Thursday, December 12, 2024

நான்காம் பத்து

வாழும் காலத்தின் பாதியை கடந்துவிட்ட நிலையில் தற்போதிருக்கும் உணர்வுகளின் பதிவு/பகிர்வு.

பெரிய மனத்துயரில்லாத நாள் போதுமென தோணுகிறது.

பணியாற்ற பாதி விருப்பமே இருக்கிறது.

தனிமை முன்பைக்காட்டிலும் அதிகம் பிடிக்கிறது.

பரபரப்பான தருணங்கள் எப்போது முடியுமென தோணுகிறது.

காதல் பெரிதாக ஈர்ப்பதில்லை, 90 களில் பார்த்த ஒரு சில படங்களையும், பாடல்களையும் தவிர. 96 கொஞ்சம் ஈர்த்தது. 

காமம் கொஞ்சம் பிடிக்கிறது. 

மது தரும் போதை மறந்தே போய் விட்டது. 

காஃபியும் விடைபெற்றுக் கொண்டது. 

கண்ட கண்ட உணவுகளை உண்ண தோணுவதில்லை, இட்லியும் சாம்பாரும் போதுமென்றிருக்கிறது. 

மிச்சம் மீதி இருக்கும் கெட்ட பழக்கங்களும் மகள் வளர வளர மறைந்தே போய்விடும் போல இருக்கிறது.

உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்ற எண்ணமும், புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற எண்ணமும் காலையில் வந்து போகிறது. 

எழுத வேண்டும் என்ற எண்ணம் மாதம் ஒருமுறை தோணுகிறது. 

எழுத ஆரம்பித்தால் மண்டைக்குள் ஏறி அமர்ந்து கொள்கிறார் சுஜாதா. 

பணம் சம்பாதிக்கும் வழிகளை தேடித்தேடி போகத்தோன்றுகிறது.

பொருள் சேர்க்கும் போட்டியில் விருப்பமில்லாவிடினும் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயமிருக்கிறது. 

சம்பாத்தியம் நின்றுபோனால் எப்படி சமாளிக்கப்போகிறோம் எனும் கவலை அவ்வப்போது எழுகிறது. 

சில செலவுகள் அனாவசியமாக தெரிகிறது.

பொறுப்புணர்வு மிகுந்து கொண்டே போகிறது.

பழைய நட்புக்களை சந்திக்கும் தருணங்களை மனம் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறது. 

ரஜினியும், ராஜாவும், ரஹ்மானும், மணிரத்னமும் முன்போல் சிலாகிப்பை தருவதில்லை. ரேவதிக்கு வயதாகி விட்டது. கிரேசி மோகன் மறைந்தே போய்விட்டார்.  ராஜமவுலி கொஞ்சம் சிலிர்ப்பை தருகிறார், காதலல்லாத ஒரு சில மலையாள, தமிழ் படங்களும்.

வேள்பாரிக்கு இணையான புத்தகத்தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இருபது நிமிடங்களுக்கு மேலிருக்கும் காணொளியை பார்க்கவும், இரண்டு பக்கத்துக்கு மேல் படிக்கவும் பொறுமை இருப்பதில்லை. 

பெண்களை கவரும் விதம் ஏதும் பேசவோ, செய்யவோ தோணுவதில்லை. 

பெண்களின் ஆடையில் புடவை மட்டுமே பிடிக்கிறது.

தலையில் முடியில்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. 

மீன்தொட்டி காண பிடிக்கிறது.

மனைவியுடனான சண்டையை முடிந்த வரை தவிர்த்து விட தோணுகிறது. 

எதார்த்த மில்லாத எதுவும் பிடிப்பதில்லை.

சமூக ஊடகங்களின் வழி நான் எப்படி வாழ்கிறேன் பார் என காட்டிக்கொள்ள தோணுவதில்லை.

அடுத்த தலைமுறையுடன் போட்டிபோட முடியாது என புரிகிறது.

தினமும் ஏதோவொன்றை கற்றுக்கொள்ள தோணுகிறது.

சிறு சிறு வெற்றிகள் தினம் தேவைப்படுகிறது. 

எல்லா தருணத்திலும் நகைச்சுவையை தூவ தோணுகிறது. 

மனரீதியான பாதிப்புகளிலிருந்து விரைவில் வெளிவர தோணுகிறது. 

உடல் ரீதியான பாதிப்புகள் வேண்டாமென்றே இருக்கிறது. 

ஜலதோஷம் கண்டிப்பாக வரும் அழையா விருந்தாளியாய் இருக்கிறது. 

வார்த்தைகள் சுடுகிறது. 

சில உறவுகளை தெரிந்தே இழக்கும் பக்குவம் வந்திருக்கிறது.

சிறந்த ஒரு உரையாடலை சரியான நபருடன் நிகழ்த்த தோணுகிறது.

நேரத்தை இனிமையாக மாற்றும் ஒரு சிலர் போதுமென்றிருக்கிறது. 

கரிசனங்களுக்கு நடுவே எப்போதாவது காதலை தரும் மனைவி. 

சொல்பேச்சை கேட்க மறுக்கும் பருவமெய்தும் மகன். 

இருபது வருடங்களாகியும் காதலியாய் மாற்ற முடியாத தோழி.

என் வாழ்வில் நடக்கும் எல்லாவற்றையும் உன்னிடம் பகிர்ந்தே தீருவேன், ஆனால் நீ எல்லை மீறக்கூடாது என கூறி
 பேசிக்கொண்டிருக்கும் சில பெண்கள்.

கிடைக்காதென தெரிந்தும் தொடர்ந்து கொண்டே இருக்கும் கனவு தேவதைக்கான தேடல்.

கனவாகவே இருக்கும் கனவு இல்லம். 

எத்தனை செய்தாலும் அடுத்த வேலையை தரத்தயாராயிருக்கும் அலுவலகம். 

ஒரு முறை கூட அதிர்ஷ்டம் அடிக்காத பரிசுக்கூப்பன்.

ஒரு முறை கூட வட்டியை வசூலிக்க தவறாத வங்கிகள். 

தூரமாகவே இருக்கும் நெருங்கிய உறவுகள். 

போராடினால் மட்டுமே கிடைக்கும் வெற்றி. 

உனக்கு எப்போது எதை தர வேண்டும் எதை எடுத்துக்கொள்ள வேண்டுமென எனக்கு தெரியும். உன் வேலையை மட்டும் பார் என அவ்வப்போது உணர்த்தும் தெய்வம்.

இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கிறது நான்காம் பத்து. 

1 comment: