பகுதி 14 - தாங்கிப்பிடித்த நட்பு
'நீ அவளுக்கு லெட்டர் எழுதினாயா?' என அவன் கேட்ட போது, இல்லை என்று என்னால் கூற முடியாது. அவன் தெரிந்து கொண்டுதான் கேட்கிறான் என தெளிவாக தெரிந்தது.
'ஆமாம் .... பட், அது உனக்கெப்படி தெரியும்' என்றேன்.
'எனக்கு மட்டும் இல்ல, காலேஜ்கே தெரியும் இப்ப' என்றான்.
'எப்படி?' என்றேன்.
'அது காலேஜ் காரிடோர்ல கெடந்திருக்கு, ஏதோ ஒரு சீனியர் அத எடுத்து படிச்சிருக்கான், அப்றம் அத கொண்டு போய் அவன் ரூம்ல இருந்த எல்லோருக்கும் காமிச்சிருக்கான், அங்கயும் எல்லாரும் படிச்சிட்டு, வேற வேற ரூம்க்கு போய்ட்டு இப்ப என் ரூம்ல என்கிட்ட தான் இருக்கு' என்றான்.
கேட்கவே அதிர்ச்சியாய் இருந்தது எனக்கு. அவன் சொன்ன ரூமில் இருந்தவர்கள் எல்லோருமே தண்ணி பார்ட்டிகள். ராத்திரி சரக்கடிக்கும் வேளைகளில் இதைத்தான் சத்தமாக படித்து சிரித்திருப்பார்கள் என நினைத்து பார்க்கவே கேவலமாய் இருந்தது. உள்ளுக்குள் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
'சரி ஆனது ஆய்போச்சு, ரூம்க்கு வா, அத உன்கிட்டயே குடுத்துடுறேன்' என்றான்.
அவன் அதை குடுத்த போது, எவ்வளவு பார்த்து பார்த்து ரகசியமாக எழுதிய என் உணர்வுகள் இப்படி சந்தி சிரிக்கும்படி ஆகிவிட்டதே எனும் துயருடனேதான் வாங்கினேன். வாங்கிவிட்டு வெளியே வரும்போது நேரம் இருட்டி இருந்தது. என் ரூமை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். போகும் வழியில் ஒரு சிறு பாலம் வந்தது. அதன் குட்டி சுவற்றில் அமர்ந்தேன். அந்த சாலையில் யாருமே இல்லை, அமைதியாக இருந்தது, பாலத்தின் கீழே ஓடைத்தண்ணீரின் சலசலப்பு சத்தம் மட்டுமே கேட்டது. கையில் இருந்த அந்த நோட்டை பார்த்தேன், அதை எழுதியதும், அவளிடம் கொடுத்ததும், அதை படித்தபின் அவளின் சிரிப்பும், திருப்பி தரமாட்டேன் என அவள் சொன்னதும், அதன் பின் அவளிடம் ஏற்பட்ட மாற்றங்களும், அதனால் எனக்கு கிடைத்த மகிழ்ச்சியும் எல்லாம் நிலைப்பதற்குள் இன்று சீனியர்களும், என் கிளாஸ்மேட்ஸ்களும் என்னை பார்த்த பார்வையும், இன்று சேகர் சொன்ன விஷயங்களையும் நினைத்து பார்த்து கோபம் தலைக்கேற அந்த நோட்டின் பக்கங்களை சுக்கு நூறாக கிழித்து அந்த ஓடையில் வீசினேன். அவளுக்காய் எழுதிய என் முதல் எழுத்துக்கள் இப்படி நீருக்கு இரையாகும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
அங்கிருந்து வேகமாக ரூமுக்கு சென்று யாருடனும் முகம் குடுத்து கூட பேசாமல் கதவை டமார் என மூடி விட்டு உள்ளே சென்று பாயில் படுத்து போர்வையை இழுத்து மூடிக்கொண்டு, இன்று நடந்தவை எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும் என்று கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டு உறங்க முயற்சித்தேன். கோகுல், சம்பத், ஜெயசங்கர் மூவருமே அறையில் இருந்தனர். எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதென்றால் இவர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு வார்த்தை கூட அவர்கள் அதைப்பற்றி என்னிடம் கேட்கவே இல்லை. என்னால் உறங்கவும் முடியவில்லை, வெளியே அவர்கள் பேசிக்கொண்டிருப்பது சல சலப்பாக என் காதில் விழுந்தது.
'என்னடா நைட் சாப்ட கூட இல்ல ...., உள்ள பொய் கதவ சாத்திட்டான்' என்றான் சம்பத்.
'விடு மச்சி ரொம்ப ஃபீல் பன்றான் போல.... ஃப்ரீயா விடு' பாத்துக்கலாம் என்றான் கோகுல்.
'எப்டி மச்சான் வெளிய போயிருக்கும்?' என்றான் ஜெயசங்கர்.
மேற்கொண்டு எதையும் நான் கேட்கவில்லை என்னையும் அறியாமல் உறங்கிப்போனேன்.
காலை எழுந்து எதுவும் பேசாமல் வழக்கம் போல கிளம்பி கல்லூரிக்கு சென்றேன். கல்லூரிக்கு சீக்கிரம் போய் விட்டால் காலேஜ் கேண்டீனில் டீ குடிக்க நேரமிருக்கும். கோகுல் அன்று டீ குடிக்க போகலாம் என்று கூட்டிப்போனான். போய் நாங்கள் நால்வரும் ஒரு டேபிளில் அமர்ந்தோம். அப்போதும் ஒரு சில சீனியர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு போவதை என்னால் உணர முடிந்தது, இனி இது இப்படிதான் இருக்கப்போகிறது, நாம்தான் கடந்து செல்ல வேண்டும் என ஒருவாறு உள்ளுக்குள் முடிவு செய்தேன். அப்போது தினேஷ் எனும் ஒரு விஷமத்தனம் கொண்ட ஒருவன் வம்பிழுப்பதற்கென்றே எங்கள் டேபிளில் ஒரு ச்சேரை இழுத்து போட்டு அமர்ந்தான்.
'என்னடா சூப்பர்....உன்ன பத்தி என்னென்னவோ கேள்விப்படுறேன், உண்மையா ....' என நக்கலாக கேட்டான்.
நான் வாயை திறப்பதற்குள் 'ஏன் உனக்கென்ன பிரச்சினை .....?' என்று கோகுல் அவனை பார்த்து கேட்டான்.
'இல்ல மச்சி, வீணாக்கு ஏதோ லெட்டர்லாம் குடுத்தானாம்....' என்றான் தினேஷ்.
'ஆமா குடுத்தான்....இப்ப என்னான்ற....' என்றான் ஜெயசங்கர்.
'கூட படிக்ற பொண்ணுக்கு லெட்டர் குடுத்துருக்கான் என்னன்னு கேக்க மாட்டீங்களா...?' என தொடர்ந்தான் தினேஷ்.
'வீணா வந்து உன் கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணாளா? அது அவங்க ரெண்டு பேருக்குமான பர்சனல் விஷயம்.... உனக்கென்ன வந்துச்சு, உன்னால முடிஞ்ச நீ குடு .... குடுத்துதான் பாரு என்ன நடக்குதுன்னு' என கோகுலும் தொடர்ந்தான்.
'அதில்ல மச்சி ....' என சமாளிக்க முற்பட்டவனை
'ஏன் இதே அவன் படிச்சி ஃபர்ஸ்ட் மார்க் வாங்குனப்ப என்னன்னு வந்து கேட்டியா, அப்பல்லாம் என்ன புடுங்கிட்டா இருந்த, மூடிட்டு கிளம்புடா ....' என்று மிரட்டியே விட்டான் கோகுல்.
விருட்டென்று ச்சேரை தள்ளி விட்டு அங்கிருந்து நகர்ந்தான் தினேஷ்.
'இவனுங்களுக்கெல்லாம் இதான் மச்சி வேல .... சும்மா கெளம்பி வந்துடுவானுங்க எப்ப எவன் சிக்குவான்னு' என்று சம்பத்தை பார்த்து சொன்னான் கோகுல்.
கடைசி வரை நான் வாய் திறக்க வேண்டிய அவசியமே வரவில்லை, இதே அவர்கள் உடன் இல்லாமல் நான் தனியாக இருந்திருந்தால் அவன் பேச்சு இன்னும் வேறு விதமாக இருந்திருக்கும். எதுவுமே சொல்லாமல் நான்தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்க கூடும்.
இங்கு நடந்த விஷயங்கள் எதுவுமே வீணாவுக்கு தெரிந்ததாய் தெரியவில்லை. எப்போதும் போல வகுப்புக்கு வந்தாள், வகுப்புகளுக்கு நடுவில் அவ்வப்போது என்னை பார்த்தாள். நான் அவளை பார்க்கவில்லை. மாலை நாங்கள் பேசும் இடத்தில் எனக்காக காத்திருந்தாள். நான் நண்பர்களுடன் பேசிக்கொண்டே அவளை கடந்துதான் சென்றேன், அவள் பக்கம் திரும்பக்கூடவில்லை. அவள் முகம் மாறியதை என்னால் உணர முடிந்தது. ஒரு விஷயம் மட்டும் புரிந்தது அந்த லெட்டர் அவளிடமிருந்து தொலைந்திருக்கிறது என்பது கூட அவளுக்கு இன்னும் தெரியக்கூட இல்லை என்பது. ஆனால் இப்போது நான் இருக்கும் மனநிலையில் அவளிடம் பேசினால் அவளிடம் கோபப்பட்டு விடுவேன், அதை எப்படியும் யாரேனும் கண்டுவிடக்கூடும் என்பதனாலேயே அவளிடம் பேசுவதையே தவிர்த்து வந்தேன். அந்த வார இறுதியில் நான் வீட்டுக்கு சென்றதும் அவள் அக்கா வீட்டிலிருந்து ஃபோன் கால் வந்தது.
'என்ன சார், ஒரு வாரமே கண்டுக்கேவே இல்ல, ரொம்ப பிஸி ஆய்ட்டீங்களோ' என்றாள்.
'கண்டுக்கற மாதிரி காரியமா பண்ணி வச்சிருக்க' என்றேன்.
'ஏன், என்னாச்சு' என எதுவுமே புரியாமல் கேட்டாள்
'நான் உனக்கொரு லெட்டர் எழுதினேனே, அது எங்க' என்றேன்
'என்கிட்ட தான் இருக்கு, ஏன் கேக்ற?' என்றாள்
'இல்ல, அது உன்கிட்ட இல்ல, அது யார் யார் கைக்கோ போய், சீனியர்ஸ் உள்பட எல்லாரும் அத படிச்சி, நம்ம கிளாஸ் சேகர் வரைக்கும் போயிடுச்சு, அவன்தான் என் கிட்ட குடுத்தான், அத எழுதுன நானே கடைசில என் கையாலயே அதே கிழிச்சி போட்டேன்' என சொல்லி முடித்தேன்.
அவள் முழுவதுமாக மௌனமாகி போனாள். 'என்னடா சொல்ற.... உண்மையாவா... அது என் பேக் லதாண்டா இருந்துச்சி... எப்படி வெளில போச்சுன்னு தெரியலடா...' என்று குரல் தழுதழுத்தவாறே பேசினாள்
'உனக்கு அது தொலஞ்சி போச்சுன்னு கூட தெரியலல்ல....' என்றேன்
'இல்லடா , ஏதோ புக்ஸ் வெளில எடுத்துட்டு உள்ள வைக்றப்போ மிஸ் பண்டேன் போல' என்றாள்
'அப்பவே சொன்னேன் திருப்பி குடுன்னு, நானே வச்சுக்குவேன்னு சொன்னியே ஒழுங்கா வச்சிக்க முடிஞ்சிதா உனக்கு .... அவ்ளோ என்ன கேர்லெஸ்நெஸ் உனக்கு' என என்னையும் அறியாமல் அவளை நன்றாகவே திட்டிக்கொண்டிருந்தேன். அவளும் ஒரு வார்த்தை பேசாமல் அமைதியாக வாங்கிக்கொண்டிருந்தாள்.
ஒருவரிடம் பேச மாட்டோமா என ஒரு காலத்தில் ஏங்குகிறோம், அதே அவர்கள் நம்மை அனுமதித்த பிறகு அதீத உரிமை எடுத்துக்கொண்டு திட்ட ஆரம்பிக்கிறோம். நடந்த விஷயம் அவள் வேண்டுமென்று செய்யவில்லை தான், ஏதோ அவள் கை மீறி நடந்து விட்டது. அதை புரிந்து நடந்து கொண்டிருக்கலாம். ஆனால் அப்போது அவ்வளவு முதிர்ச்சி இல்லை.
'என் மேலதாண்டா தப்பு, நான் கொஞ்சம் கவனமா இருந்துருக்கனும், இப்ப என்ன பண்ண முடியும், எல்லாரும் படிச்சாச்சு, அத நம்மளால இனி மாத்த முடியாது, உன் கோபமும் சரிதான், இன்னும் நாலு திட்டு வேணா திட்டிக்கோ, ஆனா இனி என்ன பண்ணலாம்னு யோசிப்போம்' என்றாள்.
'என்ன பண்ணலாம், நீயே சொல்லு' என்றேன்.
- தொடரும்
No comments:
Post a Comment