Monday, August 18, 2025

என்றென்றும் புன்னகை

 பகுதி 14 - தாங்கிப்பிடித்த நட்பு

'நீ அவளுக்கு லெட்டர் எழுதினாயா?' என அவன் கேட்ட போது, இல்லை என்று என்னால் கூற முடியாது. அவன் தெரிந்து கொண்டுதான் கேட்கிறான் என தெளிவாக தெரிந்தது. 

'ஆமாம் .... பட், அது உனக்கெப்படி தெரியும்' என்றேன்.

'எனக்கு மட்டும் இல்ல, காலேஜ்கே தெரியும் இப்ப' என்றான்.

'எப்படி?' என்றேன்.

'அது காலேஜ் காரிடோர்ல கெடந்திருக்கு, ஏதோ ஒரு சீனியர் அத எடுத்து படிச்சிருக்கான், அப்றம் அத கொண்டு போய் அவன் ரூம்ல இருந்த எல்லோருக்கும் காமிச்சிருக்கான், அங்கயும் எல்லாரும் படிச்சிட்டு, வேற வேற ரூம்க்கு போய்ட்டு இப்ப என் ரூம்ல என்கிட்ட தான் இருக்கு' என்றான்.

கேட்கவே அதிர்ச்சியாய் இருந்தது எனக்கு. அவன் சொன்ன ரூமில் இருந்தவர்கள் எல்லோருமே தண்ணி பார்ட்டிகள். ராத்திரி சரக்கடிக்கும் வேளைகளில் இதைத்தான் சத்தமாக படித்து சிரித்திருப்பார்கள் என நினைத்து பார்க்கவே கேவலமாய் இருந்தது. உள்ளுக்குள் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

'சரி ஆனது ஆய்போச்சு, ரூம்க்கு வா, அத உன்கிட்டயே குடுத்துடுறேன்' என்றான்.

அவன் அதை குடுத்த போது, எவ்வளவு பார்த்து பார்த்து ரகசியமாக எழுதிய என் உணர்வுகள் இப்படி சந்தி சிரிக்கும்படி ஆகிவிட்டதே எனும் துயருடனேதான் வாங்கினேன். வாங்கிவிட்டு வெளியே வரும்போது நேரம் இருட்டி இருந்தது. என் ரூமை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். போகும் வழியில் ஒரு சிறு பாலம் வந்தது. அதன் குட்டி சுவற்றில் அமர்ந்தேன். அந்த சாலையில் யாருமே இல்லை, அமைதியாக இருந்தது, பாலத்தின் கீழே ஓடைத்தண்ணீரின் சலசலப்பு சத்தம் மட்டுமே கேட்டது. கையில் இருந்த அந்த நோட்டை பார்த்தேன், அதை எழுதியதும், அவளிடம் கொடுத்ததும், அதை படித்தபின் அவளின் சிரிப்பும், திருப்பி தரமாட்டேன் என அவள் சொன்னதும், அதன் பின் அவளிடம் ஏற்பட்ட மாற்றங்களும், அதனால் எனக்கு கிடைத்த மகிழ்ச்சியும் எல்லாம் நிலைப்பதற்குள் இன்று சீனியர்களும், என் கிளாஸ்மேட்ஸ்களும் என்னை பார்த்த பார்வையும், இன்று சேகர் சொன்ன விஷயங்களையும் நினைத்து பார்த்து கோபம் தலைக்கேற அந்த நோட்டின் பக்கங்களை சுக்கு நூறாக கிழித்து அந்த ஓடையில் வீசினேன். அவளுக்காய் எழுதிய என் முதல் எழுத்துக்கள் இப்படி நீருக்கு இரையாகும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

அங்கிருந்து வேகமாக ரூமுக்கு சென்று யாருடனும் முகம் குடுத்து கூட பேசாமல் கதவை டமார் என மூடி விட்டு உள்ளே சென்று பாயில் படுத்து போர்வையை இழுத்து மூடிக்கொண்டு, இன்று நடந்தவை எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும் என்று கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டு உறங்க முயற்சித்தேன். கோகுல், சம்பத், ஜெயசங்கர் மூவருமே அறையில் இருந்தனர். எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதென்றால் இவர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு வார்த்தை கூட அவர்கள் அதைப்பற்றி என்னிடம் கேட்கவே இல்லை. என்னால் உறங்கவும் முடியவில்லை, வெளியே அவர்கள் பேசிக்கொண்டிருப்பது சல சலப்பாக என் காதில் விழுந்தது. 

'என்னடா நைட் சாப்ட கூட இல்ல ...., உள்ள பொய் கதவ சாத்திட்டான்' என்றான் சம்பத்.

'விடு மச்சி ரொம்ப ஃபீல் பன்றான் போல.... ஃப்ரீயா விடு' பாத்துக்கலாம் என்றான் கோகுல்.

'எப்டி மச்சான் வெளிய போயிருக்கும்?' என்றான் ஜெயசங்கர்.

மேற்கொண்டு எதையும் நான் கேட்கவில்லை என்னையும் அறியாமல் உறங்கிப்போனேன்.

காலை எழுந்து எதுவும் பேசாமல் வழக்கம் போல கிளம்பி கல்லூரிக்கு சென்றேன். கல்லூரிக்கு சீக்கிரம் போய் விட்டால் காலேஜ் கேண்டீனில் டீ குடிக்க நேரமிருக்கும். கோகுல் அன்று டீ குடிக்க போகலாம் என்று கூட்டிப்போனான். போய் நாங்கள் நால்வரும் ஒரு டேபிளில் அமர்ந்தோம். அப்போதும் ஒரு சில சீனியர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு போவதை என்னால் உணர முடிந்தது, இனி இது இப்படிதான் இருக்கப்போகிறது, நாம்தான் கடந்து செல்ல வேண்டும் என ஒருவாறு உள்ளுக்குள் முடிவு செய்தேன். அப்போது தினேஷ் எனும் ஒரு விஷமத்தனம் கொண்ட ஒருவன் வம்பிழுப்பதற்கென்றே எங்கள் டேபிளில் ஒரு ச்சேரை இழுத்து போட்டு அமர்ந்தான். 

'என்னடா சூப்பர்....உன்ன பத்தி என்னென்னவோ கேள்விப்படுறேன், உண்மையா ....' என நக்கலாக கேட்டான்.

நான் வாயை திறப்பதற்குள் 'ஏன் உனக்கென்ன பிரச்சினை .....?' என்று கோகுல் அவனை பார்த்து கேட்டான்.

'இல்ல மச்சி, வீணாக்கு ஏதோ லெட்டர்லாம் குடுத்தானாம்....' என்றான் தினேஷ்.

'ஆமா குடுத்தான்....இப்ப என்னான்ற....' என்றான் ஜெயசங்கர்.

'கூட படிக்ற பொண்ணுக்கு லெட்டர் குடுத்துருக்கான் என்னன்னு கேக்க மாட்டீங்களா...?' என தொடர்ந்தான் தினேஷ்.

'வீணா வந்து உன் கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணாளா? அது அவங்க ரெண்டு பேருக்குமான பர்சனல் விஷயம்.... உனக்கென்ன வந்துச்சு, உன்னால முடிஞ்ச நீ குடு .... குடுத்துதான் பாரு என்ன நடக்குதுன்னு' என கோகுலும் தொடர்ந்தான்.

'அதில்ல மச்சி ....' என சமாளிக்க முற்பட்டவனை 

'ஏன் இதே அவன் படிச்சி ஃபர்ஸ்ட் மார்க் வாங்குனப்ப என்னன்னு வந்து கேட்டியா, அப்பல்லாம் என்ன புடுங்கிட்டா இருந்த,  மூடிட்டு கிளம்புடா ....' என்று மிரட்டியே விட்டான் கோகுல்.

விருட்டென்று ச்சேரை தள்ளி விட்டு அங்கிருந்து நகர்ந்தான் தினேஷ்.

'இவனுங்களுக்கெல்லாம் இதான் மச்சி வேல .... சும்மா கெளம்பி வந்துடுவானுங்க எப்ப எவன் சிக்குவான்னு' என்று சம்பத்தை பார்த்து சொன்னான் கோகுல்.

கடைசி வரை நான் வாய் திறக்க வேண்டிய அவசியமே வரவில்லை, இதே அவர்கள் உடன் இல்லாமல் நான் தனியாக இருந்திருந்தால் அவன் பேச்சு இன்னும் வேறு விதமாக இருந்திருக்கும். எதுவுமே சொல்லாமல் நான்தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்க கூடும்.

இங்கு நடந்த விஷயங்கள் எதுவுமே வீணாவுக்கு தெரிந்ததாய் தெரியவில்லை. எப்போதும் போல வகுப்புக்கு வந்தாள், வகுப்புகளுக்கு நடுவில் அவ்வப்போது என்னை பார்த்தாள். நான் அவளை பார்க்கவில்லை. மாலை நாங்கள் பேசும் இடத்தில் எனக்காக காத்திருந்தாள். நான் நண்பர்களுடன் பேசிக்கொண்டே அவளை கடந்துதான் சென்றேன், அவள் பக்கம் திரும்பக்கூடவில்லை. அவள் முகம் மாறியதை என்னால் உணர முடிந்தது. ஒரு விஷயம் மட்டும் புரிந்தது அந்த லெட்டர் அவளிடமிருந்து தொலைந்திருக்கிறது என்பது கூட அவளுக்கு இன்னும் தெரியக்கூட இல்லை என்பது. ஆனால் இப்போது நான் இருக்கும் மனநிலையில் அவளிடம் பேசினால் அவளிடம் கோபப்பட்டு விடுவேன், அதை எப்படியும் யாரேனும் கண்டுவிடக்கூடும் என்பதனாலேயே அவளிடம் பேசுவதையே தவிர்த்து வந்தேன். அந்த வார இறுதியில் நான் வீட்டுக்கு சென்றதும் அவள் அக்கா வீட்டிலிருந்து ஃபோன் கால் வந்தது. 

'என்ன சார், ஒரு வாரமே கண்டுக்கேவே இல்ல, ரொம்ப பிஸி ஆய்ட்டீங்களோ' என்றாள்.

'கண்டுக்கற மாதிரி காரியமா பண்ணி வச்சிருக்க' என்றேன்.

'ஏன், என்னாச்சு' என எதுவுமே புரியாமல் கேட்டாள் 

'நான் உனக்கொரு லெட்டர் எழுதினேனே, அது எங்க' என்றேன் 

'என்கிட்ட தான் இருக்கு, ஏன் கேக்ற?' என்றாள் 

'இல்ல, அது உன்கிட்ட இல்ல, அது யார் யார் கைக்கோ போய், சீனியர்ஸ் உள்பட எல்லாரும் அத படிச்சி, நம்ம கிளாஸ் சேகர் வரைக்கும் போயிடுச்சு, அவன்தான் என் கிட்ட குடுத்தான், அத எழுதுன நானே கடைசில என் கையாலயே அதே கிழிச்சி போட்டேன்' என சொல்லி முடித்தேன்.

அவள் முழுவதுமாக மௌனமாகி போனாள். 'என்னடா சொல்ற.... உண்மையாவா... அது என் பேக் லதாண்டா இருந்துச்சி... எப்படி வெளில போச்சுன்னு தெரியலடா...' என்று குரல் தழுதழுத்தவாறே பேசினாள் 

'உனக்கு அது தொலஞ்சி போச்சுன்னு கூட தெரியலல்ல....' என்றேன் 

'இல்லடா , ஏதோ புக்ஸ் வெளில எடுத்துட்டு உள்ள வைக்றப்போ மிஸ் பண்டேன் போல' என்றாள் 

'அப்பவே சொன்னேன் திருப்பி குடுன்னு, நானே வச்சுக்குவேன்னு சொன்னியே ஒழுங்கா வச்சிக்க முடிஞ்சிதா உனக்கு .... அவ்ளோ என்ன கேர்லெஸ்நெஸ் உனக்கு' என என்னையும் அறியாமல் அவளை நன்றாகவே திட்டிக்கொண்டிருந்தேன். அவளும் ஒரு வார்த்தை பேசாமல் அமைதியாக  வாங்கிக்கொண்டிருந்தாள். 

ஒருவரிடம் பேச மாட்டோமா என ஒரு காலத்தில் ஏங்குகிறோம், அதே அவர்கள் நம்மை அனுமதித்த பிறகு அதீத உரிமை எடுத்துக்கொண்டு திட்ட ஆரம்பிக்கிறோம். நடந்த விஷயம் அவள் வேண்டுமென்று செய்யவில்லை தான், ஏதோ அவள் கை மீறி நடந்து விட்டது. அதை புரிந்து நடந்து கொண்டிருக்கலாம். ஆனால் அப்போது அவ்வளவு முதிர்ச்சி இல்லை.

'என் மேலதாண்டா தப்பு, நான் கொஞ்சம் கவனமா இருந்துருக்கனும், இப்ப என்ன பண்ண முடியும், எல்லாரும் படிச்சாச்சு, அத நம்மளால இனி மாத்த முடியாது, உன் கோபமும் சரிதான், இன்னும் நாலு திட்டு வேணா திட்டிக்கோ, ஆனா இனி என்ன பண்ணலாம்னு யோசிப்போம்' என்றாள்.

'என்ன பண்ணலாம், நீயே சொல்லு' என்றேன்.

- தொடரும் 

பகுதி 15

 

Sunday, August 17, 2025

என்றென்றும் புன்னகை

பகுதி 13: ஏதோ ஒரு மாற்றம்

'ஹாய்.... எப்டி இருக்க?' என்றாள்.

'அக்கா வீட்டுக்கு வந்துட்டியா' என்றேன்.

'ஆமா இப்பதான் வந்தேன். அப்றம் தேங்க்ஸ்' என்றாள்.

'எதுக்கு?' என்றேன்.

'அக்காவுக்கு நைட் ஃபோன் பண்ணதுக்கு' என்றாள்.

'ஆக்ட்ச்சுவலா நான் நேத்து நைட் மறந்தே போய்ட்டேன்.‌ நைட் ரொம்ப லேட் ஆயிடுச்சு இன்னைக்கு காலைல தான் வேகமா போய் ஃபோன் பண்ணா எங்களுக்கு நைட்டே தெரியுமே, சுப்பிரமணி ஃபோன் பண்ணுச்சேன்னு சொன்னாங்க. அப்போதான் எனக்கே தெரியும் நீ நைட் ஃபோன் பண்ணிருக்கன்னு. உன்ன நான் ஃபோன் பண்ணவே சொல்லலியே. நீயா எப்படி பண்ண?' என கேட்டாள்.

'ஏன் சொன்னாதான் பண்ணனுமா?' என்றேன்.

'அதில்ல உனக்கு ஏன் என் மேல இவ்வளவு அக்கறை?' என என்றாள்.

'அக்கறை எப்பவும் தான் இருக்கு, உனக்கு தான் அதை எல்லாம் தெரிஞ்சிக்க நேரமில்லை' என்றேன்.

'அப்படி எல்லாம் இல்லடா' என்றாள் 

'அதான் நேத்து நீ கிட்ட கூட வரலியே' என்றேன். மெல்ல என் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினேன்.‌ அவளுக்கு புரிந்ததாய் தெரியவில்லை. 

'ஏய், என் ஃப்ரெண்ட்ஸ் என்ன விடவே இல்லடா, உனக்கு தான் தெரியுமே அவங்க எப்பவும் என் கூடவேதான் இருப்பாங்க எங்கயும் தனியா விட மாட்டங்கன்னு' என்றாள்.

அதற்கு மேல் அதைப்பற்றி பேச எனக்கு விருப்பமில்லை. மற்ற சாதாரண விஷயங்களை பற்றி பேசிவிட்டு ஃபோனை வைத்து விட்டேன்.

வாரயிறுதி முடிந்து திங்கட்கிழமை கல்லூரி வந்தாகி விட்டது. அவளும் வழக்கம்போல் தான் இருந்தாள். அவளை கூப்பிட்டு நிறுத்தி ஒரு நீண்ட நேரம் எடுத்து என் மனதில் உள்ளவற்றை எல்லாம் சொல்லி புரியவைக்குமளவு பேச்சுத்திறமையும் இல்லை. அவ்வப்போது நான் தரும் சில குறிப்புகளை அவள் புரிந்து கொள்ளவும் இல்லை. இது இப்படியே போய்க்கொண்டிருந்தால் நான்கு வருடங்கள் முடிந்தே போய்விடும் போலிருந்தது. ஏதாவது ஒன்றை செய்து அவளுக்கு என்னை புரிய வைத்து விட வேண்டும் என்று தோன்றியது. அப்போது முதலாமாண்டு மகேஷ் செய்த காரியம் நினைவுக்கு வந்தது. நாமும் அதே போல் அவளிடம் சொல்ல நினைப்பதை கடிதமாக எழுதி விடலாம் என முடிவு செய்தேன். அறையில் இரவு எல்லோரும் உறங்கிய பின்பு தனி அறைக்கு சென்று ஒரு நோட்டை எடுத்து எழுத ஆரம்பித்தேன். மனதில் நினைத்து வைத்திருந்ததை எல்லாம் ஒவ்வொன்றாக எழுத ஆரம்பித்தேன். எழுதும் முன்பு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக முடிவு செய்து வைத்திருந்தேன். எக்காரணம் கொண்டும் இது காதல் கடிதமாக இருந்து விடக்கூடாது என்பதுதில். காதல் கடிதம் எழுதிய மகேஷின் நிலைமை என்ன ஆனது, அதற்குப்பிறகு அவள் அவனை எவ்வளவு வெறுத்தாள் என கண்கூடாக கண்டவன் நான். அவள் அப்படி என்னை அவள் வாழ்விலிருந்து வெறுத்து ஒதுக்குவதை நிச்சயமாக என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதனாலேயே காதல் எனும் வார்த்தையை எங்கேயும் பயன்படுத்தக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். எல்லாவற்றையும் யோசித்து யோசித்து எழுதி முடித்த போது நேரம் இரவு 1 மணியை தாண்டியிருந்தது. அடுத்த நாள் எங்களுக்கு ஒரு தேர்வு நாளாக இருந்தது.‌ தேர்வு நாட்களில் தேர்வு தொடங்கும் கடைசி நிமிடம் வரை எல்லோரும் புத்தகங்களை புரட்டிக்கொண்டிருப்பது வழக்கம். அப்படிதான் வீணாவும் அன்று தேர்வறைக்கு உள்ளே செல்லும் முன் புத்தகத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். நான் அவளிடம் சென்றேன். 

'வீணா....., உங்கிட்ட ஒன்னு தரணும்' என்றேன். 

'அப்டியா..... குடு.....' என கையை நீட்டினாள்.

நான் எழுதிய நோட்டை அவள் கைகளில் திணித்தேன். 'இத ரூம் போனப்றம், நீ மட்டும் படி, உன் ப்ரன்ட்ஸ் கிட்ட குடுத்து படிக்க வைக்காத' என்று மட்டும் சொல்லி குடுத்தேன். அதை அப்போதே படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்ததை அவள் கண்களில் கண்டேன். ஆனால் தேர்வறைக்குள் செல்ல வேண்டி இருந்ததனால் அவசரம் அவசரமாக அதை தன் பைக்குள் திணித்துக்கொண்டாள். 'ஓகே... பை... அப்றம் பாக்கலாம்' என சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள்.

அன்று தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்து அவள் இன்று படிப்பாளா, நாளை என்ன சொல்வாளோ என பல சிந்தனைகள் ஓடியது. நேரம் நகரவே இல்லை. இன்று போல் அன்று கைப்பேசிகள் இருந்திருந்தால் உடனே எனக்கு ஃபோன் செய்திருப்பாள். இப்போது வேறு வழி இல்லை. நாளை காலை வரை காத்திருக்க தான் வேண்டும். காலையும் வந்தது, வகுப்பும் ஆரம்பித்தது கடைசி நிமிடம் தான் அவள் உள்ளே வந்தாள். வந்தவள் என்னை ஒரு பார்வை பார்த்ததாய் நியாபகம். முதல் இடைவேளை தொடங்கியதும் என் இருக்கையிலிருந்து எழுந்தேன், அவளும் எழுந்தாள், இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி நடந்தோம். நீண்ட நேர காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வர இருவருமே காத்திருந்தோம். அவள் கண்களில் அவ்வளவு மகிழ்ச்சியும் முகத்தில் அவ்வளவு சிரிப்பும் இருந்தது.

'படிச்சிட்டேன்....' என்றாள்.

'எனக்கு வேற எப்படி சொல்றதுன்னு தெரியல, அதான் எழுதிட்டேன்' என்றேன்.

'இத நீ, மொதல்லயே பண்ணிருக்கலாம்' என்றாள் 

'இவ்வளவு இருந்துச்சா உனக்குள்ள, யோசிச்சு பாக்க எனக்கே ஆச்சரியமா இருக்கு.... First of all நீ இவ்வளவு நல்லா எழுதுவன்றதே எனக்கு தெரியாது, படிக்கவே நல்லா இருந்துச்சு' என்றாள்.

முதன் முறையாக என் எழுத்துக்கு ஒரு ரசிகை கிடைத்திருக்கிறாள். அதுவும் வீணாவே என்பது இரட்டிப்பு சந்தோஷமாய் இருந்தது. 

'இனிமே பாரு நான் எப்படி நடந்துக்றேன்னு.... நீயே ஆச்சரியப்படுவ...' என்றாள்.

'நடந்தா சந்தோஷம் தான்' என்றேன். 

'அதுக்காக ரொம்பலாம் எதிர்பாக்காத, என்னால முடிஞ்சப்பலாம் கண்டிப்பா பேசுறேன்..... ஓகேயா' என்றாள்.

'எனக்கு அதுவே போதும் ' என்றேன்.

'சரி படிச்சிட்டல்ல, நோட்ட திருப்பி குடு' என்றேன்.

'உனக்கு எதுக்கு அது.... திருப்பிலாம் தர மாட்டேன், நானே வச்சுக்குவேன்' என்றாள்.

'ஏன் அத வச்சி பூஜை பண்ண போறியா?' என்றேன்

'என்னவோ பன்றேன். உனக்கெதுக்கு அதெல்லாம் ' என்றாள்.

எனக்குள் சிரிப்பும் சிறு பெருமை உணர்வும். தோன்றும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் படிப்பாள் போல என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டேன்.

அன்றிலிருந்து அடிக்கடி என்னை பார்ப்பது, மாலை கல்லூரி முடிந்ததும் தோழிகளை அனுப்பி விட்டு என்னுடன் பேச சிறிது நேரம் காத்திருப்பது என சின்ன சின்ன மாற்றங்கள் அவளிடம் தெரிந்தது. நானும் நண்பர்களிடமிருந்து எஸ்கேப் ஆகி அவளுடன் நின்று சற்று நேரம் பேசி விட்டு பிறகு சென்றேன். வார இறுதி நாட்களில் அவளிடமிருந்து அதிக ஃபோன் கால்கள் வந்தது. அந்த வாரம் நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் கூறினாள், நானும் தான். என்‌ வாழ்வின் தினந்தோறும் நடந்த நிகழ்வுகளை ஒருவரிடம் முழுவதுமாக பகிர்வது என்பது அவளிடமே முதன் முறையாக இருந்தது. அவள் ரசித்துப்பார்க்கும் மலையாள படங்கள், நடிகர் நடிகைகள் எல்வாவற்றையும் கூறினாள். மம்முட்டி மோகன்லால் தவிர வேறு யாரையுமே தெரியாத எனக்கு நந்தனம் நவ்யா நாயர், பிருத்விராஜ், மீஷா மாதவன் திலீப் , காவ்யா மாதவன் என இந்த பெயர்கள் எல்லாம் அவள் மூலமாகவே அறிமுகமானார்கள். பாஷையே புரியா விடினும் ஏசியாநெட்டிலும் சூர்யா டிவியிலும் அவள் சொன்ன படங்களை தேடித்தேடி பார்க்க ஆரம்பித்தேன். பிறகு அதைப்பற்றி போனில் பேசினோம். போன் கால்கள் நிமிடங்களிலிருந்து மணிக்கனக்காக மாறியது. அவள் வீட்டில் தற்போது அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதை லைவ் அப்டேட் கொடுக்குமளவுக்கு பேச்சு தொடர்ந்து. 'காஃபி குடிக்கிறேன், சிப்ஸ் சாப்பிடுகிறேன், உனக்கு வேணுமா' என்பாள். 'குடு' என்பேன். 'இந்தா எடுத்துக்கோ' என்பாள். எனக்காக அவளும்‌, அவளுக்காக நானும் எப்போதும் கூடவே இருப்பதை போல உணர்ந்தோம். 'ஏதாவது முக்கியமாக நடந்தால், உடனே அவளிடம் நானும் , என்னிடம் அவளும்' சொல்லி முடித்தால்தான் அது மனதளவில் முழுமை பெறும் போல் இருந்தது இருவருக்குமே. ஒரு கடிதம் இத்தனை மாற்றங்களை ஏற்படுத்தி விட்டதே என நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன். அந்த சந்தோஷம் சில நாட்கள் வரை நீடித்தது. 

ஒருநாள் கல்லுரிக்குள் நுழைந்த போது சம்மந்தமே இல்லாமல் ஏதேதோ சீனியர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தனர். அது வழக்கமான பார்வைக்கு மாறாக இருந்தது. என் வகுப்பில் நான் முதல் மாணவன் என்கிற அடையாளம் சீனியர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அன்று ஒரு சீனியர் நான் நடந்து சென்ற போது பின்னாலிருந்து ஒரு கமெண்ட் அடித்தான். 

'என்னடா டாப்பரே.... படிக்கிற வேலை இல்லாம வேற ஏதோ வேலை எல்லாம் பன்ற போல...' என்றாள். எனக்கு அந்த பேச்சு சரியாக படவில்லை. திரும்பிச் சென்று அவரிடமே நேராக கேட்டேன்.

 'ஏன்ணா அப்டி சொல்றீங்க...' என்று. அவனோ 'உன்ன என்னமோ சின்ன பையன்னு நெனச்சேன், பெரிய ஆளுதான்டா நீ' என்றான். 'போ .... ஒழுங்கா படிக்ற வேலைய மட்டும் பாரு....' என‌ கொஞ்சம் மிரட்டல் தொனியிலேயே சொல்லி அங்கிருந்து போக சொன்னான். 

எனக்கு ஏன் அவன் அப்படி சொன்னான்‌ என‌ புரியவில்லை. குழப்பத்திலேயே இருந்தேன். சீனியர்கள் மட்டுமில்லை என்‌வகுப்பிலேயே சில மாணவர்கள் என்னை பார்த்த விதம் சரியில்லை, ஒரு மாதிரி நக்கலாக சிரித்தனர். அன்றைய நாள் கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்லும் முன் என் அறை நண்பர்களுடன் டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தேன். அப்போது சேகர் எனும் என் வகுப்பு மாணவன் என்னை பார்த்தான். அவன் நாங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளி தான் அவன் வீடு இருந்தது. என்னை தனியே கூட்டிச்சென்று 'மச்சி நீ வீணாவுக்கு லெட்டர் எதுவும் எழுதினியா...?' என்றான். அதிர்ச்சியில் உறைந்து நின்றேன் நான்.

- தொடரும்.

Saturday, August 16, 2025

என்றென்றும் புன்னகை

பகுதி 12 - என்னை புரியாதா

'நான் சொன்னது நினைவிருக்கிறதா?' என்பதைப்போல நானும், 'இரு வரேன்' என்பதைப்போல அவளும் ஒரு பார்வைப் பரிமாற்றம் நிகழ்த்தினோம். பிறகு தோழிகளை விட்டு விலகி என்னை நோக்கி நடந்து வந்தாள். என் பக்கத்தில் இருக்கையை நகர்த்திப்போட்டு உட்கார்ந்தாள். 

'ஹ்ம் சொல்லு .... அப்றம்' என்றாள். 

'ஒரு வழியா வந்துட்ட...' என்றேன்.

சிரித்தாள். ஒரு சில வார்த்தைகள்தான் பேசியிருப்போம். வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைப்பது போல ஒரு காரியம் செய்தேன். சாப்பிட்ட கையுடன் அவளோடு பேச கொஞ்சம் சங்கோஜமாக இருந்ததனால் 'ஒரு நிமிடம் வெய்ட் பன்றியா, கை கழுவி விட்டு வந்துட்றேன்' என சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாக வேகம் வேகமாக சென்று பைப்பில் கையை கழுவிட்டு, மீண்டும் வேகவேகமாக நடந்து வந்து வகுப்பிற்குள் நுழைந்த போது நான் நினைத்து போலவே நடந்தது, அவள் அங்கு இல்லை. அதிசயமாக நிகழ்ந்தது ஆரம்பிக்கும் முன்னரே முடிந்தது. எங்கு போனாள் என யாரையும் கேட்கவும் முடியாது. கைகழுவுறது இப்போ ரொம்ப முக்கியமா என எனக்குள்ளே ஒருவன் கடிந்தான். 

மதிய இடைவேளை முடிந்து வகுப்பு ஆரம்பிக்கும் போதுதான் வகுப்பிற்குள்ளே வந்தாள். வந்தவள் என் பக்கம் திரும்பிகூட பார்க்கவில்லை. ஆனால் வார இறுதி வந்தபோது மட்டும் மதியமே 'இன்னக்கி வீட்டுக்கு போறியா ?' என கேட்டாள். 'ஆமாம்' என்றேன், 'அப்போ என்னயும் கூட்டிட்டு போ' என்றாள். 'சரி' என்பதை தவிர என்ன சொல்லி விட முடியும். உள்ளுக்குள் சிறிய கோபம் வரும், 'இதற்கு மட்டும் தான் பேசுவியா' என, ஆனால் பயணத்தின் போது அவள் பேசும் அழகில் அதுவும் மறந்து போய் விடும். 

அவளின் அருகாமை ஏதோ ஒரு மனமகிழ்வை தந்தது, வாழ்வில் எதற்கும் அதீத கவலை கொள்ள தேவையில்லை, பயம் கொள்ள தேவையில்லை, நாளை அல்லது எதிர்காலம் பற்றி எல்லாம் ரொம்ப யோசிக்க தேவையில்லை, எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டே கடக்கலாம், இந்த தருணத்தில் மட்டும் சந்தோஷமாக இருந்து கொள்ளலாம், நடக்க வேண்டியது தானே நடக்கும், நமக்கு நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றையும் சிரிக்கக்கூடிய நிகழ்வாகவே பார்க்கலாம், மற்றவர்களிடளும் அதைப்பற்றி கூறி சிரிக்கலாம், அவர்களையும் சிரிக்க வைக்கலாம். அப்படி அவளும் சிரித்து என்னையும் சிரிக்க வைத்தாள். அது எனக்கு பிடித்துப்போனது, அதனாலேயே அவளுடன் சேர்ந்திருக்கும் தருணங்களை எதிர்நோக்கியே மனம்  காத்திருந்தது, ஆனால் அது வார இறுதி நாட்களில் மட்டுமே நடந்தது அதுவும் அவள் வீட்டுக்கு சென்றால் மட்டுமே. இதெல்லாம் என்னுள் இருந்தாலும் எனக்குள் எப்போதுமே இருந்து கொண்டிருந்த கேள்வி "அவள் வாழ்வில் நான் யார்?" என்பதுதான். அவளிடம் கேட்டால் "கூட படிக்கிறவன், ஜஸ்ட் ஒரு ப்ரெண்ட்" என்று சொல்லி விட்டு கடந்து போய் விடுவாள் என்பது எனக்கு தெரியும், ஆனால் அப்படி பத்தோடு பதினொன்றாக அவள் வாழ்வில் நான் இருந்துவிடக்கூடாது என்பதை கொஞ்சம் தீர்க்கமாகவே முடிவு செய்திருந்தேன். அந்த இடத்தை அடைய ஏதாவது செய்ய வேண்டும் என மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அதற்கான சந்தர்ப்பம் வரும் என்றும் காத்திருந்தேன்.

கல்லூரி மூன்றாம் ஆண்டில் நாங்கள் தனியே வீடு எடுத்து தங்கி இருந்ததை போல மாணவிகளும் ஹாஸ்டலை விட்டு வெளியே வந்து தனியே வீடு எடுத்து தங்க ஆரம்பித்தனர். அது மாணவர்களுக்குதான் குஷியாக இருந்தது. கல்லூரி முடிந்த சாயங்கால வேளைகளில் மாணவிகளை சகஜமாக வெளியே காணலாம், பேசலாம், இவ்வளவு ஏன் நாங்கள் மாணவிகள் வீட்டுக்கு செல்லலாம், அவர்கள் எங்கள் வீட்டுக்கு வரலாம், இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள் என உற்றுப் பார்க்கும் பெற்றோர்கள் இல்லை. ஹவுஸ் ஓனர்களும் ஏதோ காலேஜ் ஸ்டூடன்ட்ஸ், வருகிறார்கள், போகிறார்கள், நமக்கு வாடகை கூடுதலாக வந்தால் போதுமென்று கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். எங்கள் அறைக்கு கோகுலும், ஜெயசங்கரும் அவ்வப்போது அவர்களின் தோழிகளை கூட்டி வந்தனர், மொட்டை மாடியில் இருட்டும் வரை அரட்டை அடித்து விட்டு பின் அவர்களின் வீட்டிற்கு சென்றனர். இரண்டொரு முறை இதை சகித்துக்கொண்ட சம்பத் "இனி கூட்டி வருவதானால் முதலிலேயே சொல்லி விடுங்கள், நான் டீ கடைக்கு சென்று விடுகிறேன், இருட்டிய பின் இவளுக போறதை பார்த்து விட்டு பின் வருகிறேன்" என்றான். அவனுக்கு தெரியவில்லை அவன் தினமும் செல்ல வேண்டி வரும் என்று.

வீணாவும் அவள் தோழிகளும் எங்கள் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி தான் வீடு எடுத்திருக்கிறார்கள் என தெரிந்தது. அவர்கள் யார் வீட்டுக்கும் சென்றதாக தெரியவில்லை ஆனால் மாணவர்கள் அவர்கள் வீட்டை  நோக்கி படையெடுத்தனர் என்பது மட்டும் தெரிந்தது. அவளுடன் தங்கியிருந்த சாவித்திரி எனும் பெண்ணும் ஒரு மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட் பையனும் காதலர்களாய் இருந்தனர். அவன் பாதி நேரம் அங்கேயேதான் கிடந்தான். கிட்டத்தட்ட கணவன் மனைவி போலவேதான் இருந்தனர். காதலர்களுக்கிடையே நிகழும் நெருக்கமான நிகழ்வுகள் அவர்கள் வீட்டுக்குள்ளேயே நிகழ்ந்தது, வீணாவும் அவளின் மற்ற தோழிகளும் அவர்களை கண்டும் காணாதது போல அந்த வீட்டில் இருந்தனர். இதையெல்லாம் தினமும் பார்த்து வீணா யாருடனும் இப்படி போய்விடக்கூடாதே என்கிற பயமெல்லாம் அப்போது இருந்தது எனக்கு.

ஒரு நாள் வார இறுதியில் நாங்கள் யாருமே வீட்டுக்கு செல்லவில்லை. சாயங்காலம் வகுப்பில் எல்லோரும் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு செல்லலாம் என முடிவு செய்தோம் அடுத்த நாள் காலை அவரவர் வீட்டுக்கு செல்லலாம் என முடிவு செய்தோம். அன்று வீணா அவள் அக்கா வீட்டுக்கு போக வேண்டும், அவர்கள் அண்ணா நகரில் இருக்கிறார்கள், ஆனால் இன்று எல்லோரும் கோவிலுக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்ததினால் இன்று வரவில்லை என அக்கா வீட்டுக்கு போன் செய்ய வேண்டும் என கூறிக்கொண்டிருந்தாள். வழக்கமாக வார இறுதியில் பயணம் செய்யும் போது என்னிடம் பேசுவது போல இன்று கோவிலுக்கு செல்லும் போது என்னுடன் பேசிக்கொண்டே வருவாள், என் நண்பர்கள் முன் அவள் என்னுடன் இருப்பதை காட்டி விடலாம் என நினைத்து வைத்திருந்தேன். இது போன்ற நிகழ்வுகளில் ஆண்களும் பெண்களும் அவரவர்க்கு நெருக்கமானவர்களுடன் சேர்த்து கொள்வது வழக்கமாக நிகழும் ஒன்று, அவர்கள் காதலர்களாக இருக்கலாம், அல்லது காதலர்கள் ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுபவர்களாக இருக்கலாம் அல்லது வெறும் நெருங்கிய நண்பர்களாக மட்டுமே இருக்கலாம். ஏதோ ஒரு விதத்தில் அவள் என்னுடன் இருக்க வேண்டும் அதுவும் என் நண்பர்கள் முன், என் அதிகபட்ச ஆசையே இவ்வளவுதான். எதிர்பார்ப்பு  என்பது ஏமாற்றத்தை தவிர என்ன பெரிதாய் தந்துவிட போகிறது. வந்தவள் மிக சுறுசுறுப்பாக எல்லாருடனும் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் அரட்டை அடித்துக்கொண்டும் சுற்றித்திரிந்தாளேயன்றி என் பக்கம் கூட வரவில்லை. கொஞ்சம் வருத்தமாகவும் ஏன் கோபமாகவும் கூட இருந்தது. இதெல்லாம் இவளுக்கு எப்போது புரியப்போகிறது, என்று இதெல்லாம் எனக்காக செய்யப்போகிறாள் என உள்ளுக்குள்ளே நிறைய மன ஓட்டங்கள். சீக்கிரமாகவே கோவிலிலிருந்து வெளியே வந்து விட்டேன். தெப்ப குளப்படிக்கட்டில் அமர்ந்து மெல்ல ஆடிக்கொண்டிருந்த நீரை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன். பக்கத்தில் புடவை கட்டி வந்த ஒரு உருவம் அமர்ந்தது, அது வித்யப்பிரியா. 

"என்ன சீக்கிரம் வந்துட்ட? வேற யாருமே வர்ல' என்றாள். 

"ஒன்னுமில்ல சும்மாதான், நீ கோயிலுக்கு போல?" என்றேன்.

"நான் இப்ப போகக்கூடாது" என்றாள்.

"ஓ...." என புரிந்தவனாய் தலையை மட்டும் ஆட்டினேன்.

அவள் என்னைப்பற்றியும் வீணாவுடன் எனக்கிருக்கும் ஒரு உணர்வு பற்றியும் கொஞ்சம் கணித்து வைத்திருப்பவள்.

"ஏன் ஒரு மாதிரி இருக்க?...." என கேட்டாள்.

"ஒன்னுமில்ல, சும்மாதான் " என்றேன்.

"என்னவோ மறைக்கிற..... வீணாவா?" என சட்டென கேட்டே விட்டாள். நான் மௌனமாகவே இருந்தேன். அவள் கேட்டதை ஆமோதிப்பதை போல தலையை மட்டும் அசைத்தேன்.

"சரி விடு..... நமக்கு புடிச்சவங்க நமக்கு புடிச்ச மாதிரி எப்போதுமேலாம் நடந்துக்க மாட்டாங்க, நாமதான் புரிஞ்சிக்கனும்" என்றாள். சரிதான் என்பதை போல தலையை மட்டுமே அசைத்தேன். அவள் நான் ஏதாவது பேசுவேன் என அவள் எதிர்பாத்தாலும் அவளிடம் அதிகம் பகிர்தலை நான் விரும்பவில்லை.

கோவிலிலிருந்து ஒவ்வொருவராக நண்பர்கள் எல்லோரும் வெளிவந்து கொண்டிருந்தனர்.வீணாவும் வந்தாள் அவளை சுற்றி நான்கு பேரும் உடன் வந்து கொண்டிருந்தனர். இனிமேலும் அவள் என்னிடம் வருவாள் என்ற எண்ணம் முற்றிலும் போய் விடவே. "சரி நான் ரூம்க்கு போறேன்" என நண்பர்களிடம் கூறி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன். போகிற வழியில் ஒரு PCO பூத் கண்ணில் பட்டது. வீணா அவள் அக்காவுக்கு இன்று வராததை அறிவிக்க வேண்டும் என சொன்னது நினைவுக்கு வந்தது. இப்போதிருக்கும் அரட்டை மூடில் அவள் போன் செய்வாள் என்று தோன்றவில்லை. உள் சென்று அவள் அக்கா வீட்டு நம்பரை டயல் செய்தேன். அப்போதெல்லாம் அனைத்து நம்பர்களும் நினைவில் அத்துப்படி. மறுமுனையில் அவள் அக்காதான் எடுத்தார்கள். வீணாவின் குரலை ஒத்த ஆனால் சற்றே முதிர்ந்த ஒரு குரல். என் பெயர் அவர்கள் வீட்டில் எல்லோருக்குமே தெரியும் அதனால் என்னை அறிமுகப்படுத்த வெல்லாம் தேவையே இல்லை. "நான் சுப்ரமணி பேசுறேன்க்கா..... வீணா இன்னைக்கு வரலையாம், நாளக்கி காலைல தான் வருவாளாம், உங்க கிட்ட இன்பார்ம் பண்ண சொன்னா...." என்றேன். 

"ஓ ....‌அப்படியா. தேங்க்யூ, நீ எப்படி இருக்கு?" என்று கேட்டார்கள்.

"நான் நல்லா இருக்கேன்" என்று சொல்லி வைத்து விட்டு ரூமுக்கு சென்று விட்டேன்.

அடுத்த நாள் காலை நானும் கிளம்பி வீட்டுக்கு சென்று விட்டேன். அன்றைய வாரயிறுதிநாள் வழக்கமாக நகர்ந்து கொண்டிருக்க மாலை வீட்டு லேண்ட் லைன் ஒலித்தது. எடுத்தேன். மறு முனையில் வீணா.

- தொடரும்