Saturday, August 16, 2025

என்றென்றும் புன்னகை

பகுதி 12 - என்னை புரியாதா

'நான் சொன்னது நினைவிருக்கிறதா?' என்பதைப்போல நானும், 'இரு வரேன்' என்பதைப்போல அவளும் ஒரு பார்வைப் பரிமாற்றம் நிகழ்த்தினோம். பிறகு தோழிகளை விட்டு விலகி என்னை நோக்கி நடந்து வந்தாள். என் பக்கத்தில் இருக்கையை நகர்த்திப்போட்டு உட்கார்ந்தாள். 

'ஹ்ம் சொல்லு .... அப்றம்' என்றாள். 

'ஒரு வழியா வந்துட்ட...' என்றேன்.

சிரித்தாள். ஒரு சில வார்த்தைகள்தான் பேசியிருப்போம். வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைப்பது போல ஒரு காரியம் செய்தேன். சாப்பிட்ட கையுடன் அவளோடு பேச கொஞ்சம் சங்கோஜமாக இருந்ததனால் 'ஒரு நிமிடம் வெய்ட் பன்றியா, கை கழுவி விட்டு வந்துட்றேன்' என சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாக வேகம் வேகமாக சென்று பைப்பில் கையை கழுவிட்டு, மீண்டும் வேகவேகமாக நடந்து வந்து வகுப்பிற்குள் நுழைந்த போது நான் நினைத்து போலவே நடந்தது, அவள் அங்கு இல்லை. அதிசயமாக நிகழ்ந்தது ஆரம்பிக்கும் முன்னரே முடிந்தது. எங்கு போனாள் என யாரையும் கேட்கவும் முடியாது. கைகழுவுறது இப்போ ரொம்ப முக்கியமா என எனக்குள்ளே ஒருவன் கடிந்தான். 

மதிய இடைவேளை முடிந்து வகுப்பு ஆரம்பிக்கும் போதுதான் வகுப்பிற்குள்ளே வந்தாள். வந்தவள் என் பக்கம் திரும்பிகூட பார்க்கவில்லை. ஆனால் வார இறுதி வந்தபோது மட்டும் மதியமே 'இன்னக்கி வீட்டுக்கு போறியா ?' என கேட்டாள். 'ஆமாம்' என்றேன், 'அப்போ என்னயும் கூட்டிட்டு போ' என்றாள். 'சரி' என்பதை தவிர என்ன சொல்லி விட முடியும். உள்ளுக்குள் சிறிய கோபம் வரும், 'இதற்கு மட்டும் தான் பேசுவியா' என, ஆனால் பயணத்தின் போது அவள் பேசும் அழகில் அதுவும் மறந்து போய் விடும். 

அவளின் அருகாமை ஏதோ ஒரு மனமகிழ்வை தந்தது, வாழ்வில் எதற்கும் அதீத கவலை கொள்ள தேவையில்லை, பயம் கொள்ள தேவையில்லை, நாளை அல்லது எதிர்காலம் பற்றி எல்லாம் ரொம்ப யோசிக்க தேவையில்லை, எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டே கடக்கலாம், இந்த தருணத்தில் மட்டும் சந்தோஷமாக இருந்து கொள்ளலாம், நடக்க வேண்டியது தானே நடக்கும், நமக்கு நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றையும் சிரிக்கக்கூடிய நிகழ்வாகவே பார்க்கலாம், மற்றவர்களிடளும் அதைப்பற்றி கூறி சிரிக்கலாம், அவர்களையும் சிரிக்க வைக்கலாம். அப்படி அவளும் சிரித்து என்னையும் சிரிக்க வைத்தாள். அது எனக்கு பிடித்துப்போனது, அதனாலேயே அவளுடன் சேர்ந்திருக்கும் தருணங்களை எதிர்நோக்கியே மனம்  காத்திருந்தது, ஆனால் அது வார இறுதி நாட்களில் மட்டுமே நடந்தது அதுவும் அவள் வீட்டுக்கு சென்றால் மட்டுமே. இதெல்லாம் என்னுள் இருந்தாலும் எனக்குள் எப்போதுமே இருந்து கொண்டிருந்த கேள்வி "அவள் வாழ்வில் நான் யார்?" என்பதுதான். அவளிடம் கேட்டால் "கூட படிக்கிறவன், ஜஸ்ட் ஒரு ப்ரெண்ட்" என்று சொல்லி விட்டு கடந்து போய் விடுவாள் என்பது எனக்கு தெரியும், ஆனால் அப்படி பத்தோடு பதினொன்றாக அவள் வாழ்வில் நான் இருந்துவிடக்கூடாது என்பதை கொஞ்சம் தீர்க்கமாகவே முடிவு செய்திருந்தேன். அந்த இடத்தை அடைய ஏதாவது செய்ய வேண்டும் என மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அதற்கான சந்தர்ப்பம் வரும் என்றும் காத்திருந்தேன்.

கல்லூரி மூன்றாம் ஆண்டில் நாங்கள் தனியே வீடு எடுத்து தங்கி இருந்ததை போல மாணவிகளும் ஹாஸ்டலை விட்டு வெளியே வந்து தனியே வீடு எடுத்து தங்க ஆரம்பித்தனர். அது மாணவர்களுக்குதான் குஷியாக இருந்தது. கல்லூரி முடிந்த சாயங்கால வேளைகளில் மாணவிகளை சகஜமாக வெளியே காணலாம், பேசலாம், இவ்வளவு ஏன் நாங்கள் மாணவிகள் வீட்டுக்கு செல்லலாம், அவர்கள் எங்கள் வீட்டுக்கு வரலாம், இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள் என உற்றுப் பார்க்கும் பெற்றோர்கள் இல்லை. ஹவுஸ் ஓனர்களும் ஏதோ காலேஜ் ஸ்டூடன்ட்ஸ், வருகிறார்கள், போகிறார்கள், நமக்கு வாடகை கூடுதலாக வந்தால் போதுமென்று கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். எங்கள் அறைக்கு கோகுலும், ஜெயசங்கரும் அவ்வப்போது அவர்களின் தோழிகளை கூட்டி வந்தனர், மொட்டை மாடியில் இருட்டும் வரை அரட்டை அடித்து விட்டு பின் அவர்களின் வீட்டிற்கு சென்றனர். இரண்டொரு முறை இதை சகித்துக்கொண்ட சம்பத் "இனி கூட்டி வருவதானால் முதலிலேயே சொல்லி விடுங்கள், நான் டீ கடைக்கு சென்று விடுகிறேன், இருட்டிய பின் இவளுக போறதை பார்த்து விட்டு பின் வருகிறேன்" என்றான். அவனுக்கு தெரியவில்லை அவன் தினமும் செல்ல வேண்டி வரும் என்று.

வீணாவும் அவள் தோழிகளும் எங்கள் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி தான் வீடு எடுத்திருக்கிறார்கள் என தெரிந்தது. அவர்கள் யார் வீட்டுக்கும் சென்றதாக தெரியவில்லை ஆனால் மாணவர்கள் அவர்கள் வீட்டை  நோக்கி படையெடுத்தனர் என்பது மட்டும் தெரிந்தது. அவளுடன் தங்கியிருந்த சாவித்திரி எனும் பெண்ணும் ஒரு மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட் பையனும் காதலர்களாய் இருந்தனர். அவன் பாதி நேரம் அங்கேயேதான் கிடந்தான். கிட்டத்தட்ட கணவன் மனைவி போலவேதான் இருந்தனர். காதலர்களுக்கிடையே நிகழும் நெருக்கமான நிகழ்வுகள் அவர்கள் வீட்டுக்குள்ளேயே நிகழ்ந்தது, வீணாவும் அவளின் மற்ற தோழிகளும் அவர்களை கண்டும் காணாதது போல அந்த வீட்டில் இருந்தனர். இதையெல்லாம் தினமும் பார்த்து வீணா யாருடனும் இப்படி போய்விடக்கூடாதே என்கிற பயமெல்லாம் அப்போது இருந்தது எனக்கு.

ஒரு நாள் வார இறுதியில் நாங்கள் யாருமே வீட்டுக்கு செல்லவில்லை. சாயங்காலம் வகுப்பில் எல்லோரும் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு செல்லலாம் என முடிவு செய்தோம் அடுத்த நாள் காலை அவரவர் வீட்டுக்கு செல்லலாம் என முடிவு செய்தோம். அன்று வீணா அவள் அக்கா வீட்டுக்கு போக வேண்டும், அவர்கள் அண்ணா நகரில் இருக்கிறார்கள், ஆனால் இன்று எல்லோரும் கோவிலுக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்ததினால் இன்று வரவில்லை என அக்கா வீட்டுக்கு போன் செய்ய வேண்டும் என கூறிக்கொண்டிருந்தாள். வழக்கமாக வார இறுதியில் பயணம் செய்யும் போது என்னிடம் பேசுவது போல இன்று கோவிலுக்கு செல்லும் போது என்னுடன் பேசிக்கொண்டே வருவாள், என் நண்பர்கள் முன் அவள் என்னுடன் இருப்பதை காட்டி விடலாம் என நினைத்து வைத்திருந்தேன். இது போன்ற நிகழ்வுகளில் ஆண்களும் பெண்களும் அவரவர்க்கு நெருக்கமானவர்களுடன் சேர்த்து கொள்வது வழக்கமாக நிகழும் ஒன்று, அவர்கள் காதலர்களாக இருக்கலாம், அல்லது காதலர்கள் ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுபவர்களாக இருக்கலாம் அல்லது வெறும் நெருங்கிய நண்பர்களாக மட்டுமே இருக்கலாம். ஏதோ ஒரு விதத்தில் அவள் என்னுடன் இருக்க வேண்டும் அதுவும் என் நண்பர்கள் முன், என் அதிகபட்ச ஆசையே இவ்வளவுதான். எதிர்பார்ப்பு  என்பது ஏமாற்றத்தை தவிர என்ன பெரிதாய் தந்துவிட போகிறது. வந்தவள் மிக சுறுசுறுப்பாக எல்லாருடனும் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் அரட்டை அடித்துக்கொண்டும் சுற்றித்திரிந்தாளேயன்றி என் பக்கம் கூட வரவில்லை. கொஞ்சம் வருத்தமாகவும் ஏன் கோபமாகவும் கூட இருந்தது. இதெல்லாம் இவளுக்கு எப்போது புரியப்போகிறது, என்று இதெல்லாம் எனக்காக செய்யப்போகிறாள் என உள்ளுக்குள்ளே நிறைய மன ஓட்டங்கள். சீக்கிரமாகவே கோவிலிலிருந்து வெளியே வந்து விட்டேன். தெப்ப குளப்படிக்கட்டில் அமர்ந்து மெல்ல ஆடிக்கொண்டிருந்த நீரை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன். பக்கத்தில் புடவை கட்டி வந்த ஒரு உருவம் அமர்ந்தது, அது வித்யப்பிரியா. 

"என்ன சீக்கிரம் வந்துட்ட? வேற யாருமே வர்ல' என்றாள். 

"ஒன்னுமில்ல சும்மாதான், நீ கோயிலுக்கு போல?" என்றேன்.

"நான் இப்ப போகக்கூடாது" என்றாள்.

"ஓ...." என புரிந்தவனாய் தலையை மட்டும் ஆட்டினேன்.

அவள் என்னைப்பற்றியும் வீணாவுடன் எனக்கிருக்கும் ஒரு உணர்வு பற்றியும் கொஞ்சம் கணித்து வைத்திருப்பவள்.

"ஏன் ஒரு மாதிரி இருக்க?...." என கேட்டாள்.

"ஒன்னுமில்ல, சும்மாதான் " என்றேன்.

"என்னவோ மறைக்கிற..... வீணாவா?" என சட்டென கேட்டே விட்டாள். நான் மௌனமாகவே இருந்தேன். அவள் கேட்டதை ஆமோதிப்பதை போல தலையை மட்டும் அசைத்தேன்.

"சரி விடு..... நமக்கு புடிச்சவங்க நமக்கு புடிச்ச மாதிரி எப்போதுமேலாம் நடந்துக்க மாட்டாங்க, நாமதான் புரிஞ்சிக்கனும்" என்றாள். சரிதான் என்பதை போல தலையை மட்டுமே அசைத்தேன். அவள் நான் ஏதாவது பேசுவேன் என அவள் எதிர்பாத்தாலும் அவளிடம் அதிகம் பகிர்தலை நான் விரும்பவில்லை.

கோவிலிலிருந்து ஒவ்வொருவராக நண்பர்கள் எல்லோரும் வெளிவந்து கொண்டிருந்தனர்.வீணாவும் வந்தாள் அவளை சுற்றி நான்கு பேரும் உடன் வந்து கொண்டிருந்தனர். இனிமேலும் அவள் என்னிடம் வருவாள் என்ற எண்ணம் முற்றிலும் போய் விடவே. "சரி நான் ரூம்க்கு போறேன்" என நண்பர்களிடம் கூறி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன். போகிற வழியில் ஒரு PCO பூத் கண்ணில் பட்டது. வீணா அவள் அக்காவுக்கு இன்று வராததை அறிவிக்க வேண்டும் என சொன்னது நினைவுக்கு வந்தது. இப்போதிருக்கும் அரட்டை மூடில் அவள் போன் செய்வாள் என்று தோன்றவில்லை. உள் சென்று அவள் அக்கா வீட்டு நம்பரை டயல் செய்தேன். அப்போதெல்லாம் அனைத்து நம்பர்களும் நினைவில் அத்துப்படி. மறுமுனையில் அவள் அக்காதான் எடுத்தார்கள். வீணாவின் குரலை ஒத்த ஆனால் சற்றே முதிர்ந்த ஒரு குரல். என் பெயர் அவர்கள் வீட்டில் எல்லோருக்குமே தெரியும் அதனால் என்னை அறிமுகப்படுத்த வெல்லாம் தேவையே இல்லை. "நான் சுப்ரமணி பேசுறேன்க்கா..... வீணா இன்னைக்கு வரலையாம், நாளக்கி காலைல தான் வருவாளாம், உங்க கிட்ட இன்பார்ம் பண்ண சொன்னா...." என்றேன். 

"ஓ ....‌அப்படியா. தேங்க்யூ, நீ எப்படி இருக்கு?" என்று கேட்டார்கள்.

"நான் நல்லா இருக்கேன்" என்று சொல்லி வைத்து விட்டு ரூமுக்கு சென்று விட்டேன்.

அடுத்த நாள் காலை நானும் கிளம்பி வீட்டுக்கு சென்று விட்டேன். அன்றைய வாரயிறுதிநாள் வழக்கமாக நகர்ந்து கொண்டிருக்க மாலை வீட்டு லேண்ட் லைன் ஒலித்தது. எடுத்தேன். மறு முனையில் வீணா.

- தொடரும்






No comments:

Post a Comment