான முதல்ல வந்தது, ' என அவரிடம் வம்படி செய்து கொண்டிருந்தான்.

அவன் அலப்பறை அன்று மாலை கல்லூரி பஸ்ஸிலும் அடங்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு பாராட்டு விழாவே நடத்தி விட்டான். 'சிவகாமி யாவது, கருமாரி யாவது வந்து பின்னாடி நிக்க சொல்லுடா..... மாமா எப்டி தூக்கி நிப்பாட்னான் பார்..... இவளுங்கெல்லாம் காலேஜ் விட்டதும் அடுத்த 5 நிமிடத்தில் ஹாஸ்டல்ல இருக்காளுக, படிக்க எவ்வளவு நேரம் இருக்கும், ஆனா மாமா பாரு காலைல 3 மணி நேரம், சாயங்காலம் 3 மணி நேரம் ட்ராவல் பண்ணி அதுக்கப்றமும் படிச்சிருக்கான்....' என ஏகத்துக்கும் அள்ளி விட்டுக்கொண்டிருந்தான். காலேஜ் டாப்பர் லிஸ்டில் என் பெயர் வந்ததனால் அன்று முதல் என் பெயரை 'சூப்பர்' என மாற்றிவிட்டான். 

'மச்சி, ஓவரா போறடா, நான் பர்ஸ்ட் வரணும்னெல்லாம் படிக்கலடா, ஏதோ ஃப்ளூக்ல நடந்துருக்கு, நீ பாட்டுக்கு ஓவரா ஏத்தி விடாத, அடுத்த செமஸ்டர்ல எனக்கு இது தேவையில்லாத ப்ரஷர் க்ரியேட் பண்ணிவிடும்' என்றேன்.

'அதெல்லாம் இல்லடா சூப்பர், உன்ன பத்தி உனக்கே தெர்ல, Maths lll ல இவ்ளோ மார்க் வாங்கிருக்கன்னா உனக்கு மண்ட ஜாஸ்தி, நீ இன்னும் நெறய செய்வ, நீ கலக்கு மாப்பு, உன்ன வச்சே இவளுகள ஓட விட்றேன் பார்....' என சொல்லிக்கொண்டே வந்தான்.

அன்றாவது வீணா கல்லூரியில் என்னுடன் வந்தமர்ந்து பஸ்ஸில் பேசியது போல நெருக்கமாக பேசுவாள் என எதிர்பார்த்தேன், என் வெற்றியின் போது என்னவள் போல அவள் என்னுடன் இருக்க வேண்டும் என்கிற ஒரு மனநிலை. ஆனால் அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல வருவதும், எதேச்சையாக சிரிப்பதும், பிறகு தோழிகளை காண ஓடிவிடுவதுமாகவே இருந்தான். சரி நாமாக போய் பேசலாம் என நினைத்தால் கூட இனிப்பை ஈ மொய்ப்பது எப்போதும் ஓரிரண்டு பெண்களோ அல்லது ஆண்களோ அவளுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களை விலக்கி விட்டு அவளுடன் போய் பேச எனக்கு விருப்பமில்லை. 

வீட்டில் அப்பாவுக்கும் சந்தோஷம் தாங்கவில்லை, என்னிடம் 'கஷ்டப்பட்டு உழைத்தால் பலன் கிடைக்கும் ' என்ற டயலாக் மட்டும் சொல்லிட்டு, அக்கம் பக்கத்தினர், எப்போவாவது வீட்டிற்கு வரும் சொந்தக்காரர்கள் என எல்லோரிடமும் ஒரே புகழாரம் தான். அம்மாவும் அதே போல்தான் அக்கம்பக்கத்து அத்தைகளுடன் இதைப்பற்றிய பேச்சுதான். இது போக வீட்டில் அண்ணன் என ஒரு கேரக்டர் இருந்தது. எனக்கு நினைவு தெரிந்து நான் LKG படிக்கும் வரை அது என் மீது பாசமாகத்தான் இருந்தது, அதன் பிறகு என்ன ஆனதென்றே தெரியாது, என்னைக்கண்டாலே ஆகாது. வேலைக்கு போவான், வீட்டுக்கு வருவான், பாட்டு கேப்பான், அதுவும் அவன் டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் படித்து அவனே அஸெம்பிள் செய்த ஒரு டேப்ரிக்கார்டர் செட். அதை எக்காரணம் கொண்டும் நான் தொட்டு விடக்கூடாது, நண்பர்கள் என யாருமே கிடையாது, டிப்ளமோ படித்த போது உடன்படித்த ஒரு நண்பனை தவிர, அதுவும் பழம். எப்போதும் முகத்தில் ஒரு மாதிரி சிடுமூஞ்சித்தனம். வாழ்க்கையில் அவனுக்கு எதுவுமே சரியாக நடக்கவில்லை என்பது போலவும், எனக்கு மட்டும் எல்லாம் சரியாக நடக்கிறது என்பது போலவும் அவனுக்குள் ஒரு ஆற்றாமை. 'தம்பி காலேஜ்ல பர்ஸ்ட் ரேங்க், வாங்கிருக்கானாம்டா' என அம்மா சொன்ன போது கூட 'ம்....' என ஒரு பதில்தான். 

சரி மீண்டும் கல்லூரிக்கு வருவோம். அந்த ரிசல்ட்டுக்கு பிறகு என் மீதான எதிர்பார்ப்பு மாணவர்களிடத்தும் ஆசிரியர்களிடத்தும் அதிகமானது. என்னையும், சிவகாமியையும், வித்யப்பிரியாவையும் கூட்டிச்சென்று புகைப்படம் எடுத்து கல்லுரி மேகஸினில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்கள் என போட்டோவுடன் பிரசுரித்தனர். அந்த புத்தகத்தை பார்த்ததும் வித்யப்பிரியா வேண்டுமானால் இருந்து விட்டு போகட்டும், சிவகாமிக்கு பதில் (என் பக்கத்தில்) வீணா இருந்திருக்கலாம் என தோன்றியது. வீணா திறமைசாலிதான் ஆனால் விளையாட்டுத்தனம். படிப்பதை காட்டிலும் நண்பர்களோடு அரட்டை அடிப்பதில் ஆர்வம். அவளுடன்‌ பேச அவளுடனான அடுத்த பயணம் வரை நான் காத்திருக்க வேண்டி இருந்தது. ஆனால் இம்முறை அவள் தனியாக இல்லை. அன்றைய தினம் இன்னும் சில பெண்களும் கூட இருந்தனர். ஷீலா என்று எங்கள் ஏரியா பெண் ஒருத்தியும் அன்று வந்திருந்தாள், அவள் மட்டுமில்லாது அவள் வீட்டுக்கு கூட்டிப்போகிறேன் என கூட ரெண்டு தோழிகளையும் கூட்டி வந்து விட்டாள். வெளியூர் ஹாஸ்டல் பெண்கள் சில வார இறுதியில் இப்படி எந்த தோழி வீட்டிலாவது தங்குவது வழக்கம். அன்று நானும் வீணாவும், ஷீலாவும் இன்னும் இரண்டு பெண்களும் பஸ்ஸுக்காக காத்திருந்தோம். அன்று C6 வரவில்லை. வேறு ஒரு பஸ் வந்தது, ஏற்கெனவே பாதி நிறைந்து தான் வந்தது. இருந்தாலும் அதிலேறி பெண்கள் எல்லோரையும் அங்கங்கே இருந்த இடத்தில் அமர வைத்து விட்டு நான் நின்று கொண்டு வந்தேன். ஷீலாவும் வீணாவும் ஒரே சீட்டில் அமர்ந்து கொண்டனர் மற்ற இரண்டு பெண்களும் இன்னொரு சீட்டில். போச்சுடா இன்றும் வீணாவுடன் பேசும் சந்தர்ப்பம் போய் விட்டதே என நினைத்துக்கொண்டே நின்று கொண்டிருந்தேன்.

பின் சற்று நேரத்தில் பஸ்ஸில் பின் படிக்கெட்டுக்கு பக்கதிலிருக்கும் சீட் காலியானது. நான் வீணாவிடம் 'நான் அங்க போய் உட்கார்றேன்' என சொல்லி விட்டு போய் அமர்ந்தேன்.

அங்கு போய் அமர்ந்ததும் அவளை பார்த்தேன். ஒரு நிமிடம் என்னை திரும்பி பார்த்தவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை, அவள் இருக்கையிலிருந்து எழுந்து அவள் பையை தோளில் மாட்டிக்கொண்டு நடந்து வந்து என் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். எனக்கு சற்றே இன்ப அதிர்ச்சி தான். அவள் வந்து உட்கார்ந்ததும் கேட்டேன் 'நீ எதுக்கு இப்போ அங்கிருந்து இங்க வந்தே' என்று.

'நீதான கூப்ட்ட.....' என்றாள்.

'நான் எங்க கூப்ட்டேன்.... இங்க இடம் இருக்கு நான் போய் உட்க்கார்றேன்னு தான் சொன்னேன்.....' என்றேன்.

'அப்படியா.....' என அசட்டுத்தனமாக சிரித்தாள். 'சரி விடு.....இனி திரும்ப அங்க போய் உட்கார முடியாது....' என அவள் சொல்ல இருவருக்குமே சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஷீலா ஒருமுறை எங்களை திரும்பிப்பார்த்ததாய் நியாபகம்.

"ஹ்ம், அப்றம், எப்டி போகுது உன்னோட டாப்பர் லைஃப்....' என்றாள். 

'ரொம்ப வித்தியாசமா இருக்கு, என் மேல திணிக்கப்படும் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியுமா என சந்தேகமா இருக்கு'  என்றேன்.

'ஏன்டா, அதெல்லாம் நீ பண்ணிடுவ....' என்றாள்.

'சம்பத்க்கு பயங்கர சந்தோசம் போல, நீ கேர்ள்ஸ பர்ஸ்ட் மார்க் வாங்க உடலன்னு' என்றும் கேட்டாள்.

'ஆமாம், ஆனா நான் அப்டிலாம் யோசிக்கல, அவன விடு, நீ எதுவுமே சொல்லல, வந்து பேசவுமில்ல, உனக்கு சந்தோஷமா இல்லையா? ' என்றேன்.

அவள் இதை சற்றும் எதிர்பார்க்காதவள் போல 'என்னடா இப்டி கேக்ற, நான் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்டலாம் எவ்வளவு பெருமையா சொல்லிட்ருந்தேன் தெரியமா.... சுப்ரமணி தான் க்ளாஸ் பர்ஸ்ட் னு' என வேகமாக பதிலுரைத்தாள்.

அப்பாடா என் பெயரை முதல் முறை சொல்லி விட்டாள் என தோன்றியது.

'தெரியும், சொல்லிருப்பன்னு..... சும்மா கேட்டேன்' என்றேன்.

'தெரியுதுல்ல, அப்றம் ஏன் கேக்ற' என மிரட்டும் தொனியில் கேட்டாள். 

'நீ எப்ப முதல் மார்க் வாங்க போற' என்றேன்

'எனக்கெதுக்குடா அதெல்லாம், அதான் நீ வாங்கறல்ல, போதும்' என சிரித்தாள்.

பின் வழக்கம்போல அவளின் கதைகள். இருவரும் சிரித்து பேசிக்கொண்டிருக்க வாசலில் ஃபுட்போர்ட் அடிப்பவர்கள் அவர்களின் பைகளை எங்கள் மடியில் திணிக்க, சற்று நேரத்திற்கெல்லாம் எங்கள் கழுத்து வரை பைகள். மறக்க முடியாத மற்றுமொரு பயணம்.

அன்று வீணா அவளின் வீட்டு லேண்ட்லைன் நம்பர் தந்தாள்,  வீக்கெண்ட் கால் பண்ணு என்று.  எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளுமளவு ரைமிங்காக இருந்தது நம்பர். என் வீட்டு நம்பரையும் குறித்துக்கொண்டாள். அந்த வார இறுதியில் என் பிறந்த நாள் வருகிறதென்று அவளுக்கு தெரியும். ஞாயிற்றுக்கிழமை காலை அவளிடமிருந்து ஃபோன் வந்தது. 'ஹாய், ஹேப்பி பர்த்டே.... ' நேரில் பேசுவதை காட்டிலும் கணீரென இருந்தது அவள் குரல். காதுக்குள்ளேயே வந்து அமர்ந்து கொண்டு பேசுவதை போல. 

'தேங்க்யூ.... கரெக்ட்டா ஃபோன் பண்ட்ட' என்றேன்.

'பின்ன, விட்ருவோமா.... ' என்றாள் 

'அப்றம் இன்னக்கி என்ன என்ன ஸ்பெசல்...' என்றாள் 

'பெருசா ஒன்றுமில்லை.... வழக்கம் போலதான்' என்றேன். பிறந்தநாள் எல்லாம் என் வீட்டில் ஒரு பெரிய விஷயம் எல்லாம் இல்லை, நினைவிருந்தால் இன்னக்கி உனக்கு பிறந்தநாள் என்பாள் அம்மா. அப்பாவுக்கு அதுவும் சொல்ல வராது. அம்மா சொன்னால் அப்படியா என்பார், அவ்வளவே...

'அப்றம், இன்னிக்கு என்ன ப்ளான்' என்றாள் 

'ப்ளான் ஒன்னு இருக்கு, ஆனா அதுக்கு நீ ஒத்துக்கனும்.....' என்றேன்

'என்ன....?' என்றாள் 

'நீ இன்னக்கி என் வீட்டுக்கு வரணும்...' என்றேன்.

மறுமுனையிலிருந்து பதில் வரவில்லை 

- தொடரும்

No comments:

Post a Comment