Thursday, December 19, 2024

என்றென்றும் புன்னகை: பகுதி 2

பகுதி 2 - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் 

அடுத்த நாள் காலை பெரும் உற்சாகத்துடன் கல்லூரிக்கு வந்தான் மகேஷ். காலை  போகும்போதே அது காதல் கடிதம்தான் என என்னிடம் சொல்லி விட்டான். கவலைப்படாதே உனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது என எழுதியிருக்கிறேன் என்றான். கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. 'என் எழுத்துக்கள் வலிமையானவை, அவள் எப்படியும் இன்று ஒத்துக்கொள்வாள், அவள் மனதில் ஒரு சின்ன தடைதான் இருக்கிறது அதை இக்கடிதம் மூலம் உடைத்து விட்டேன்' என மிக நம்பிக்கையுடன் கூறினான். எனக்கென்னவோ எதுவும் சரியாக படவில்லை. அன்று வகுப்பிற்குள் வீணா நுழைந்தாள், அவள் முகத்தில் வழக்கம்போலிருக்கும் உற்சாக மில்லை. மகேஷ் அவளை கண்டும் காணாதது போல் இருந்தான். வகுப்பு தொடங்கி நடக்க ஆரம்பித்தது. இடைவேளை நேரம் வந்தது. வீணா எழுந்தாள், அவள் பையிலிருந்து அந்த நோட்டை எடுத்தாள், அதை சுற்றியிருந்த தாள் கிழிந்த நிலையில் இருந்தது. அதை அவனிடம் திருப்பி கொடுத்துவிட்டு 'இதெல்லாம் செட் ஆகாது' என சொல்லிவிட்டு அவன் முகத்தை கூட சரியாக பார்க்காமல் அங்கிருந்து சென்று விட்டாள். மனதுக்குள் ஒரு நிமிடம் 'வீணா டா' என்பது போலிருந்தது. மகேஷ் முகம் சுருங்கி விட்டது. அன்று முழுதும் அவன் யாரிடத்தும் சரியாக பேசவில்லை. மாலை மணியடித்ததும் யாருடனும் பேசாமல் வீட்டுக்கு சென்று விட்டான். அடுத்த நாளும் அவன் விடுப்பு எடுத்ததாக நியாபகம். வீணாவும் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அப்போது வீணா எனக்கு அவ்வளவாக பழக்கமில்லை, ஆனால் அன்று வீணா ஒருவேளை அவனுக்கு ஓகே சொல்லியிருந்தால் அவள் மீது நான் வைத்திருந்த பிம்பம் அன்றே உடைந்திருக்கும்.

வீணா ஹாஸ்டலில் தங்கி படித்தவள், நாங்கள் தினம் வீடு சென்று வந்தவர்கள். வீணா வின் ஹாஸ்டலில் அவள் ரூம் மேட்ஸ் 3 பேர், அவர்களுக்கு வீணாவின் மேல் அலாதி ப்ரியம். அக்கடிதத்தை வீணா ஹாஸ்டலில் அவர்கள் முன்பு வைத்தே படித்திருப்பாள் போல, கேட்கவா வேண்டும் அடுத்த நாளே மொத்த கல்லூரிக்கும் தெரிந்து விட்டது, அது ஸ்ரீதேவிக்கும் தெரியவர அவளும் சண்டையிட்டு பிரிந்து விட்டாள், அது மகேஷை இன்னும் கொஞ்சம் கோபப்படுத்தி விட்டது. உள்ளதும் போச்சிடா நிலைக்கு தள்ளப்பட்டான். வகுப்பில் அவன் இடத்தை மாற்றினான். வீணாவுக்கும் அவனுக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் போனது. ஆனால் என்னிடம் காலை மாலை பயணத்தின் போது வழக்கம்போலதான் பேசினான், வீணா பற்றி பேசுவதை நிறுத்திக்கொண்டான்.

நாட்கள் சில சென்றது. முதல் வருடம் கல்லூரி சுற்றுலா அறிவித்தார்கள். 2500 ரூபாய் கட்ட வேண்டும் என்று சொன்னார்கள். வீட்டில் கேட்டேன், உன்னை படிக்க வைக்கதான் வீடு அடமானத்தில் இருக்கிறதென்றார் அப்பா, சம்பாதித்த பிறகு போய்க்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். என்னைப்போலவே சிலரும் போகாமல் வகுப்பில் துணையாயிருந்தனர். வீணா போயிருந்தாள் மகேஷும் போயிருந்தான். ஒரு வாரம் இருந்திருக்கும். ஊட்டி, பெங்களூர் இஸ்கான் கோயில், மைசூர் பேலஸ் எல்லாம் முடித்து விட்டு வந்த கூட்டம் பல கதைகள் பேசியது. ஊட்டி குளிரில் வீணா வின் தோழி சுனிதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, ஏற்கெனவே மது அருந்தியிருந்த சில சீனியர்கள் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வந்து சுனிதாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிப்போக உதவி புரிந்த சம்பவம் விமரிசையாக பேசப்பட்டது. பிலிம் கேமராக்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பிரின்ட் போடப்பட்டு எல்லோரிடத்தும் காண்பிக்கப்பட்டது. மகேஷ் சொல்லப்போகும் கதைக்குத்தான் காத்திருந்தேன். அன்று இரவு நடந்த சம்பவத்தின் அவன் வெர்ஷன் இதுதான். அன்றிரவு சீனியர்களுடன் இவனும் போனானாம். அவள் ஆஸ்பத்திரியிலிருந்து அறைக்கு திரும்ப கூட்டி வந்ததும் அறையிலிருந்த இன்னொரு தோழி அவனிடம் சொன்னாளாம். 'உன்னை தனியே சந்தித்து பேச அங்கே இன்னொரு அறையில் வீணா காத்திருக்கிறாள், நீ போய் பார்' என்றாளாம். ஆனால் அவன் அவளை பார்க்காமலே வந்து விட்டானாம். 

சம்பத் வகுப்பிலிருந்த இன்னொரு முக்கியமான வித்தியாசமான கேரக்டர். பெண்கள் என்றாலே ஆகாது. காலேஜ் பஸ்ஸில் கடைசி சீட்டில் பையன்கள் சூழ தான் உட்காந்திருப்பான். வகுப்பிலும் அப்படிதான். ஒரே காலேஜ் பஸ் என்பதால் அதுவேதான் போகும் வழியில் பெண்கள் ஹாஸ்டலிலிருந்து மாணவிகளை ஏற்றிச்செல்லும். அப்போது ஏறும் பெண்கள் கிடைக்குமிடத்தில் அமர்ந்து கொள்வார்கள். அப்படி அமரும்போது தப்பித்தவறி கூட பெண்கள் அவன் பக்கத்தில் உட்காந்துவிடக்கூடாது என்பதற்காக தன்னை சுற்றி இருக்கும் எல்லா சீட்களிலும் பையன்களை நிரப்பி வைத்திருப்பான். அதில் நானும் அடக்கம். திமுக விஸ்வாசி, கலைஞரின் வெறியன், அப்போது அவன் பெயரும் அவனின் இந்த வித்தியானமான குணாதிசயங்களும்தான் தெரியும் எனக்கு. 

 வார இறுதி நாட்களில் ஹாஸ்டல் பெண்களும் வீட்டுக்கு போய் வர காலேஜ் பஸ்ஸிலேயே வருவார்கள். அப்படியொரு வார இறுதி நாளில் காலேஜ் பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது படாரென ஒரு சத்தம். பஸ்ஸின் முன் சக்கரத்திற்கும் பின் சக்கரத்திற்கும் இடையே நீளமாக சுழன்று கொண்டிருக்கும் இரும்பு உருளைக் கம்பி கழண்டு தரையில் விழுந்திருந்தது. சரி இனி பஸ் தேறாது என எல்லோரும் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். அங்கிருந்து செங்கல்பட்டு ரெயில்வே ஸ்டேஷன் நான்கு கிலோமீட்டர். எல்லோரும் பேசிக்கொண்டே நடந்தே வந்து விட்டோம். அங்கிருந்து தாம்பரம் வந்தோம். தாம்பரத்தில் இறங்கி பீச் ஸ்டேஷன் போக வீணாவும் அவள் தோழியும் டிக்கெட் எடுத்தனர். எனக்கு பாஸ் இருந்தது. உடன் சம்பத் இருந்தான். அவன் போக வேண்டியது நுங்கம்பாக்கம். வீணாவும் அவள் தோழியும் ட்ரெய்னில் வந்தமர்ந்ததும் அவள் எதிரில் நான் சென்று அமர்ந்தேன். சம்பத் வரவே இல்லை ட்ரெய்ன் வாசலிலேயே நின்று கொண்டு பிரயாணம் செய்தான். அவனுக்கு பெண்கள் அலர்ஜி என தெரியுமென்பதால் நானும் கூப்பிட வில்லை, வண்டி தாம்பரத்திலேயே முழு கூட்டமாகி விட்டது.  அன்றுதான் முதல் முறை வீணாவுடன் நீண்ட நேரம் பேசியிருக்கிறேன். சொல்லப்போனால் அவள் பேச்சை கேட்டுக்(ரசித்துக்)கொண்டே வந்தேன். அவள் தலை அசைவிற்கேற்றாற்போல குலுங்கிக்கொண்டே இருந்த கம்மலையும். என்னென்னவோ பேசினாள் காலேஜில், ஹாஸ்டலில், வகுப்பில், லேப் இல் நடந்தவை, அவளின் தோழிகள், தோழர்கள், கல்லூரியில் உலவும் காதல்கள், ஆசிரியர்கள், அலைபாயுதே, மாதவன், மணிரத்னம், ரஹ்மான், என எல்லாவற்றைப் பற்றியும் மிக கலகலப்பாக பேசிக்கொண்டு வந்தாள், மகேஷை தவிர. அவளை சுற்றியிருக்கும் உலகம் எத்தனை அழகாயிருக்கிறது என்று தோன்றியது. அவள் பேசிய அனைத்தும் என் மனக்கண்ணில் காட்சிகளாக ஓடியது, அவையனைத்தும் ஒரு நல்ல நகைச்சுவை திரைப்படம் போல இருந்தது, சோகமில்லை, துன்பமில்லை, கஷ்டங்களை குறித்த புலம்பலில்லை, சாதிக்க வேண்டும் என்கிற கட்டாயங்கள் இல்லை, ப்ரச்சனைகள் குறித்த பயமில்லை, எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டே கடந்து விடலாம் எனும் எதார்த்தம் மட்டுமே இருந்தது. அந்த உலகத்துக்குள் நானும் இருக்க வேண்டும் என்ற ஆசை அன்று என்னுள் எழுந்தது. அன்றைய நாள் பயணம் துளியும் எனக்கு சலிப்பு தட்ட வில்லை. தான் பயணம் செய்ய வேண்டிய தூரம் , தன்னை சுற்றியிருக்கும் கூட்டம் என எதையுமே கண்டு கொள்ளவில்லை அவள். அவளை சுற்றியிருக்கும் சூழலை கலகலப்பாக மாற்றும் வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தாள். இடையில் ஏதோ ஒரு நிறுத்தத்தில் இறங்குபவர்களுக்கு வழிவிடுவதற்காக நடைமேடையில் இறங்கிய சம்பத் ஜன்னல் வழியே என்னை எட்டிப்பார்த்தான். 'என்னடா இன்னும் நுங்கம்பாக்கம் இன்னும் வரலியா' என கேட்டு விட்டேன். முறைத்துக்கொண்டே மீண்டும் ஏறிக்கொண்டான். மீண்டும் தொடங்கியது அவள் பேச்சு. நுங்கம்பாக்கத்தில் சம்பத் கையை மட்டும் காட்டி விட்டு வேகமாக சென்று விட்டான். நான் இறங்க வேண்டிய பார்க் ஸ்டேஷனும் வந்தது. பை ... சொல்லி விட்டு இறங்கி விட்டேன். 

அது போலொரு பயணம் இனியும் நடக்குமா என எதிர்பார்த்தேன். நடந்தது. 

- தொடரும்

No comments:

Post a Comment