Monday, January 13, 2025

என்றென்றும் புன்னகை

பகுதி 10 - நீ வருவாய் என

அடுத்த நாள் காலை எங்களுக்கு கொடைக்கானலில் விடிந்தது. பையன்கள் எல்லோரும் சீக்கிரம் தயாராகி பஸ்ஸில் வந்து உட்கார்ந்தோம். பெண்கள் ஒவ்வொருவராக தயாராகி வந்து கொண்டிருந்தனர், எல்லோரும் அவரவர்களின் சிறந்த உடைகளை உடுத்தி வந்திருந்தனர், சில பெண்கள் மாடர்ன் ட்ரஸ் என்ற பேரில் பேண்ட் சட்டை அணிந்திருந்தனர். என் கண்கள் வீணாவிற்காக காத்திருந்தது. இன்று எப்படி வரப்போகிறாள் என்ற எதிர்பார்ப்பு சிறியதாக தொற்றிக் கொண்டது. சாதாரண நாட்களிலேயே அவளின் ட்ரெஸ்ஸிங் ஸென்ஸ் மற்ற பெண்களை விட ஒரு படி அதிகமாகத்தான் இருக்கும். வட்டக்கழுத்து சுடிதார்கள் அனிந்து வரும் பெண்கள் மத்தியில் V neck சுடிதார்களை அவள் மட்டுமே அன்றைய நாட்களில் அணிந்து வருவாள். அந்த V மறையாத வண்ணமே துப்பட்டாவும் அணிந்து வருவாள். அது சில நேரம் ஒரு தோளில் மட்டும் இருக்கும் சில நேரம் இரு தோள்களிலும் இருக்கும். கடைசியில் ஹோட்டலில் இருந்து இறங்கிய அவளின் தோற்றம் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கொஞ்சமும் தவறவில்லை. ப்ளேன் சுடிதார்தான் ஆனால் அத்தனை நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்தது. கல்லூரிக்கு உடுத்தி வரும் ஆடைகளை விட சிறந்த ஆடைகள் அவளிடம் உண்டென்பதை உடுத்தி காட்டி விட்டாள். தோழிகளுடன் சேர்ந்து வந்து பஸ் ஏறியவளை முன் சீட்டில் அமர்ந்திருந்த காஜாவும் வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டுதானிருந்தார். அவரை சற்றும் கண்டு கொள்ளாமல் அவள் இருக்கைக்கு வந்து ஒரு சிரிப்பை மட்டும் காட்டிவிட்டு அமர்ந்து கொண்டாள். வண்டி கிளம்பியது.

வகுப்பில் நடக்காதது இந்த ட்ரிப்பிலாவது நடக்குமா என்று எனக்குள் ஒரு எண்ணம். என்ன என்று கேட்கிறீர்களா... அதான் தனியே நாங்களிருவரும் பேசிக்கொள்ளும்போது எங்களுக்குள் ஏற்படும் ஒரு நெருக்கம் மற்றவர்கள் முன்பும் நிகழ வேண்டும் என்பதுதான். அது ஒரு தீரா ஆசையாக என்னுள் தொற்றிக் கொண்டது. அது நடந்தால் அது மற்றவர்கள் முன்பு என்னை கொஞ்சம் பெருமையாக காண்பிக்கும் என்கிற ஒரு மாய பிம்பம். அன்றைய நாட்களில் எல்லோரின் முன்பும் ஒரு பையனும் பெண்ணும் தனியாக தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அது அந்த பையனுக்கோர் பெருமை, அவர்கள் காதலர்களாக அல்லது வருங்காலத்தில் காதலர்கள் ஆகப்போகிறவர்களாக பார்க்கப்படுவார்கள். அந்த அளவிற்கெல்லாம் காட்டிக்கொள்ளும் எண்ணம் எனக்குள் இல்லை என்றாலும் அவளாக வந்து என்னுடன் நின்றோ, அமர்ந்தோ பேசிக்கொண்டிருந்தால் அது எனக்கு அவள் நெருக்கமானவள் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் என்கிற ஒரு உணர்வு. அப்படியொரு பிம்பத்தை உருவாக்கி விட வேண்டுமென்ற ஆசை. ஆனால் அது நானாக போய் போய் அவளிடம் பேசி வழிவதாக ஆகிவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தேன். இந்த எண்ண ஓட்டங்களுடன் நான் அமர்ந்திருக்க நாங்கள் பார்க்க வேண்டிய இடத்தை அடைந்தோம்.

அந்த இடம் ஒரு அழகான பூங்கா. பச்சைப்பசேலென புல்வெளி நிறைந்திருந்தது, ஆங்காங்கே வழித்தடங்கள். பையன்கள் எல்லோரும் ஓடிச்சென்று ஒரு சரிவான புல்தரையை கண்டு பிடித்து அதன் மேட்டிலிருந்து  தாழ்வுப்பகுதிக்கு உருண்டு வருவோம், யார் முதலில் வருவோம் பார்க்கலாம் என எல்லோரும் அந்த புல் தரையில் உருள ஆரம்பித்தோம். நான், சம்பத், கோகுல், செழியன், இன்னும் சில பேர். உருள ஆரம்பிக்கும்போது எங்களுக்கு தெரியவில்லை சரிவில் வேகம் அதிகரிக்கும், எங்களை எங்களாலே கட்டுப்படுத்த முடியாமல் போகும் என்று. உருண்டு கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு விதமான குரல். 'மச்சான் கன்ட்ரோல் போகுதுடா....' என கோகுல், 'ஆமா , ஸ்பீட் பிரேக்கர் எதாவது வரணும்...' என சம்பத், 'தல சுத்துதுடா ....' என கத்திய செழியன் ட்ராக் மாறி வேறு பக்கம் உருள ஆரம்பித்து விட்டான். ஒரு வழியாக நிலைக்கு வந்து எல்லோரும் தடுமாறி எழுந்து நின்ற போது செழியனை காணவில்லை. கொஞ்சம் தள்ளி இன்னொரு இடத்தில் அவனை சுற்றி நான்கு பேர், அவன் சட்டையைப்பிடித்து மிரட்டிக்கொண்டிருந்தனர், ஒரு பட்டு வேட்டி சட்டை போட்டிருந்த ஆள் செழியனை அடிக்க கையை ஓங்கினான். ஏதோ அசம்பாவிதம் போல என எல்லோரும் ஓடிச்சென்று அடிக்க வந்தவனை தடுத்து நிறுத்தி என்னவானது என விசாரித்த போதுதான் சம்பவம் புரிந்தது, அங்கே புதிதாக கல்யாணமான ஒரு தம்பதியருக்கு அவுட்டோர் வீடியோ ஷீட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் போல. அங்கே பட்டுப்புடவையும், நகையுமாக, கன்னத்தில் கை வைத்தவாறு மணப்பெண்ணை புல்தரையில் அமரவைத்து வீடியோ எடுத்துக்கொண்டிருக்க, வழி மாறி உருண்டு  வந்த செழியனின் இரு கால்களுக்கு நடுவே அந்த மணப்பெண் மாட்டிக்கொண்டு விட்டாள் என்று. சொல்லப்போனால் தன்னை நிறுத்த முடியாமல் உருண்டு வந்தவனை அவள்தான் நங்கூரம் போல அவன் இரு கால்களுக்குமிடையே மாட்டி நிறுத்தி இருக்கிறாள். சும்மா இருப்பானா மாப்பிள்ளை, சட்டையை மடித்துக்கொண்டு அடிக்க வந்து விட்டான். பிறகு அவர்களை சமாதானப்படுத்தி, தெரியாமல் நடந்து விட்டதென மன்னிப்பு கோரி கூட்டி வருவதற்குள் போதும் போதும் என ஆகி விட்டது. ஆனால் கடைசி ஆண்டு வரை விழுந்து புரண்டு சிரித்த சம்பவம் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும். 

அங்கிருந்து நடந்து வந்துகொண்டிருந்த போது 'சுப்பு' என ஒரு குரல், அழைத்தது சவீதா. 'எங்களை ஒரு போட்டோ எடுக்றியா' என கேமிராவை நீட்டினாள், அங்கே வீணா, சவீதாவுடன் இன்னும் இரு பெண்கள். அவர்களை இரு செடிகளுக்கு நடுவே சற்று சரியாக நிற்க சொல்லி லென்சில் ஒரு கண் மூடி பார்த்தேன். வீணா சிரிக்க ஆரம்பிக்க கரெக்ட்டாக க்ளிக்கினேன். மற்ற யாரும் என் ஃபோக்கஸிலேயே இல்லை. அந்த கேமராவின் லென்ஸ் தானாக வெளியே வந்து தன்னைத்தானே சரி செய்து கொண்டு போட்டோ எடுத்தது அடுத்த பிலிமுக்கும் அதுவே மாற்றிக் கொண்டது. 'ஆட்டோமேட்டிக் கேமராவா, நல்லா இருக்கே ... யாரோடது?' என்றேன். 'என்னோடதுதான்.... ஆக்ட்சுவலா என் அண்ணனோடது....' என்றாள் வீணா. 'நல்லாருக்கு....' என சொல்லி விட்டு அவளிடம் திரும்ப குடுத்தேன். மீண்டும் பஸ்ஸுக்குள் ஏறினதும் 'அந்த கேமராவை தறியா' என்றேன். உடனே தந்தாள். 'நான் கொஞ்சம் சீனரீஸ் எடுக்கிறேன்' என்றேன். அப்படியே அந்த உரையாடல் தொடரும் என நினைத்தேன் ஆனால் ஆவள் 'ஓக்கே....' என்று மட்டும் சொல்லி விட்டு ஜன்னலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்து விட்டாள். நான் என் இடத்தில் போய் அமர்ந்து கொண்டேன். சரி அவள்தான் உடன் இல்லை அவள் கேமராவது உடன் இருக்கிறதே என்ற எண்ணத்துடன் வண்டி நகர நகர கண்ணில் படும் சில இயற்கை காட்சிகளை க்ளிக்கிக்கொண்டிருந்தேன். சொல்லப்போனால் பிலிம் ரோலை வீணடித்துக்கொண்டிருந்தேன். 

அன்றைய இரவு ஓட்டலின் முன்பு கேம்ப் ஃபயர் வைத்தார்கள். விறகுக்கட்டைகளை கொளுத்தி சுற்றி எல்லோரும் குளிர்காய, சிறிது நேரத்திற்கெல்லாம் பாடல்கள் ஒலிக்க துவங்க, சுற்றி நின்று எல்லோரும் ஆட ஆரம்பித்தோம். ஜிதின் எனும் ஆந்திரா பையன்தான் அப்போது எங்களுக்கு டான்ஸ் மாஸ்டர், சிரஞ்சீவி ஃபேன், எந்த பாடல் போட்டாலும் உடனே ஸ்டெப் போட்டு விடுவான். நாங்கள் அதே ஸ்டெப்பை ஃபாலோ செய்வோம். அப்படியே குதூகலமாக ஆடிக்கொண்டிருந்த போது. சால்வையை சுற்றிக்கொண்டு வீணா சிரித்துக்கொண்டே இறங்கி வந்தாள். ஆடிக்கொண்டிருந்த நான் ஒரு நிமிடம் நின்றேன், எனக்கு அப்போது 'பனிவிழும் இரவு .....' பாடல் ஒலிக்க வேண்டும் போல தோன்றியது. 'மச்சி ஆட்றா....' என கோகுல் தள்ளி விட மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. நாங்கள் ஆடிக்கொண்டிருந்ததை பார்க்க ஆரம்பித்தவளின் தலை மட்டும் பீட்டுக்கேற்றார்போல ஆடிக்கொண்டிருந்தது. ஆடிக்கொண்டிருந்த நாங்கள் பெண்கள் பக்கமும் போய் ஆட இழுத்தோம், அவர்களுக்கு ஆசைதான் ஆனாலும் வாத்திகள் ஏதாவது சொல்லிவிடுவார்கள் என வர வில்லை. குதூகலமாக ஆட்டம் முடிந்து இரவு உணவு உண்டுவிட்டு அவரவர் அறைக்கு சென்றோம். ஒரு அறையில் நான்கைந்து பேர்களாவது இருந்தோம். நான், கோகுல், சம்பத், செழியன் ஒரு அறை. எங்கள் அறைக்கு பக்கத்து அறையில் ஆசிரியர்கள் அறை.... ராத்திரி தண்ணி போல... பக்கத்து அறையில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தது சுவரில் காது வைத்தால் நன்றாகவே கேட்டது. காஜா வின் குரல்தான் (குமுறல்தான்) சற்று அதிகமாக இருந்தது. 'என்னா சார் இந்த பசங்க ..... ஒருத்தனும் சரியில்ல..... பொம்பள புள்ளைங்கள ராத்திரில ஆட கூப்புட்றானுக..... இந்த பொண்ணுங்களுக்கு நாமதான சார் பாதுகாப்பு குடுக்கனும்.... நம்மள நம்பிதான வந்துருக்குதுக.....' என்றார். கம்ப்யூட்டர் வாத்தியார் 'சரி அகமது, இப்ப சாப்ட்டு படு.... காலைல எந்திச்சி பாதுகாப்பு குடுக்கலாம்....' என அவரை ஆஃப் பண்ண முயற்சி செய்து கொண்டிருந்தார். 

அடுத்த நாள் மூணார் பயணம். மூணாரை அடைந்த போது இரவாகி போனது. ஒரு ஓட்டலுக்குள் சாப்பிட போனோம். கேரளாவில் என்ன ஸ்பெஷல் என எல்லோரும் வீணாவை நோக்கி கேட்க அவள் பரோட்டாவையும் பீஃப் கரியையும் ஆர்டர் செய்து விட்டாள். நான் அப்போது நான்வெஜ் சாப்பிட மாட்டேன் என்பதால் தோசையுடன் நிப்பாட்டி விட்டேன். சாப்பிட்டு விட்டு பஸ் ஏறியவர்களுக்கு அப்போது புரியவில்லை சாப்பிட்ட பீஃப் கரி வேலையை காட்டப்போகிறதென்று. எல்லோருக்கும் அடிவயிற்றை கலக்க ஆரம்பித்து விட்டது போலும். செழியன் புலம்ப ஆரம்பித்து விட்டான் 'என்னத்த வாங்கி குடுத்த வீணா, அடக்க முடில' என அடி வயத்தை பிடித்துக்கொண்டு உருண்டு கொண்டிருந்தான். ஓட்டல் வந்ததும் பாய்ந்தடித்துக்கொண்டு கழிவறை சென்ற பிறகுதான் எல்லோரும் சகஜ நிலைக்கே வந்தனர். அடுத்த நாள் காலை அடுத்த ஓட்டலுக்குள் சென்றதும் 'என்ன செழியா.... இன்னைக்கு ஏதாவது ஆர்டர் பண்ணனுமா' என்றாள். 'அம்மா தாயே.. ஆள விடுமா' என கையெடுத்து கும்பிட்டான் செழியன்.

ஒருவழியாக ட்ரிப் முடிந்து வீடு திரும்பினோம் ஆனால் கடைசிவரை நான் நினைத்து நடக்கவே இல்லை. ஒருசில தருணங்களை நானாக அமைக்க முயற்சி செய்தாலும் அதை அவள் புரிந்து கொள்ளவே இல்லை. உண்மையில் எங்களுக்குள் அப்படி ஒரு நெருக்கம் இருக்கிறதா? இல்லை நான்தான் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறேனா என சந்தேகமே எழத் தொடங்கி விட்டது என்னுள். 

- தொடரும்

Friday, January 10, 2025

என்றென்றும் புன்னகை

பகுதி 9 - வளையோசை கல கல கலவென

சீனியர் கூப்பிட்டதும் எந்த சலனமுமின்றி உடன் சென்றாள் வீணா. கூப்பிட்டு வரச்சொன்னவர் உமேஷ் எனும் சீனியர், முதலாமாண்டு கல்லூரி ஆண்டு விழாவில் அவர் போட்ட அரசியல்வாதி வேடம் வெகுவாக கவனிக்கப்பட்டது. திறமைசாலிதான், ஆனால் அவர் பார்வை வீணாவின் மேல் விழும் என எதிர்பார்க்கவில்லை. தன்னை ப்ரபோஸ் செய்வதற்காகத்தான் சீனியர் கூப்பிட்டிருக்கிறார் என தெரிந்துதான் செல்கிறாளா என தெரியவில்லை. இன்று மீண்டுமொரு முறை அழப்போகிறாளா, இல்லை சீனியருக்கு பயந்து ஒத்துக்கொள்வாளா என ஏகப்பட்ட சிந்தனை ஓட்டம். திரும்ப வந்தவளிடம் எந்த மாற்றமும் இல்லை எப்படி போனாளோ‌அப்படியேதான் திரும்ப வந்தாள். அன்றைய தினம் முடிந்து வகுப்பிலிருந்து வெளியே கிளம்பும் நேரம் அவளிடம் கேட்டு விட வேண்டும் என முயற்சித்தேன், முடியவில்லை. வழக்கம் போல் தோழிகள் மொய்த்துக்கொண்டிருக்க அவர்களுடனே கிளம்பி விட்டாள். அவர்கள் முன்னால் செல்ல சிறிது இடைவெளி விட்டு நான் பின்னால் செல்ல, அவர்கள் தரை தளத்திற்கு செல்ல படி இறங்கியதும் சட்டென திரும்பி பார்த்தவள் அவள் மட்டும் திரும்ப வந்தாள். 

'என்ன திரும்ப வர' என்றேன் 

'கர்ச்சீஃப் மறந்துட்டேன்னு, அவங்க கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன் ' என சிரித்துக்கொண்டே கண்ணடித்தாள் 

'என்ன ஆச்சு, சீனியர் என்ன சொன்னார்' என கேட்டேன் 

'அத ஏன்டா கேக்றே.... லவ் பண்றாராம்... நீ பண்ணுவியானு ....கேட்டாருடா' என்றாள் 

'நீ என்ன சொன்ன...' என்றேன்

'நான்ல .... சிரிச்சிட்டே போங்கன்னா அதெல்லாம் பண்ண முடியாதுனு, சொல்ட்டு வண்ட்டேன்...' என்றாள்.

'ஏ...' என நான் ஆரம்பிக்கும் முன்பே 

'சரி சரி.... டைம் ஆச்சு கீழ ஃப்ரண்ட்ஸ் வெய்ட் பன்றாங்க, நான் அப்றம் பேசுறேன்' என சொல்லி விட்டு வேகமாக இறங்கி சென்று விட்டாள்.

மனதிற்குள் ஒரு சிறிய நிம்மதி.

இரண்டாம் வருடம் மாணவர்களே ஏதாவது ஒரு டாபிக்கை படித்து ஆசிரியர்களை போல பாடமெடுக்க வேண்டும். செமினார் என்று அதை சொல்லினார்கள். ஏற்கனவே சிவகாமி சில வகுப்புகள் எடுத்திருந்தாள், அவளுக்கு ஆசிரியை ஆக வேண்டும் என்பதுதான் எண்ணமாம். வித்யப்ரியாவும் சில வகுப்புகள் எடுத்திருந்தாள். ஆண்கள் பக்கம் வந்த போது எவனும் எடுக்க தயாராக இல்லை. அத்தனை பேரும் சொல்லி வைத்தாற்போல இவன்தான் டாப்பர், இவனே எடுக்கட்டும் என என்னை கை காட்டி விட்டனர். நான் எடுக்க வேண்டும் என ஆகிவிட்டது. நாம் ஒரு விஷயம் செய்ய வேண்டுமானால் அதற்கு ஏதோ ஒரு உந்துதலோ, ரெபரன்ஸோ தேவைப்படும். அப்படி என்‌எண்ணத்தில் முதலில் வந்தவர் +2 வில் Botany எடுத்த சுந்தர் சார். அளவான தேகம், தடித்த மீசை, வகிடெடுத்து வாரிய தலை, முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்து விட்டிருக்கும் விதம். போர்டில் வரையும் தெளிவான படங்கள் மற்றும் எழுத்துக்கள் என அவரின் ஒவ்வொரு குணாதிசயங்களையும் நன்கு கவனித்து வைத்திருந்தேன். அன்று அவரை ப்ரதி எடுத்தது போல அதே மாதிரி உடை உடுத்தி, முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்து விட்டுக்கொண்டு வகுப்பில் முன் நின்று Electronics ல் Band Pass Filter எனும் Topic ஐ எல்லோருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக எழுதி விளக்கினேன். அவரைப்போலவே என்னை நினைத்துக்கொண்டதினால் மேடைபயம் சற்றே குறைந்தது. அன்று பாடமெடுக்கும் போது நான்கு பேரின் மீதுதான் என் பார்வை இருந்தது. முதல் வரிசையில் அமர்ந்திருந்த கோகுல், பெண்கள் பக்கம் முதல் வரிசையில் இருந்த சிவகாமி, இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்த வீணா, ஆண்கள் பக்கம் இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்த சம்பத். நான்கு பேருமே நன்கு கவனித்து எழுதிக்கொண்டிருந்தனர். எடுத்து முடித்ததும் வகுப்பே கை தட்டியது. ஆசிரியரும் குட் ஜாப் என்றார். 

இடைவேளை வந்ததும் சிவகாமி மட்டும் வந்து 'நன்கு புரிந்தது சுப்ரமணி' என்று சொன்னாள். 'தேங்க் யூ, சிவகாமி' என்றேன். அவள் சென்றதும் கோகுலும், சம்பத்தும் வந்தனர். 'கலக்கிட்டான்ல மச்சி ' என்றான் கோகுல் சம்பத்தை பார்த்து 'இந்த வாத்திங்கெல்லாம் தேவையே இல்லை, இவனே போதும்' என்றான் கோகுல். 'ஆமாமா.... என்னென்னமோ திறமைகள் இருக்கு உள்ள' என்றான்‌ சம்பத். பிறகு கோகுல் சென்று விட, சம்பத் மட்டும் தனியே பேச ஆரம்பித்தான். 'நானும் பாத்துட்டு தான் இருந்தேன், உன்னையே வச்ச கண்ணு வாங்காம அப்படி பாக்கிறா.....' என்றான்.

'யாருடா....?' என்றேன்.

'அதான் உன்‌ கேரளா‌ ஃப்ரெண்ட்டு..... ஒன்னும் சரியில்லடா சூப்பரு.... பாத்துக்கோ' என்றான்‌ நக்கலாக.

முக்கியமான மூன்று பேரும் சொல்லியாகி விட்டது. நான்காவது ஆளை காணவேயில்லை. சில எதிர்பார்ப்புகள் இப்படிதான் ஏமாற்றம் தரும்.

அடுத்த நாள் காஜா அகமது இரண்டாம் வருடத்துக்கான டூர் அறிவித்தார். குற்றாலம், கொடைக்கானல் மற்றும் மூணார். வீட்டில் சொன்னேன் முதல் மதிப்பெண் வாங்கி காட்டியதாலோ என்னவோ அப்பா ஒத்துக் கொண்டார். டூர் தொடங்கியது. பஸ்ஸில் பாடல்கள் ஒலிக்க ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக பயணம் தொடங்கியது. குற்றால அருவியில் குளிக்க எல்லோரும் இறங்க தயாராகி கொண்டிருந்தோம். ஆனால் எங்களுக்கு முன்பே வாத்தியார்கள் குளிக்க சென்று விட்டனர். சட்டை பேண்ட்டை கழற்றி விட்டு ஷார்ட்ஸ் மட்டும் போட்டுக்கொண்டு கம்பீரமாக குளிக்கச்சென்ற காஜா அகமது அருவியின் நீர் வேகத்தையும் குளிரையும் தாங்க முடியாமல் சீக்கிரமே ஓடி வந்து விட்டார். '"ரொம்ப குளிருதுடா, பாத்து குளிங்க... பி கேர் ஃபுல்" என முகத்தை கெத்தாக வைத்துக்கொண்டு சொன்னவரின் கழுத்துக்குக்கீழே சகலமும் ஆடிக்கொண்டிருந்தது. 

குற்றாலம் முடிந்து கொடைக்கானல் மலை மேல் ஏறத்துவங்கிய போது நல்ல டேன்ஸ் பாடல்கள் போட்டு இருபக்க இருக்கைகளின் இடையே இருக்கும் இடைவெளியில் நண்பர்கள் ஆடத்தொடங்கி விட்டனர். ஆட்டத்தின் நடுவே ஆசிரியர்களையும் ஆட கூப்பிட்டனர். காஜா நான் போடுகிறேன் பார் ஸ்டெப் என கெத்தாக எழுந்து வத்தார். அப்போதே அவரை தாக்க ஒரு திட்டம் போட்டோம். சம்பத் மட்டும் அவர் ஒரு ஆண் வாத்தியார் என்பதனால் கொஞ்சம் கரிசனம் காட்டினான். ரமணாவில் ஒரு மாணவன் சொல்வது போல் 'கொல்லும்போது வலிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்' என்பது போல் சொன்னான். பஸ்ஸின் குலுக்கலில் இரு பக்க கம்பிகளையும் பிடித்து நடந்து வந்து பசங்களுக்கு நடுவே நின்று ஆரம்பித்தவர் பஞ்சாபி பல்லேலக்கா போன்று இரு கைகளையும் உயர்த்தி ஆட ஆரம்பித்தார். அப்போது சொல்லி வைத்தார் போல மலையில் ஒரு வளைவு வர, பஸ்ஸில் எல்லோரும் சரிய, தீனா எனும் ஒரு மாணவன் அவர் தோளில் சாய்வது போல தள்ளி விட்டான். நிலை தடுமாறி கீழே விழுந்தர் மீது நின்று கொண்டிருந்த எல்லோரும் மிதித்து தள்ளி விட்டனர். தீனா 'கழுத்திலயே மிதிச்சிறட்டுமா' என்றான். 'போதும் பாடிய தூக்குங்கடா' என்று எல்லோரும் தூக்கி விட மனுசன் தலை கலைந்து, சட்டை கசங்கி எழுந்து நின்றார். 'சாரி பஸ் சரிந்ததனால இப்டி ஆயிடுச்சு ' என அவரே சொல்லிவிட்டு போய் அவர் இருக்கையில் அமர்ந்து கொண்டார். 

இரவு சாப்பிட்டு விட்டு மீண்டும் பஸ்ஸில் ஏறிய போது. வீணா அமர்ந்திருந்த சீட் வரிசையிலேயே அவளின் இடது புறமிருந்த சீட்டிலேயே அமர்ந்து கொண்டேன். இரு சீடடுக்குமிடையே நடந்து செல்லும் இடைவெளி இருந்தது. இரவு எல்லோரும் தூங்கப்போகும் நேரமென்பதால் ராஜா கேசட் போட்டனர். முதல் பாடலே 'வளையோசை கல கல கல வென....' அவள் தூங்குவதற்காக இருக்கையை பின்னால் சாய்த்து தோளில் சிறிய தலையணை வைத்து உறங்க ஆரம்பித்தாள். அவள் முகம் என்னை நோக்கியவாறு இருந்தது. பாடல் முடிந்து அடுத்த பாடல் வந்தது. சட்டென எழுந்தவள் 'ஏய்.... அந்த பாட்ட திரும்ப போடுங்க.... வளையோசை பாட்டு கேட்டு ரொம்ப நாள் ஆச்சு' என சொல்லி விட்டு.... மீண்டும் கண் மூடினாள்.  பஸ்ஸில் விளக்குகள் அணைக்கப்பட்டது. அவள் உறங்கலை காண எனக்குள் ஒரு ஆர்வம். அவள் புறம் திரும்பி அவளின் கண்மூடிய முகத்தை நான் காணத்துவங்க மீண்டும் ஒலித்தது 'வளையோசை கல கல கலவென.......!!!!'

- தொடரும்

Friday, January 3, 2025

என்றென்றும் புன்னகை

பகுதி 8 - காற்றே என்‌வாசல் வந்தாய்

சிறிது நேரம் மௌனம் காத்தவள் 'சரி, வரேன்' என்றாள்.

அவள் எந்த பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும் என சொல்லி விட்டு அவளை கூட்டிக்கொண்டு வர பஸ் ஸ்டாப்பிற்கு சென்றேன். பஸ்ஸிலிருந்து இறங்கியதும் ஒரு க்ரீட்டிங் கார்டையும் ஒரு சிறு கிஃப்ட்டும் தந்தாள். பேசிக்கோண்டே வீடு வரை வந்தோம். என் கல்லூரியில் உடன் படித்தவர்களில் முதலில் என் வீட்டுக்கு வந்தது அவளாகத்தான் இருக்கும். சிரித்த முகத்துடனும், சிறு கூச்சத்துடனும் சிறந்த ஒரு வரவேற்பினை எதிர்பார்த்துதான் வீட்டுக்குள் வீட்டுக்குள் காலடி வைத்தாள். என் வீட்டிலோ எல்லாருக்குமே ஆவரேஜ் எக்ஸ்ப்பிரஷன்தான் இருக்கும். 

'என் க்ளாஸ்மேட் இங்க தண்டையார்பேட்டையில் தான் இருக்கிறாள்' என அறிமுகப்படுத்த, 

'அப்படியா, இங்க இருந்து டெய்லி போய்ட்டு வரியாமா' என அம்மா ஆரம்பிக்க, 

'இல்ல ஆண்ட்டி நான் ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறேன்' என அவள் பதில் சொல்ல, தொடங்கி விட்டது அவர்கள் இருக்குமான பரிபாஷனை. அதன் பிறகு நான் பேசியது ஓரிரு வார்த்தைகள் தான் இருக்கும். அவளின் வீடு எங்கிருக்கிறது என  ஆரம்பித்து கிட்டத்தட்ட அவளின் பூர்வீகத்தையே அலசி ஆராய்ந்து கொண்டிருந்தாள் அம்மா. சொல்லப்போனால் அவளுக்கும் எனக்கும் ஏதாவது இருக்குமோ ஒரு சிறு விசாரணைக்கமிஷன் தான் நடத்திக்கொண்டிருந்தாள் அம்மா. அவளும் சலிக்காமல் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். அதுவரை தோழி என்றோ, உடன் படிக்கிறவள் என்றோ எந்த பெண் பிள்ளையையும் வீட்டுக்கு கூட்டி வந்ததில்லை நான். அதனாலேயே அவ்வளவு விசாரிப்புகள். அன்று அண்ணன் வீட்டிலில்லை, அப்பாவும் 'வாம்மா....' என்று மட்டும் சொல்லிட்டு வெளியே கிளம்பி விட்டார். அவள் குடுத்த கிஃப்ட்டை பிரித்துப்பார்த்தேன், சிறிய கண்ணாடி பெட்டிக்குள் செயற்கை மலர்க்கொத்து இருந்தது, மேலே ஹேப்பி பர்த்டே என பொறிக்கப்பட்டிருந்தது. அவள் கொடுத்த க்ரீட்டிங் கார்டை வீட்டில் காட்ட வில்லை, அதன் அட்டைப்படம் கொஞ்சம் ரொமாண்டிக் ஆக இருந்தது. ஒரு 10 வயது மதிக்கத்தக்க ஃப்ராக் போட்ட வெள்ளைக்கார சிறுமி சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருக்க எதிரில் அதே 10 வயது மதிக்கத்தக்க டவுசர் டீசர்ட் போட்ட வெள்ளைக்கார சிறுவன் அவள் எதிரில் அவள் முகத்தை நோக்கியவாறே அதே சுவற்றில் தன் ஒரு கையை ஊன்றிக்கொண்டு நின்று கொண்டிருந்தான். அவர்களிருவருக்கும் மேலே ஆங்கிலத்தில் பர்த்டே மெசேஜ் இருந்தது. 

ஒரு ஒருமணி நேரம் இருந்திருப்பாள். பிறகு கிளம்பினாள். நான் கொண்டு போய் விட்டு விட்டு வருகிறேன் என கூட சென்றேன். 'உன் வீட்டிலிருந்து பஸ் ஸ்டாப்புக்கே இவ்வளவு தூரம் இருக்கே, டெய்லி இவ்வளவு தூரம் நடந்து வந்துதான் பஸ் ஏறுவியா' என்றாள்.

'ஆமாம்' என்றேன். 

'உங்க அம்மா நல்லா பேசுறாங்களே, நீ ஏன் ரொம்ப யோசிச்சு யோசிச்சு பேசுற...' என்றாள் 

'எனக்கு அப்டிதான் பேச வருது... அதுவுமில்லாமல் நாம யோசிக்காம பேசி எதுவும் தப்பா ஆயிடக்கூடாது என்பதில் கொஞ்சம் கவனமாக இருப்பேன்....' என்றேன்.

பஸ் ஸ்டாப்பை நெருங்கியதும் 'நான் உன் வீட்டுக்கு வந்ததை காலேஜில் சொல்ல வேண்டாம், அப்றம் சும்மாவே உன்ன ஓவரா ஓட்டுவாங்க, இது தெரிஞ்சா அவ்வளவுதான் கேக்கவே வேணாம்..... ஓக்கேயா....' என்றாள் 

'நானும் அதைத்தான் உன்னிடம் எப்படி சொல்வதென யோசித்துக்கொண்டிருந்தேன்....' என்றேன்

சிரித்துக்கொண்டே 'பி....ஃப்ராங்க்.....' என்றாள் 

பஸ் ஸ்டாப் வந்தது, மெயின் ரோட்டை கடக்கையில் அவளை அறியாமலே என் கையை பிடித்தாள், கடந்ததும் சட்டென கையை எடுத்து விட்டாள். 'பஸ் ஏறி கூட வருவியா, இல்ல இங்கியே கழட்டி விட்டுடுவியா.... ' என்றாள் 

அவள் கேட்டுக்கொண்டிருக்கும் போதே பஸ் வந்துவிட நான்தான் முதலில் ஏறினேன். சிரித்துக்கொண்டே பின்னால் ஏறினான். இடம் இல்லாததால் எனக்கு முன் சீட்டில் அமர்ந்தாள், ஆனால் திரும்பியவாறே என்னுடன் பேசிக்கொண்டேதான் வந்தாள்.

'எப்படி கேட்டதும் வர ஒத்துக்கிட்ட....' என்றேன்.

'வர ஐடியா இல்லதான், ஆனா பர்த்டே அதுவுமா உன்ன டிஸ்அப்பாயின்ட் பண்ண வேணாமேன்னுதான், ஒத்துக்கிட்டேன்..... இப்போ ஹேப்பி தான நீ....' என்றாள்

'கண்டிப்பா..... தேங்ஸ் ஃபார் கமிங்' என்றேன்.

சிரித்தாள். அவள் பஸ்ஸ்டாப் வந்தது இருவரும் இறங்கினோம். 'வா வீட்டுக்கு....' என்றாள். 'இல்ல இன்னொரு நாள் வரேன்...' என சொல்லி விட்டு மீண்டும் பஸ் பிடித்து வீட்டுக்கு வந்து விட்டேன்.

அடுத்த நாள் கல்லூரி வந்ததும் நானும் சம்பத்தும் இன்னும் சில நண்பர்களும் கேண்டீனில் டீ குடித்துக்கொண்டிருந்தோம். வேக வேகமாக கேண்டீனுக்குள் வந்த கோகுல் நேராக சம்பத்திடம் 'மச்சி, மேட்டர் தெரியுமா, நேத்து சூப்பர் வீட்டுக்கு வீணா வந்துருக்காளாம்..... பர்த்டே ஸ்பெசல் போல' என ஆரம்பித்து வைத்து விட்டான்.

ஏற இறங்க பார்த்தான் சம்பத், 'காலைல பஸ்ல எங்கூடதான வந்தான், வாய தொறந்தானா பாத்தியா.....' என்றான்.

நான் யாரிடமும் சொல்லவில்லை, விஷயம் எப்படி வெளிய போச்சுன்னும் தெரியலை. அவள் மீது கோபம் வரவில்லை, அவள் ஹாஸ்டல் தோழிகள் வேலையாகத்தான் இருக்கும் எனும் புரிதல் மட்டும் வந்தது. 

கேண்டீனிலிருந்து வகுப்பிற்குள் வந்ததும் 'அப்றம் சும்மாவா வந்துருப்பா..., கிஃப்ட் எதாவது தந்துருக்கனுமே' என்றான் சம்பத்

பைக்குள் இருந்து அவள் குடுத்த க்ரீட்டிங் கார்டையும் கிஃப்ட்டையும் மெல்ல வெளியே எடுத்தேன். பட்டென்று பிடுங்கி பார்த்தான் சம்பத், பின் கோகுல்..... பின் அந்த கார்டை பார்த்தான் செழியன் , வகுப்பில் அவனைப்போலொரு விஷமி கிடையாது. வீணாவின் லேப் மேட் வேறு. எந்நேரமும் ஏதாவதொன்றை சொல்லி வகுப்பையே சிரிக்க வைத்து விடும் கல கல பார்ட்டி. கிரீட்டிங் கார்டை வாங்கினவன் நேரே ஓடிச்சென்று வகுப்பிற்கு முன் சென்று அந்த கிரீட்டிங்கார்டின் அட்டைப்படத்தை காட்டி 'இது வீணா, இது சுப்ரமணி.....' என சத்தமாக சொல்லி  எங்கள் இருவரையுமே கலாய்க்க ஆரம்பித்து விட்டான். அப்போது வீணாவும் வகுப்பிற்குள் இருந்தாள். 'டேய் சும்மா இருடா....' என சிரித்துக்கொண்டே அவனை நோக்கி சொன்னாள், நானும்தான். அவன் விடுவதாய் இல்லை. வகுப்பிற்குள் அப்போது நிறைய பேரும் இல்லை. இருந்த சிலரும் கமுக்கமாக வாய் மூடி சிரித்துக்கொண்டிருந்தனர். கோகுல் 'ஹா...ஹா...ஹாஹா' என சத்தம் போட்டே சிரித்தான். சம்பத் இவனபோய் டாப்பர்னு தூக்கி வச்சி கொண்டாடினனே, மறுபடியும் எனக்கு ஆப்பு வச்சிட்டானேனு என புலம்ப ஆரம்பித்து விட்டான். ஆக மொத்தம் ரகசியமாய் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்த சம்பவம் கல்லூரி முழுவதும் போஸ்டர் அடிக்காத குறையாக பரவி விட்டது.

ஸ்டாஃப் ரூமிலிருந்து என்னை வர சொல்லி இருந்தார்கள். முதல் மார்க் மாணவன் என்பதனால் நீதான் க்ளாஸ் ரெப்ரசென்டேடிவ் பதவி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்கள். அதற்கெல்லாம் ஒரு தனி தகுதி வேண்டும் என அப்போது எனக்கு தெரியவில்லை, ஏற்றுக்கொண்டேன். பெண்கள் பக்கம் சிவகாமி. அப்போது புதிதாக ஒரு வாத்தி வந்து சேர்ந்திருந்தார். காஜா அகமது அவர் பெயர். எலும்பும் தோலுமான தேகம். இடுப்பில் நிற்காத பேண்ட். தொள தொள முழுக்கை சட்டை,  ஏற்கெனவே வழுக்கை விழுந்திருந்த அரை மண்டை, முன் பக்கம் மட்டும் கொஞ்சம் முடி. பார்க்கும் போதே எரிச்சல் வரும் முகத்தோற்றமும், பேச்சும், நடவடிக்கைகளும். நீங்கள் எல்லாம் இன்ஜினீயரிங் படிப்பதற்கே லாயக்கில்லை, யாருக்கும் இங்கே பெரிய அளவில் அறிவில்லை என மட்டம் தட்டி மட்டும்தான் பேசுவார். பெண்கள் தரப்பில் கூட அவர் மீது ஒரு வித வெறுப்புணர்வுதான் இருந்தது. மனதார யாரையும் பாராட்ட மாட்டார். நான் முதல் மார்க் வாங்கிய போது கூட கடமைக்கு கை குடுத்து விட்டு இதெல்லாம் ஒரு மார்க்கா.... அண்ணா யூனிவர்சிட்டி போய் பாரு எல்லாம் எவ்வளவு மார்க் வாங்குறாங்கன்னு தெரியும் என நக்கலாகவே பேசினார். 

நான் ரெப்ரசென்டேடிவ் ஆனதும் முதல் பஞ்சாயத்து என அவரிடம் போய்தான் நின்றேன். கல்லூரி பஸ்ஸில் மாலை பயணத்தின் போது நாங்கள் பாட்டு பாடிக்கொண்டும், தாளம் போட்டுக்கொண்டும் ஜாலியாக போவது வழக்கம். அன்று ஒரு நாள் அப்படி சென்ற போது அவர் பஸ்ஸில் இருந்திருப்பார் போல..... 'என்னடா பாட்டு பாடறீங்க பஸ்ஸுல.... கட்டிப்புடி கட்டிப்புடிடா .... கண்டபடி கட்டிப்புடிடானு பாட்டு பாடறீங்க ..... பஸ்ஸுல அத்தன பொண்ணுங்க வேற இருக்காங்க..... ஒரு மேனஸ் இல்ல .... ' என பெண்கள் குல காவலன் போல ஏகத்துக்கும் பொங்கிக்கொண்டிருந்தார். உள்ளுக்குள் சிரிப்பை அடக்க முடியா விட்டாலும் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டிருந்தேன். அப்போது உள்ளே வந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் வாத்தியார் (கொஞ்சம் ஜாலி டைப்) 'என்ன ப்ரச்சன சார்' என கேட்க, காஜா அகமது எங்களிடம் சொன்னதையே அவரிடமும் சொல்ல.... ' இதெல்லாம் ஒரு ப்ரச்சனையா சார்.... நானும்தான் அன்னக்கி பஸ்ஸுல இருந்தேன்.... பொண்ணுங்களே அத ஜாலியா என்ஜாய் தான் சார் பண்ணிட்ருந்தாங்க.... இதப்போய் பெருசா பேசிகிட்டு .... போங்கப்பா க்ளாஸுக்கு' என என்னையும் என்னுடன் வந்த சில நண்பர்களையும் அனுப்பி விட்டார். செம பல்பாகி போனது காஜா வுக்கு. நான் வெளியே போகும்போது திரும்ப என்னை கூப்பிட்டவர் 'போய், வீணாவ என்ன வந்து பாக்க சொல்லு' என்றார்.

அவ்வப்போது ஸ்டாஃப் ரூமுக்கு வீணாவை கூப்பிட்டு வைத்து பேசுவது வழக்கமாக இருந்தது அவரிடம். வகுப்பில் அவளையே கேள்வி கேட்பது, தப்பாக பதில் சொன்னால் சாக்பீஸை தூக்கி செல்லமாக அடிப்பது என அவ்வப்போது சில சில்மிஷ வேலைகளை செய்து கொண்டிருந்தார். ஒருநாள் ரெக்கார்ட் நோட்டுகளை கலெக்ட் செய்து ஸ்டாஃப் ரூமில் குடுக்க சென்ற போது அவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு வீணாவை எதிரே நிற்க வைத்து பேசிக்கொண்டிருந்தார். நான் நோட்டுக்களை வைத்து விட்டு நேரே அவரிடம் சென்றேன். 'சார், இது உங்க பீரியட் நீங்க க்ளாஸுக்கு வரணும்' என்றேன். திமிராக என்னை பார்த்தவர் 'தெரியும், போ.... வரேன்' என்றார். திரும்பும் போது வீணா வை பார்த்து நான் கண் காண்பிக்க புரிந்து கொண்டவளாய் என்னுடனேயே வெளியே வந்து விட்டாள். 

'எதுக்கு அந்தாள் கிட்ட சும்மா போய் பேசிட்ருக்க....' என்றேன். 

'நான் என்னடா பண்றது....., சும்மா கூப்ட்டு வச்சி பேசிட்டே இருக்கான். சார் ஆச்சே, எப்டி , அவாய்ட் பண்றதுன்னு தெரில..... ' என்றாள். 

'அப்டி என்னதான் பேசுறான் உங்கிட்ட....' என்றேன்.

'ஒன்னுமே இல்லடா...சும்மா வெட்டியா எதாவது, உங்க ஊர்ல என்ன பேமஸு, நேந்திரம் சிப்ஸ் எப்படி பன்றாங்க, கதகளி ஆடத்தெரியுமா, ஊர்க்கார பையனுக்கு வேல வேணும் உன் அண்ணன் கிட்ட சொல்லி வாங்கித்தர சொல்லுன்னு ..... கண்டதும் பேசுறான்டா' என்றாள்.

அவர் மீதான வெறுப்பு இன்னும் அதிகமானது. சந்தர்ப்பம் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்துக்கொண்டேன்.

அந்த நேரத்தில் சில சீனியர்கள் ஜூனியர் பெண்களுக்கு கொக்கி போட முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஷீலாவுக்கும் ஏற்கெனவே ஒரு சீனியர் ப்ரபோஸ் செய்திருந்தான். ஷீலா யெஸ் சொல்ல வில்லை என்றாலும் நோ சொல்லவில்லை. எவனாவது ஒரு சீனியர் எங்கள் வகுப்பிற்குள் வருவான் குறிப்பிட்ட ஒரு பெண்ணை கைகாட்டி கூட்டிப்போவான், அப்படி போனாலே அந்த பெண்ணுக்கு எவனோ ஒரு சீனியர் ப்ரபோஸ் செய்யப்போகிறான் என்று அர்த்தம். அன்று ஒருநாள் அப்படித்தான் வகுப்பிற்குள் வந்து வீணாவை கூப்பிட்டான் ஒரு சீனியர்.

- தொடரும்