Friday, January 10, 2025

என்றென்றும் புன்னகை

பகுதி 9 - வளையோசை கல கல கலவென

சீனியர் கூப்பிட்டதும் எந்த சலனமுமின்றி உடன் சென்றாள் வீணா. கூப்பிட்டு வரச்சொன்னவர் உமேஷ் எனும் சீனியர், முதலாமாண்டு கல்லூரி ஆண்டு விழாவில் அவர் போட்ட அரசியல்வாதி வேடம் வெகுவாக கவனிக்கப்பட்டது. திறமைசாலிதான், ஆனால் அவர் பார்வை வீணாவின் மேல் விழும் என எதிர்பார்க்கவில்லை. தன்னை ப்ரபோஸ் செய்வதற்காகத்தான் சீனியர் கூப்பிட்டிருக்கிறார் என தெரிந்துதான் செல்கிறாளா என தெரியவில்லை. இன்று மீண்டுமொரு முறை அழப்போகிறாளா, இல்லை சீனியருக்கு பயந்து ஒத்துக்கொள்வாளா என ஏகப்பட்ட சிந்தனை ஓட்டம். திரும்ப வந்தவளிடம் எந்த மாற்றமும் இல்லை எப்படி போனாளோ‌அப்படியேதான் திரும்ப வந்தாள். அன்றைய தினம் முடிந்து வகுப்பிலிருந்து வெளியே கிளம்பும் நேரம் அவளிடம் கேட்டு விட வேண்டும் என முயற்சித்தேன், முடியவில்லை. வழக்கம் போல் தோழிகள் மொய்த்துக்கொண்டிருக்க அவர்களுடனே கிளம்பி விட்டாள். அவர்கள் முன்னால் செல்ல சிறிது இடைவெளி விட்டு நான் பின்னால் செல்ல, அவர்கள் தரை தளத்திற்கு செல்ல படி இறங்கியதும் சட்டென திரும்பி பார்த்தவள் அவள் மட்டும் திரும்ப வந்தாள். 

'என்ன திரும்ப வர' என்றேன் 

'கர்ச்சீஃப் மறந்துட்டேன்னு, அவங்க கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன் ' என சிரித்துக்கொண்டே கண்ணடித்தாள் 

'என்ன ஆச்சு, சீனியர் என்ன சொன்னார்' என கேட்டேன் 

'அத ஏன்டா கேக்றே.... லவ் பண்றாராம்... நீ பண்ணுவியானு ....கேட்டாருடா' என்றாள் 

'நீ என்ன சொன்ன...' என்றேன்

'நான்ல .... சிரிச்சிட்டே போங்கன்னா அதெல்லாம் பண்ண முடியாதுனு, சொல்ட்டு வண்ட்டேன்...' என்றாள்.

'ஏ...' என நான் ஆரம்பிக்கும் முன்பே 

'சரி சரி.... டைம் ஆச்சு கீழ ஃப்ரண்ட்ஸ் வெய்ட் பன்றாங்க, நான் அப்றம் பேசுறேன்' என சொல்லி விட்டு வேகமாக இறங்கி சென்று விட்டாள்.

மனதிற்குள் ஒரு சிறிய நிம்மதி.

இரண்டாம் வருடம் மாணவர்களே ஏதாவது ஒரு டாபிக்கை படித்து ஆசிரியர்களை போல பாடமெடுக்க வேண்டும். செமினார் என்று அதை சொல்லினார்கள். ஏற்கனவே சிவகாமி சில வகுப்புகள் எடுத்திருந்தாள், அவளுக்கு ஆசிரியை ஆக வேண்டும் என்பதுதான் எண்ணமாம். வித்யப்ரியாவும் சில வகுப்புகள் எடுத்திருந்தாள். ஆண்கள் பக்கம் வந்த போது எவனும் எடுக்க தயாராக இல்லை. அத்தனை பேரும் சொல்லி வைத்தாற்போல இவன்தான் டாப்பர், இவனே எடுக்கட்டும் என என்னை கை காட்டி விட்டனர். நான் எடுக்க வேண்டும் என ஆகிவிட்டது. நாம் ஒரு விஷயம் செய்ய வேண்டுமானால் அதற்கு ஏதோ ஒரு உந்துதலோ, ரெபரன்ஸோ தேவைப்படும். அப்படி என்‌எண்ணத்தில் முதலில் வந்தவர் +2 வில் Botany எடுத்த சுந்தர் சார். அளவான தேகம், தடித்த மீசை, வகிடெடுத்து வாரிய தலை, முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்து விட்டிருக்கும் விதம். போர்டில் வரையும் தெளிவான படங்கள் மற்றும் எழுத்துக்கள் என அவரின் ஒவ்வொரு குணாதிசயங்களையும் நன்கு கவனித்து வைத்திருந்தேன். அன்று அவரை ப்ரதி எடுத்தது போல அதே மாதிரி உடை உடுத்தி, முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்து விட்டுக்கொண்டு வகுப்பில் முன் நின்று Electronics ல் Band Pass Filter எனும் Topic ஐ எல்லோருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக எழுதி விளக்கினேன். அவரைப்போலவே என்னை நினைத்துக்கொண்டதினால் மேடைபயம் சற்றே குறைந்தது. அன்று பாடமெடுக்கும் போது நான்கு பேரின் மீதுதான் என் பார்வை இருந்தது. முதல் வரிசையில் அமர்ந்திருந்த கோகுல், பெண்கள் பக்கம் முதல் வரிசையில் இருந்த சிவகாமி, இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்த வீணா, ஆண்கள் பக்கம் இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்த சம்பத். நான்கு பேருமே நன்கு கவனித்து எழுதிக்கொண்டிருந்தனர். எடுத்து முடித்ததும் வகுப்பே கை தட்டியது. ஆசிரியரும் குட் ஜாப் என்றார். 

இடைவேளை வந்ததும் சிவகாமி மட்டும் வந்து 'நன்கு புரிந்தது சுப்ரமணி' என்று சொன்னாள். 'தேங்க் யூ, சிவகாமி' என்றேன். அவள் சென்றதும் கோகுலும், சம்பத்தும் வந்தனர். 'கலக்கிட்டான்ல மச்சி ' என்றான் கோகுல் சம்பத்தை பார்த்து 'இந்த வாத்திங்கெல்லாம் தேவையே இல்லை, இவனே போதும்' என்றான் கோகுல். 'ஆமாமா.... என்னென்னமோ திறமைகள் இருக்கு உள்ள' என்றான்‌ சம்பத். பிறகு கோகுல் சென்று விட, சம்பத் மட்டும் தனியே பேச ஆரம்பித்தான். 'நானும் பாத்துட்டு தான் இருந்தேன், உன்னையே வச்ச கண்ணு வாங்காம அப்படி பாக்கிறா.....' என்றான்.

'யாருடா....?' என்றேன்.

'அதான் உன்‌ கேரளா‌ ஃப்ரெண்ட்டு..... ஒன்னும் சரியில்லடா சூப்பரு.... பாத்துக்கோ' என்றான்‌ நக்கலாக.

முக்கியமான மூன்று பேரும் சொல்லியாகி விட்டது. நான்காவது ஆளை காணவேயில்லை. சில எதிர்பார்ப்புகள் இப்படிதான் ஏமாற்றம் தரும்.

அடுத்த நாள் காஜா அகமது இரண்டாம் வருடத்துக்கான டூர் அறிவித்தார். குற்றாலம், கொடைக்கானல் மற்றும் மூணார். வீட்டில் சொன்னேன் முதல் மதிப்பெண் வாங்கி காட்டியதாலோ என்னவோ அப்பா ஒத்துக் கொண்டார். டூர் தொடங்கியது. பஸ்ஸில் பாடல்கள் ஒலிக்க ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக பயணம் தொடங்கியது. குற்றால அருவியில் குளிக்க எல்லோரும் இறங்க தயாராகி கொண்டிருந்தோம். ஆனால் எங்களுக்கு முன்பே வாத்தியார்கள் குளிக்க சென்று விட்டனர். சட்டை பேண்ட்டை கழற்றி விட்டு ஷார்ட்ஸ் மட்டும் போட்டுக்கொண்டு கம்பீரமாக குளிக்கச்சென்ற காஜா அகமது அருவியின் நீர் வேகத்தையும் குளிரையும் தாங்க முடியாமல் சீக்கிரமே ஓடி வந்து விட்டார். '"ரொம்ப குளிருதுடா, பாத்து குளிங்க... பி கேர் ஃபுல்" என முகத்தை கெத்தாக வைத்துக்கொண்டு சொன்னவரின் கழுத்துக்குக்கீழே சகலமும் ஆடிக்கொண்டிருந்தது. 

குற்றாலம் முடிந்து கொடைக்கானல் மலை மேல் ஏறத்துவங்கிய போது நல்ல டேன்ஸ் பாடல்கள் போட்டு இருபக்க இருக்கைகளின் இடையே இருக்கும் இடைவெளியில் நண்பர்கள் ஆடத்தொடங்கி விட்டனர். ஆட்டத்தின் நடுவே ஆசிரியர்களையும் ஆட கூப்பிட்டனர். காஜா நான் போடுகிறேன் பார் ஸ்டெப் என கெத்தாக எழுந்து வத்தார். அப்போதே அவரை தாக்க ஒரு திட்டம் போட்டோம். சம்பத் மட்டும் அவர் ஒரு ஆண் வாத்தியார் என்பதனால் கொஞ்சம் கரிசனம் காட்டினான். ரமணாவில் ஒரு மாணவன் சொல்வது போல் 'கொல்லும்போது வலிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்' என்பது போல் சொன்னான். பஸ்ஸின் குலுக்கலில் இரு பக்க கம்பிகளையும் பிடித்து நடந்து வந்து பசங்களுக்கு நடுவே நின்று ஆரம்பித்தவர் பஞ்சாபி பல்லேலக்கா போன்று இரு கைகளையும் உயர்த்தி ஆட ஆரம்பித்தார். அப்போது சொல்லி வைத்தார் போல மலையில் ஒரு வளைவு வர, பஸ்ஸில் எல்லோரும் சரிய, தீனா எனும் ஒரு மாணவன் அவர் தோளில் சாய்வது போல தள்ளி விட்டான். நிலை தடுமாறி கீழே விழுந்தர் மீது நின்று கொண்டிருந்த எல்லோரும் மிதித்து தள்ளி விட்டனர். தீனா 'கழுத்திலயே மிதிச்சிறட்டுமா' என்றான். 'போதும் பாடிய தூக்குங்கடா' என்று எல்லோரும் தூக்கி விட மனுசன் தலை கலைந்து, சட்டை கசங்கி எழுந்து நின்றார். 'சாரி பஸ் சரிந்ததனால இப்டி ஆயிடுச்சு ' என அவரே சொல்லிவிட்டு போய் அவர் இருக்கையில் அமர்ந்து கொண்டார். 

இரவு சாப்பிட்டு விட்டு மீண்டும் பஸ்ஸில் ஏறிய போது. வீணா அமர்ந்திருந்த சீட் வரிசையிலேயே அவளின் இடது புறமிருந்த சீட்டிலேயே அமர்ந்து கொண்டேன். இரு சீடடுக்குமிடையே நடந்து செல்லும் இடைவெளி இருந்தது. இரவு எல்லோரும் தூங்கப்போகும் நேரமென்பதால் ராஜா கேசட் போட்டனர். முதல் பாடலே 'வளையோசை கல கல கல வென....' அவள் தூங்குவதற்காக இருக்கையை பின்னால் சாய்த்து தோளில் சிறிய தலையணை வைத்து உறங்க ஆரம்பித்தாள். அவள் முகம் என்னை நோக்கியவாறு இருந்தது. பாடல் முடிந்து அடுத்த பாடல் வந்தது. சட்டென எழுந்தவள் 'ஏய்.... அந்த பாட்ட திரும்ப போடுங்க.... வளையோசை பாட்டு கேட்டு ரொம்ப நாள் ஆச்சு' என சொல்லி விட்டு.... மீண்டும் கண் மூடினாள்.  பஸ்ஸில் விளக்குகள் அணைக்கப்பட்டது. அவள் உறங்கலை காண எனக்குள் ஒரு ஆர்வம். அவள் புறம் திரும்பி அவளின் கண்மூடிய முகத்தை நான் காணத்துவங்க மீண்டும் ஒலித்தது 'வளையோசை கல கல கலவென.......!!!!'

- தொடரும்

No comments:

Post a Comment