Monday, January 13, 2025

என்றென்றும் புன்னகை

பகுதி 10 - நீ வருவாய் என

அடுத்த நாள் காலை எங்களுக்கு கொடைக்கானலில் விடிந்தது. பையன்கள் எல்லோரும் சீக்கிரம் தயாராகி பஸ்ஸில் வந்து உட்கார்ந்தோம். பெண்கள் ஒவ்வொருவராக தயாராகி வந்து கொண்டிருந்தனர், எல்லோரும் அவரவர்களின் சிறந்த உடைகளை உடுத்தி வந்திருந்தனர், சில பெண்கள் மாடர்ன் ட்ரஸ் என்ற பேரில் பேண்ட் சட்டை அணிந்திருந்தனர். என் கண்கள் வீணாவிற்காக காத்திருந்தது. இன்று எப்படி வரப்போகிறாள் என்ற எதிர்பார்ப்பு சிறியதாக தொற்றிக் கொண்டது. சாதாரண நாட்களிலேயே அவளின் ட்ரெஸ்ஸிங் ஸென்ஸ் மற்ற பெண்களை விட ஒரு படி அதிகமாகத்தான் இருக்கும். வட்டக்கழுத்து சுடிதார்கள் அனிந்து வரும் பெண்கள் மத்தியில் V neck சுடிதார்களை அவள் மட்டுமே அன்றைய நாட்களில் அணிந்து வருவாள். அந்த V மறையாத வண்ணமே துப்பட்டாவும் அணிந்து வருவாள். அது சில நேரம் ஒரு தோளில் மட்டும் இருக்கும் சில நேரம் இரு தோள்களிலும் இருக்கும். கடைசியில் ஹோட்டலில் இருந்து இறங்கிய அவளின் தோற்றம் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கொஞ்சமும் தவறவில்லை. ப்ளேன் சுடிதார்தான் ஆனால் அத்தனை நேர்த்தியாகவும் அழகாகவும் இருந்தது. கல்லூரிக்கு உடுத்தி வரும் ஆடைகளை விட சிறந்த ஆடைகள் அவளிடம் உண்டென்பதை உடுத்தி காட்டி விட்டாள். தோழிகளுடன் சேர்ந்து வந்து பஸ் ஏறியவளை முன் சீட்டில் அமர்ந்திருந்த காஜாவும் வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டுதானிருந்தார். அவரை சற்றும் கண்டு கொள்ளாமல் அவள் இருக்கைக்கு வந்து ஒரு சிரிப்பை மட்டும் காட்டிவிட்டு அமர்ந்து கொண்டாள். வண்டி கிளம்பியது.

வகுப்பில் நடக்காதது இந்த ட்ரிப்பிலாவது நடக்குமா என்று எனக்குள் ஒரு எண்ணம். என்ன என்று கேட்கிறீர்களா... அதான் தனியே நாங்களிருவரும் பேசிக்கொள்ளும்போது எங்களுக்குள் ஏற்படும் ஒரு நெருக்கம் மற்றவர்கள் முன்பும் நிகழ வேண்டும் என்பதுதான். அது ஒரு தீரா ஆசையாக என்னுள் தொற்றிக் கொண்டது. அது நடந்தால் அது மற்றவர்கள் முன்பு என்னை கொஞ்சம் பெருமையாக காண்பிக்கும் என்கிற ஒரு மாய பிம்பம். அன்றைய நாட்களில் எல்லோரின் முன்பும் ஒரு பையனும் பெண்ணும் தனியாக தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அது அந்த பையனுக்கோர் பெருமை, அவர்கள் காதலர்களாக அல்லது வருங்காலத்தில் காதலர்கள் ஆகப்போகிறவர்களாக பார்க்கப்படுவார்கள். அந்த அளவிற்கெல்லாம் காட்டிக்கொள்ளும் எண்ணம் எனக்குள் இல்லை என்றாலும் அவளாக வந்து என்னுடன் நின்றோ, அமர்ந்தோ பேசிக்கொண்டிருந்தால் அது எனக்கு அவள் நெருக்கமானவள் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் என்கிற ஒரு உணர்வு. அப்படியொரு பிம்பத்தை உருவாக்கி விட வேண்டுமென்ற ஆசை. ஆனால் அது நானாக போய் போய் அவளிடம் பேசி வழிவதாக ஆகிவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தேன். இந்த எண்ண ஓட்டங்களுடன் நான் அமர்ந்திருக்க நாங்கள் பார்க்க வேண்டிய இடத்தை அடைந்தோம்.

அந்த இடம் ஒரு அழகான பூங்கா. பச்சைப்பசேலென புல்வெளி நிறைந்திருந்தது, ஆங்காங்கே வழித்தடங்கள். பையன்கள் எல்லோரும் ஓடிச்சென்று ஒரு சரிவான புல்தரையை கண்டு பிடித்து அதன் மேட்டிலிருந்து  தாழ்வுப்பகுதிக்கு உருண்டு வருவோம், யார் முதலில் வருவோம் பார்க்கலாம் என எல்லோரும் அந்த புல் தரையில் உருள ஆரம்பித்தோம். நான், சம்பத், கோகுல், செழியன், இன்னும் சில பேர். உருள ஆரம்பிக்கும்போது எங்களுக்கு தெரியவில்லை சரிவில் வேகம் அதிகரிக்கும், எங்களை எங்களாலே கட்டுப்படுத்த முடியாமல் போகும் என்று. உருண்டு கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு விதமான குரல். 'மச்சான் கன்ட்ரோல் போகுதுடா....' என கோகுல், 'ஆமா , ஸ்பீட் பிரேக்கர் எதாவது வரணும்...' என சம்பத், 'தல சுத்துதுடா ....' என கத்திய செழியன் ட்ராக் மாறி வேறு பக்கம் உருள ஆரம்பித்து விட்டான். ஒரு வழியாக நிலைக்கு வந்து எல்லோரும் தடுமாறி எழுந்து நின்ற போது செழியனை காணவில்லை. கொஞ்சம் தள்ளி இன்னொரு இடத்தில் அவனை சுற்றி நான்கு பேர், அவன் சட்டையைப்பிடித்து மிரட்டிக்கொண்டிருந்தனர், ஒரு பட்டு வேட்டி சட்டை போட்டிருந்த ஆள் செழியனை அடிக்க கையை ஓங்கினான். ஏதோ அசம்பாவிதம் போல என எல்லோரும் ஓடிச்சென்று அடிக்க வந்தவனை தடுத்து நிறுத்தி என்னவானது என விசாரித்த போதுதான் சம்பவம் புரிந்தது, அங்கே புதிதாக கல்யாணமான ஒரு தம்பதியருக்கு அவுட்டோர் வீடியோ ஷீட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் போல. அங்கே பட்டுப்புடவையும், நகையுமாக, கன்னத்தில் கை வைத்தவாறு மணப்பெண்ணை புல்தரையில் அமரவைத்து வீடியோ எடுத்துக்கொண்டிருக்க, வழி மாறி உருண்டு  வந்த செழியனின் இரு கால்களுக்கு நடுவே அந்த மணப்பெண் மாட்டிக்கொண்டு விட்டாள் என்று. சொல்லப்போனால் தன்னை நிறுத்த முடியாமல் உருண்டு வந்தவனை அவள்தான் நங்கூரம் போல அவன் இரு கால்களுக்குமிடையே மாட்டி நிறுத்தி இருக்கிறாள். சும்மா இருப்பானா மாப்பிள்ளை, சட்டையை மடித்துக்கொண்டு அடிக்க வந்து விட்டான். பிறகு அவர்களை சமாதானப்படுத்தி, தெரியாமல் நடந்து விட்டதென மன்னிப்பு கோரி கூட்டி வருவதற்குள் போதும் போதும் என ஆகி விட்டது. ஆனால் கடைசி ஆண்டு வரை விழுந்து புரண்டு சிரித்த சம்பவம் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும். 

அங்கிருந்து நடந்து வந்துகொண்டிருந்த போது 'சுப்பு' என ஒரு குரல், அழைத்தது சவீதா. 'எங்களை ஒரு போட்டோ எடுக்றியா' என கேமிராவை நீட்டினாள், அங்கே வீணா, சவீதாவுடன் இன்னும் இரு பெண்கள். அவர்களை இரு செடிகளுக்கு நடுவே சற்று சரியாக நிற்க சொல்லி லென்சில் ஒரு கண் மூடி பார்த்தேன். வீணா சிரிக்க ஆரம்பிக்க கரெக்ட்டாக க்ளிக்கினேன். மற்ற யாரும் என் ஃபோக்கஸிலேயே இல்லை. அந்த கேமராவின் லென்ஸ் தானாக வெளியே வந்து தன்னைத்தானே சரி செய்து கொண்டு போட்டோ எடுத்தது அடுத்த பிலிமுக்கும் அதுவே மாற்றிக் கொண்டது. 'ஆட்டோமேட்டிக் கேமராவா, நல்லா இருக்கே ... யாரோடது?' என்றேன். 'என்னோடதுதான்.... ஆக்ட்சுவலா என் அண்ணனோடது....' என்றாள் வீணா. 'நல்லாருக்கு....' என சொல்லி விட்டு அவளிடம் திரும்ப குடுத்தேன். மீண்டும் பஸ்ஸுக்குள் ஏறினதும் 'அந்த கேமராவை தறியா' என்றேன். உடனே தந்தாள். 'நான் கொஞ்சம் சீனரீஸ் எடுக்கிறேன்' என்றேன். அப்படியே அந்த உரையாடல் தொடரும் என நினைத்தேன் ஆனால் ஆவள் 'ஓக்கே....' என்று மட்டும் சொல்லி விட்டு ஜன்னலுக்கு வெளியே பார்க்க ஆரம்பித்து விட்டாள். நான் என் இடத்தில் போய் அமர்ந்து கொண்டேன். சரி அவள்தான் உடன் இல்லை அவள் கேமராவது உடன் இருக்கிறதே என்ற எண்ணத்துடன் வண்டி நகர நகர கண்ணில் படும் சில இயற்கை காட்சிகளை க்ளிக்கிக்கொண்டிருந்தேன். சொல்லப்போனால் பிலிம் ரோலை வீணடித்துக்கொண்டிருந்தேன். 

அன்றைய இரவு ஓட்டலின் முன்பு கேம்ப் ஃபயர் வைத்தார்கள். விறகுக்கட்டைகளை கொளுத்தி சுற்றி எல்லோரும் குளிர்காய, சிறிது நேரத்திற்கெல்லாம் பாடல்கள் ஒலிக்க துவங்க, சுற்றி நின்று எல்லோரும் ஆட ஆரம்பித்தோம். ஜிதின் எனும் ஆந்திரா பையன்தான் அப்போது எங்களுக்கு டான்ஸ் மாஸ்டர், சிரஞ்சீவி ஃபேன், எந்த பாடல் போட்டாலும் உடனே ஸ்டெப் போட்டு விடுவான். நாங்கள் அதே ஸ்டெப்பை ஃபாலோ செய்வோம். அப்படியே குதூகலமாக ஆடிக்கொண்டிருந்த போது. சால்வையை சுற்றிக்கொண்டு வீணா சிரித்துக்கொண்டே இறங்கி வந்தாள். ஆடிக்கொண்டிருந்த நான் ஒரு நிமிடம் நின்றேன், எனக்கு அப்போது 'பனிவிழும் இரவு .....' பாடல் ஒலிக்க வேண்டும் போல தோன்றியது. 'மச்சி ஆட்றா....' என கோகுல் தள்ளி விட மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. நாங்கள் ஆடிக்கொண்டிருந்ததை பார்க்க ஆரம்பித்தவளின் தலை மட்டும் பீட்டுக்கேற்றார்போல ஆடிக்கொண்டிருந்தது. ஆடிக்கொண்டிருந்த நாங்கள் பெண்கள் பக்கமும் போய் ஆட இழுத்தோம், அவர்களுக்கு ஆசைதான் ஆனாலும் வாத்திகள் ஏதாவது சொல்லிவிடுவார்கள் என வர வில்லை. குதூகலமாக ஆட்டம் முடிந்து இரவு உணவு உண்டுவிட்டு அவரவர் அறைக்கு சென்றோம். ஒரு அறையில் நான்கைந்து பேர்களாவது இருந்தோம். நான், கோகுல், சம்பத், செழியன் ஒரு அறை. எங்கள் அறைக்கு பக்கத்து அறையில் ஆசிரியர்கள் அறை.... ராத்திரி தண்ணி போல... பக்கத்து அறையில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தது சுவரில் காது வைத்தால் நன்றாகவே கேட்டது. காஜா வின் குரல்தான் (குமுறல்தான்) சற்று அதிகமாக இருந்தது. 'என்னா சார் இந்த பசங்க ..... ஒருத்தனும் சரியில்ல..... பொம்பள புள்ளைங்கள ராத்திரில ஆட கூப்புட்றானுக..... இந்த பொண்ணுங்களுக்கு நாமதான சார் பாதுகாப்பு குடுக்கனும்.... நம்மள நம்பிதான வந்துருக்குதுக.....' என்றார். கம்ப்யூட்டர் வாத்தியார் 'சரி அகமது, இப்ப சாப்ட்டு படு.... காலைல எந்திச்சி பாதுகாப்பு குடுக்கலாம்....' என அவரை ஆஃப் பண்ண முயற்சி செய்து கொண்டிருந்தார். 

அடுத்த நாள் மூணார் பயணம். மூணாரை அடைந்த போது இரவாகி போனது. ஒரு ஓட்டலுக்குள் சாப்பிட போனோம். கேரளாவில் என்ன ஸ்பெஷல் என எல்லோரும் வீணாவை நோக்கி கேட்க அவள் பரோட்டாவையும் பீஃப் கரியையும் ஆர்டர் செய்து விட்டாள். நான் அப்போது நான்வெஜ் சாப்பிட மாட்டேன் என்பதால் தோசையுடன் நிப்பாட்டி விட்டேன். சாப்பிட்டு விட்டு பஸ் ஏறியவர்களுக்கு அப்போது புரியவில்லை சாப்பிட்ட பீஃப் கரி வேலையை காட்டப்போகிறதென்று. எல்லோருக்கும் அடிவயிற்றை கலக்க ஆரம்பித்து விட்டது போலும். செழியன் புலம்ப ஆரம்பித்து விட்டான் 'என்னத்த வாங்கி குடுத்த வீணா, அடக்க முடில' என அடி வயத்தை பிடித்துக்கொண்டு உருண்டு கொண்டிருந்தான். ஓட்டல் வந்ததும் பாய்ந்தடித்துக்கொண்டு கழிவறை சென்ற பிறகுதான் எல்லோரும் சகஜ நிலைக்கே வந்தனர். அடுத்த நாள் காலை அடுத்த ஓட்டலுக்குள் சென்றதும் 'என்ன செழியா.... இன்னைக்கு ஏதாவது ஆர்டர் பண்ணனுமா' என்றாள். 'அம்மா தாயே.. ஆள விடுமா' என கையெடுத்து கும்பிட்டான் செழியன்.

ஒருவழியாக ட்ரிப் முடிந்து வீடு திரும்பினோம் ஆனால் கடைசிவரை நான் நினைத்து நடக்கவே இல்லை. ஒருசில தருணங்களை நானாக அமைக்க முயற்சி செய்தாலும் அதை அவள் புரிந்து கொள்ளவே இல்லை. உண்மையில் எங்களுக்குள் அப்படி ஒரு நெருக்கம் இருக்கிறதா? இல்லை நான்தான் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறேனா என சந்தேகமே எழத் தொடங்கி விட்டது என்னுள். 

- தொடரும்

No comments:

Post a Comment