Tuesday, December 24, 2024

என்றென்றும் புன்னகை: பகுதி 5

பகுதி 5 - கண்ணாமூச்சி ஏனடா

அந்த கிஃப்ட்டை எடுத்துக்கொண்டு முதல் மாடியில் இருந்து வேகமாக இறங்கி தரை தளத்திற்கு வந்தபோது எதிரே மகேஷ் வந்து கொண்டிருந்தான். அவனை அங்கேயே நிறுத்தினேன். அந்த கிஃப்ட்டை அவன் கைகளில் திணித்தேன். 

'போதும் மகேஷ், இதோட எல்லாத்தையும் நிறுத்திக்கோ.அவதான் உன்ன புடிக்கலன்னு சொல்லிட்டால்ல, அப்றமும் ஏன்‌ அவளுக்கு தொல்லை குடுத்துட்டே இருக்க'  என்றேன்.

அவன் 'கேம்காகதான்....' என ஆரம்பித்தான் 

'சும்மா சமாளிக்காத.... அவ பேர நீ தெரிஞ்சிதான் எடுத்திருக்க, அது யாருக்கில்லன்னாலும் எனக்கு தெரியும். நீ கூப்ட்டதும் உன்‌ கூட வர டைப் இல்ல வீணா, அவ வேற, உனக்கது புரியாது,  எல்லாத்தையும் இதோட நிறுத்திக்கோ.‌ இனியும் அவள தொல்ல பண்ணாத' என எச்சரிக்கும் தொனியிலேயே சொன்னேன். அவனால் மறு வார்த்தை பேச முடியவில்லை.

இது நடந்து கொண்டிருந்த போதே வீணா எனக்கு பின்னால் எங்களை கடந்து சென்று கொண்டிருந்தாள். அவள் முகத்திலிருந்த வாட்டம் இன்னும் போகவில்லை. ஒரு நிமிடம் இருவருமே அவளை பார்ந்தோம். பின் நான் தொடர்ந்தேன் 'பார் அவளை, அவள நாம என்னிக்காவது இப்படி பார்த்திருக்கிறோமா. இன்னிக்கு உன்னாலதான் அவ இப்டி இருக்கா.... காதலிக்கிறேன்ற பேர்ல அவள தொடர்ந்து காயப்படுத்தாதே' என்றேன். அவன் பதிலேதும் கூறாமல் வேகமாக படியேறி வகுப்பறைக்குள் சென்று விட்டான். மீண்டும் ஒருமுறை அவளிடம் தோற்றதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்குமே எப்படிதான் அவனிடம் அப்படி பேச முடிந்ததென தெரியவில்லை. என் நட்பு வட்டத்தில் யாரையுமே இப்படி நேருக்கு நேர் நின்று எதிர்த்து பேசியதில்லை. அன்று அந்த சம்பவம் அவளால், அவளுக்காக நிகழ்ந்தது. அந்த சம்பவத்திற்கு பிறகு எனக்கும் அவனுக்கும் இருந்த பேச்சு சுத்தமாகவே நின்று போனது.

சிறிது நேரத்திற்கு பிறகு வகுப்பிற்குள் சென்ற போது எல்லாம் கொஞ்சம் சகஜ நிலைக்கு திரும்பி இருந்தது எல்லோரும் அவரவர் கிறிஸ்மா யாரென தெரிந்து கொள்ளும் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. என் கிறிஸ்மா யாரென கிஃப்ட்டை திறந்து பார்த்தால் அட நம்ம வித்யப்ரியா. மாதவரத்து மங்கை. அவளைக்காண்போர் அனைவரும் சொல்லும் முதல் வார்த்தை குடும்ப குத்துவிளக்கு. மாநிறம், சுருள் முடி, முத்துப்போல பல்வரிசை. என் நண்பர்கள் சிலர் அவள் முடியை கிண்டல் செய்யும் விதமாக 'புஸ்' என்றுதான் கூப்பிடுவார்கள், நான் அப்படி கூப்பிட்டதில்லை, எனக்கு அவளை பார்த்தால் பழைய அம்மன் படங்களில் வரும் KR விஜயா தான் நியாபகத்துக்கு வரும். தலையில் கிரீடமும், கையில் சூலாயுதமும் குடுத்து சிரித்த மேனிக்கே கர்ப்பக் கிரகத்துக்குள் உட்கார வைத்து விடலாம். சின்சியராக படிப்பவள், எப்போதும் எதையும் நேர்மையாக மட்டுமே செய்ய தெரியும்.  ஏதாவது தவறு செய்தால் தானாகவே உண்மையை ஒத்துக் கொண்டு தண்டனையையும் கேட்டு வாங்கிக்கொள்ளும் உண்மை விளம்பி.  கிஃப்ட்டை பிரித்ததும் அவளே வந்தாள் 'நான்தான், உன் கிறிஸ்மா' கடைசி வரைக்கும் உன்னால கண்டு பிடிக்க முடியல பாத்தியா' என்றாள். கொஞ்சம் பேச்சு குடுத்தால் 'எனக்கு நம்ம க்ளாஸ்மேட்ஸ் எல்லாரையும் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனும், எல்லாரையும் எங்க வீட்ல சாப்பிட வைக்கனும் ' என ஆரம்பித்து விடுவாள். 

வகுப்பில் எல்லாரும் மாறி மாறி கிஃப்ட் குடுத்துக்கொள்வதையும், கூடி கூடி பேசிக்கொள்வதையும் வெளியே குட்டி செவுத்தில் உக்காந்து கொண்டு பார்த்துக் (முறைத்துக்) கொண்டிருந்தான் சம்பத்.

என்னதான் அந்த நாள் யதார்த்தமாக நகர்ந்தாலும் ஒரே நாளில் வீணாவை அத்தனை சந்தோஷத்துடனும், கண்ணீருடனும் கண்ட காட்சிகள் மனதை விட்டு நீங்கவே இல்லை. சில நாட்களில் அவள் அவளின் பழைய சகஜ நிலைக்கு திரும்பி விட்டாள். என்னிடம் சகஜமாக‌ பேச ஆரம்பித்தாள். வழக்கமான ஒரு வார இறுதி நாள். அவள் வீட்டுக்குச் செல்லும் நாள். இப்போது காலேஜ் பஸ் எல்லாம் மாறி இருந்தது. இப்போது பாரிஸ் கார்னர் வரை. அங்கிருந்து பஸ் பிடித்து அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும். வீணாவும் நானும் மற்றும் சிலரும் பாரிஸில் இறங்கி விட்டோம். அங்கிருந்து எல்லோரும் வெவ்வேறு பஸ்ஸுக்கு செனறு விட நானும் வீணாவும் கிட்டத்தட்ட ஒரே ரூட் என்பதால் பஸ்ஸுக்காக காத்திருந்தோம். C6 எனும் பஸ் . ஹேகோர்ட் to டோல்கேட் எங்கு ஏறினாலும் இறங்கினாலும் ஒரே டிக்கெட் 6 ரூபாய். பஸ் காலியாக வந்தது. இருவரும் ஏறினோம் அவள் ஜன்னல் சீட்டில் அமர்ந்தாள் நான் அவளுக்கு பின் சீட்டில் அமரப்போனேன். 'ஏய், அங்க எங்க போற, இங்க உக்காரு' என‌அவள் பக்கத்தில் உட்கார சொன்னாள்.‌ ஆஹா, வாழ்க்கையில் முதல் முறை ஒரு பெண்ணுக்கு பக்கத்தில் உட்காரப்போகிறேன். அஞ்சாங்கிளாசில் அரைப்பாவடை போட்டவளுடன் உட்கார்ந்தது அதற்குப்பிறகு இப்போதுதான் உட்கார போகிறேன். அவளுடனான இரண்டாவது பயணம். இம்முறை படியில் தொங்க சம்பத்துமில்லை, அவள் பக்கத்து இருக்கையை ஆக்கிரமிக்க அவள் தோழியுமில்லை. நானும் அவளும் மட்டும். பஸ் கிளம்பியது, அவளின் பேச்சும் தொடங்கியது. வென்கலக்கிண்ணத்தை உருட்டுவதை போல 'கொட, கொட' வென ஏதேதோ டாப்பிக்குகள் உருண்டோடிக்கொண்டிருந்தன. பயண தூரம் பாதி கடந்து விட்டது. எனக்கு நேரம் போனதே தெரியவில்லை. நல்ல ட்ராஃபிக்கில் பஸ் மெதுவாகத்தான் நகர்ந்தது, இன்னும் மெதுவாக நகர்ந்தாலும் பரவாயில்லை என்றே இருந்தது எனக்கு. பேச்சின் நடுவே கொஞ்சம் என்னைப்பற்றியும் டாபிக் வந்தது. 

'காலேஜ் பஸ்ஸில் உன்னை அவ்வளவு பரிகசிக்கிறார்களே உனக்கு கொஞ்சம் கூட கோபமே வராதா, எவ்ளோ பொறுமைசாலியா இருக்கான்னு, ஹாஸ்டலில் பேசிக்கொள்வோம் ' என்றாள்.

 'ஓ, என்னப் பத்தி எல்லாம் பேசுவீங்களா' என கேட்டேன். 

'அல்லாத பின்னே, சாரி மலையாளம் வந்திடுச்சி..... இல்லியா பின்ன, நீ நல்லா படிக்கிற பையன் வேற, அப்பப்போ உன்ன பத்தியும் பேசுவோம்' என்றாள்.

'ஒரு பாடத்தில் முதல் மார்க் வாங்கினா நல்லா படிக்றதா அர்த்தமா. அதுக்கெல்லாம் சிவகாமி இருக்கா' என்றேன்

நன்றாக உரையாடல் போய்க்கொண்டிருந்த போது நான்தான் ஆரம்பித்தேன். 'மகேஷ்' என.

ஒரு நிமிடம் மௌனமானாள்.

-- தொடரும் 

No comments:

Post a Comment