Monday, September 8, 2025

என்றென்றும் புன்னகை

பகுதி 15 - பிரிவோம் சந்திப்போம்

சற்று நேரம் யோசித்த பின் 'சரி நடந்தது நடந்து போச்சு, இனி நாம காலேஜ்ல பேசிக்க வேணாம், வீக்கென்ட்ல போன்ல மட்டும் பேசிக்கலாம்.' என்றாள்.

'இது சரியா வருமா?' என்றேன்.

'அது தெரியல, ஆனா இப்போதைக்கு இதான் நல்லதுன்னு தோனுது' என்றாள்.

'சரி, நீ எப்படி சொல்றியோ அப்படியே இருக்கட்டும் ' என்றேன்.

'கொஞ்ச நாள்ல எல்லாரும் இதை எல்லாம் மறந்திடுவாங்கடா, அவங்களுக்கு வேற ஏதாவது ஹாட் டாப்பிக் கிடைச்சிடும், நம்மள மறந்திடுவாங்க, அப்றம் நாம பழைய மாதிரி பேசிக்கலாம்' என்றாள்.

நாங்கள் முடிவு செய்ததை போல அந்த வாரம் முழுதும் கல்லூரியில் பேசிக்கொள்ளவே இல்லை. இருவரும் ஒரே நேரத்தில் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவும் இல்லை. தனித்தனியாக வேண்டுமானால் பார்த்துக் கொண்டிருக்கலாம். அந்த வாரத்தை மிக கஷ்டப்பட்டுதான் நகர்த்தினேன். வெள்ளிக்கிழமையும் வந்தது. அன்று மாலை கிளம்பி வீட்டுக்கும் சென்று விட்டேன். சனிக்கிழமை காலை நான் எழுந்திருக்கும் முன்னரே டெலிஃபோன் ஒலித்தது. படுக்கையிலிருந்து பாய்ந்து சென்று எடுத்தேன் அவளாகத்தான் இருக்குமென்று. அவளேதான். அடக்கி வைத்திருந்த காத்திருப்பை அவிழ்த்து விட்டதை போல கலகலவென இருந்தது அவள் பேச்சு. அந்த வாரம் முழுக்க நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் பகிர்ந்து கொண்டோம். அந்த அழைப்பு எத்தனை மணிநேரம் தொடர்ந்தது என தெரியாது, இடையில் சாப்பிட மட்டும் சென்று பின் மீண்டும் தொடர்ந்தது. வீட்டில் என்னை கடந்து செல்லும் அம்மாவும் அப்பாவும் ஒரு சந்தேகப்பார்வை வீசாமல் இல்லை. அதையெல்லாம் நான் கண்டுகொள்ளவும் இல்லை. அன்று அவ்வளவு நேரம் பேசி முடித்த பிறகும் பேச இன்னும் ஒரு சில விஷயங்கள் மிச்சமிருப்பதை போல தோன்றியது. இந்த உணர்வுகளெல்லாம் பின்னாளில் பாடல் வரிகளாக வருமென்று தோன்றவில்லை. சில வாரங்கள் இப்படியேதான் தொடர்ந்தது. 

அடுத்த செமஸ்டர் தேர்வு வந்தது. இம்முறை ஏதோவொன்று என்னை அதீதம் உழைக்க வைத்தது. நன்றாகவே எல்லா தேர்வுகளையும் எழுதினேன். கடந்த சில முறை முதல் மார்க் வாங்கிய சிவகாமியை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதல் மார்க் வாங்கி விட்டேன். மறுபடியும் பாராட்டுக்கள், வாத்தியார்களின்‌ கைகுலுக்கல்கள். கல்லூரி விழாவில் பாராட்டு சான்றிதழ் வாங்குதல் என இருந்தபோது என் மீதான எல்லோருடைய பிம்பமும் மீண்டும் மாற ஆரம்பித்து. அந்த கடித சம்பவத்தின் போது ஏளனமாக பார்த்த சில சீனியர்களும் இப்போது எதுவுமே சொல்ல வழியின்றி என்னை கடந்து சென்றனர். அவர்கள் முன் கொஞ்சம் கெத்தாகவே நடந்து சென்றேன். இந்த சம்பவத்தின் மூலம் அப்போது நான் உணர்ந்து கொண்டது ஒன்றுதான், நம் அந்தரங்க உணர்வுகளை வைத்து நம்மை கேலியும் கிண்டலும் செய்பவர்களில் வாயை மூட வேண்டுமானால் அவர்கள் முன் நம்மை நிரூபிக்க வேண்டும், அவர்களால் முடியாததை நாம் செய்து காட்ட வேண்டும். அப்போதுதான் நம் உணர்வுகளும் மதிக்கப்படும். இம்முறை நான் அதை செய்தது அவளுக்காக, ஆனால் அது அவளுக்கே தெரியாது. 

வீணாவும் நானும் எந்தவித முன்முடிவும் இல்லாமல் எதார்த்தமாகவே கல்லூரிக்குள் மீண்டும் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம். ஒருநாள் மாலை பேசிக்கொண்டிருந்த போது யதேச்சையாக 'இன்று நாம் கோவிலுக்கு போகலாமா?' என கேட்டேன். 'ஓ போலாமே....' என்றாள். சென்ற முறை நண்பர்களுடன் சென்ற போது அவளுடன் பேசமுடியாமல் விட்ட குறையை தீர்க்கத்தான் இது. இருவரும் கல்லூரியிலிருந்து பஸ் ஏறி வந்து அவரவர் வீட்டுக்கு சென்று பையை வைத்து விட்டு கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். கோவிலுக்குள் நுழைந்தோம். இருவருக்குமே பெரிய பக்தி எல்லாம் கிடையாது. கோவிலை சுற்றி வந்து மூலவரை தரிசனம் செய்து விட்டு வெளியே அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அங்கு வலம் வந்து கொண்டிருந்த மயிலின் அழகை ரசித்தோம், சில குரங்குகளை கண்டு நகர்ந்தோம், அகல் விளக்கு ஏற்றினோம். திரும்பி அமர்ந்திருக்கும் ஒரு சாமி சிலையின் முன் விரல் சொடுக்கினோம். பொரி வாங்கி தெப்பக்குள மீன்களுக்கு இரையளித்தோம், மாலையிருள் சூழ ஆரம்பித்திருந்தது. இருவரும் வெளியே வந்தபோது சில்லென காற்று வீச ஆரம்பித்திருந்தது. 

'நீ என் ரூமுக்கு வந்ததில்லல்ல, வாயேன் இன்னைக்கு' என்றாள்.

'ஓ வரேனே....' என்றேன் சற்றும் யோசிக்காமல்.

இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்த போது நேரம் நன்றாகவே கருத்திருந்தது. தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்தன. கூட நடந்து வந்தவள் கைகளை கட்டிக்கொண்டு ஒரு கணம் நின்றாள். கண்களை மூடி தன் முகத்தை மேல் நோக்கி உயர்த்தினாள். நான் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க மேலே இருந்து வந்த ஒரு நீர்த்துளி அவள் நெத்தியில் பட்டு தெறித்தது. நான் யோசிப்பதற்குள் அடுத்தடுத்த மழைத்துளிகள் எங்கள் மீது விழ ஆரம்பித்தன. 

'ஹேய்... மழை வந்துடுச்சு.... குடை வேற எடுத்துட்டு வரலியே... ' என்றேன்.

'குடையா... அது எதுக்குடா.... மழைல நனையுறது எவ்ளோ நல்லாருக்கும் தெரியுமா....' என்றவள் தன் இரு கைகளையும் விரித்தவாறே என்னை கடந்து முன் சென்றாள். அவளின் துப்பட்டா அவளின் தோளிலிருந்து முழங்கை வரை பரவியிருந்தது. அது முழுதும் நனைந்து நுனியில் சொட்டிக்கொண்டிருந்தது. கைகள் விரிந்தவாறே இருக்க நனைந்து கொண்டே ஒரு சுற்று சுழன்றாள். தெருவிளக்கின் ஒளி வீச்சில் மழைத்துளிகள் வீழ்வது தெளிவாக தெரிந்தது, இறங்கி வந்த மழைத்துளிகள் அவள் மீது பட்டு வழிந்தோடி தரையில் தஞ்சமடைந்தது. இதையெல்லாம் நனைந்தவாறே நானும் ரசித்துக்கொண்டிருந்தேன். அதுவரை மழை வந்தாலே நனைந்து விடாமல் இருக்க ஒதுங்குமிடம் தேடி ஓடிய எனக்கு முதல் முறை நின்று நனைய தோன்றியது. அந்த மழை சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. ஆனால் எங்களை முக்கால்வாசி நனைத்திருந்தது.‌ அவள் இவ்வளவு நேரம் நனைந்து கொண்டிருந்தது அவள் வீட்டுக்கு முன்னால் தான் என்பது அப்போது எனக்கு தெரியவில்லை. 'இதான் நாங்க தங்கியிருக்கும் வீடு... உள்ள வா' என கூட்டிச்சென்றாள். மூன்று மாடி வீட்டில் மூன்றாவது மாடியில் இவர்களின் அறை. உள்ளே ஈரமாக சென்றவளை கண்டதும் துண்டை எடுத்துக்கொண்டு வந்தாள் சுனிதா. பின்னால் நான் இருந்ததை சிறிது நேரம் கழித்து தான் கவனித்தாள். 'சுப்ரமணி நீயா.... வா வா.... வெல்கம் டு அவர் ரூம்.... அடிப்பாவி நீ நனைஞ்சதுமில்லாம இவனையும் சேத்து நனைச்சிட்டியா.... மொத வாட்டி கூட்டிட்டு வர இப்டியா நனைய விட்டு கூட்டிட்டு வருவ....' என்று எனக்கொரு துண்டை எடுத்து வர‌ போனாள் சுனிதா. அவளின் எல்லா பேச்சுக்கும் குறும்புத்தனமான சிரிப்பு மட்டும் தான் பதிலாய் இருந்தது வீணாவிடம். அவள் அறையிலிருந்த மற்ற இரண்டு பெண்களையும் சந்தித்து விட்டு பரஸ்பரங்கள் விசாரித்து விட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

வீக்கென்ட் போன் கால்களில் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் வந்தது. அதில் கல்லூரிக்குள் நிகழ்ந்த பல காதல்களும் அடக்கம். அவனும் அவளும் என பல ஜோடிகளைப்பற்றி பேசினோம். 

'எப்படி எந்த நம்பிக்கையில் இவர்களெல்லாம் காதலிக்கிறார்கள், அதுக்கும் ஒரு தைரியம் வேணும்ல' என்றாள்.

'அது தோணும், தனக்கான ஒருவரை கண்டு விட்டால் காதல் தானாகவே மலர்ந்து விடும்' என்றேன்.

'உனக்கான ஒருவன் வந்தால் நீ காதலிக்க மாட்டாயா?' என்றேன்.‌ உண்மையில் காதலைப்பற்றி அவள் பார்வை என்ன என தெரிந்து கொள்ளவே கேட்டேன்.

'ஐயோ! நானா.... வாய்பே இல்ல, எங்கப்பா எந்தா மோளே ன்னாலே போய் கால்ல விழுந்துடுவேன். என் முத்தஷி (பாட்டி) லாம் ஒரு பார்வை பாத்தாலே போதும், ஓடி போய் ஒளிஞ்சிடுவேன்' என்றாள் 

அவளின் மனநிலை ஒருவாறு புரிந்தது. இங்கே காதலிப்பவர்கள் எல்லோரும் தங்களிடம் இல்லாத ஏதோ ஒன்றை தன் துணையிடம் எதிர்பார்க்கிறார்கள். ஒரு துணைக்கான தேவை அவர்களுக்கு எப்போதும் இருக்கிறது. அது தன் தனிமையை மறப்பதற்காய் இருக்கலாம், எல்லாவற்றையும் மனம் விட்டு பேசுவதற்காய் இருக்கலாம், ஒரு அரவணைப்புக்காக இருக்கலாம் , வெறுமனே நான்கு பேர் நம்மை திரும்பிப்பார்க்க வேண்டும் என்பதற்காய் கூட இருக்கலாம். அதன் மூலம் தங்களுக்கோர் புதிய மகிழ்ச்சி கிடைப்பதாக நினைத்துக்கொள்ளலாம். ஆனால் இதில் எந்த தேவையும் வீணாவுக்கு இல்லை. அவள் இயல்பிலேயே மகிழ்ச்சியாய் இருக்கிறாள். அவள் குடும்பம் அவளுக்கு தேவையான அன்பையும், அரவணைப்பையும் நன்றாகவே தந்துகொண்டிருக்கிறது, யாரிடம் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் பேசிக்கொள், பழகிக்கொள், எங்களுக்கு தெரியும் நீ எங்களை தாண்டி எங்கும் செல்ல மாட்டாய் என நம்பிக்கை மிகுந்த சுதந்திரத்தை அளித்திருந்தது. அதனாலேயே அவள் இத்தனை நட்பு பாராட்டுகிறாள். தன்னை சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் மிக இயல்பாக பார்க்கிறாள், அவளை சுற்றி நடக்கும் எந்த ஒரு சம்பவமும் அவளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. தன்னுடனேயே சுற்றித்திரியும் ஒரு தோழி திடீரென ஒரு நாள் நான் ஒருவனை காதலிக்கிறேன் என சொன்னால் கூட 'ஹேய், கன்கிராட்ஸ்...' என சிரிப்புடன் வாழ்த்தி விட்டு கைகுலுக்கி ஒரு பார்வையாளராக அவர்களை கடந்து சென்றாளே தவிர தனக்கொரு காதலன் இல்லையே என ஒரு நாளும் வருந்த மாட்டாள். 

பள்ளிக் காலங்களில் கூட ஏதேனும் காதல் இருந்திருக்குமா என கேட்டுப்பார்த்தேன். 

'படிச்சது கேர்ள்ஸ் ஸ்கூல் அங்க அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை' என்றாள். 

ரெக்கார்ட் க்ளீனாகத்தான் இருக்கிறது என்பதில் சிறியதோர் மகிழ்ச்சி. 

'கேர்ள்ஸ் ஸ்கூல்ன்ற அப்றம் எப்டி பாய்ஸ் கூடலாம் இவ்ளோ சகஜமா பேசுற' என்றேன்.

'ஏன் அதுல என்ன இருக்கு பேசுனா பேச வேண்டியதான, அதுல என்ன பாய்ஸ் கேர்ள்ஸ்?' என்றாள் 

'நாங்க பாத்த கேர்ள் ஸ்கூல் பொணணுங்கெல்லாம் பாய்ஸ ஏலியன் மாதிரி தான் பாப்பாங்க' என்றேன்

சிரித்தாள் 'நான் மத்த பொண்ணுங்க மாதிரி கிடையாது, ஏன்லாம் என்ன கேக்காத, நான் இப்படித்தான்' என்றாள் 

உண்மையில் அவளிடம் மற்ற பெண்களிடம் இயல்பாக காணப்படும்  பொறாமைக்குணமோ, பொஸஸிவ்னெஸோ, முகம் சுழித்தலோ, கோபப்படுதலோ, தொட்டதற்கெல்லாம் அழுதலோ, பயப்படுதலோ, எரிச்சல் படுதலோ இப்படி எந்த ஒரு குணாதிசயங்களும் இல்லாமலிருந்தாள், எல்லாவற்றுக்கும் ஒரு சிரிப்பு, குறும்புத்தனம், அடுத்து என்ன என்பதை நோக்கி கடந்து போதல் என மிக இயல்பாகவே இருந்தாள். இவளிடம் நெருங்கிப்போக நான் காட்டிய முனைப்பை வேறு எந்த பெண்ணிடமாவது காட்டியிருந்தால் இந்நேரம் குறைந்த பட்ச சந்தேகமாவது வந்திருக்க கூடும். இவளுக்கு அத்தனை பெரிய கடிதம் எழுதியும் கூட துளியும் சந்தேகம் வரவில்லை. 

- தொடரும்