Monday, December 23, 2024

என்றென்றும் புன்னகை: பகுதி 4

பகுதி 4 - இதயம் ஒரு கண்ணாடி

விடுமுறை முடிந்து இரண்டாம் ஆண்டு தொடங்கியது. ரிசல்ட்டும் வந்தது.  முதலாமாண்டு இன்ஜினீயரிங் ட்ராயிங் மாஸ்டர் எங்கள் வகுப்பிற்குள் வந்து மார்க்குகளை அறிவித்தார். நான் முதல் மார்க் எனக்கு அடுத்து வீணா அவளுக்கடுத்து வித்யப்பிரியா எனும் மாணவி. எனக்கு கோயில் கோபுரம் போன்று ஒரு ஷீல்டும், வீணாவுக்கு ஒரு சிறு விநாயகர் சிலையும் வித்யப்பிரியாவுக்கு இன்னொரு பரிசையும் கொடுத்து விட்டு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு போனார். கல்லூரியில் நான் முதலில் வாங்கிய பரிசு அதுதான். ஆனால் முதல் வருடத்துக்கு பிறகு இன்ஜினீயரிங் ட்ராயிங் சப்ஜெக்ட் கிடையாது என்பது கொஞ்சம் வருத்தமாகதான் இருந்தது. 

சம்பத்துக்கு ஒரே பெருமை எல்லா பாடத்திலும் பெண்களே முதல் மார்க், பசங்க மானத்தை இந்த ஒரு பாடத்திலாவது நான் காப்பாற்றினேனே என்று. சிவகாமி எனும் ஐயர் மாமிதான் பெரும்பாலும் எல்லா பாடத்திலும் முதல் மார்க். பெண்கள் முதல் மார்க் வாங்குவதே அவனுக்கு பிடிக்காது, ஆசிரியர்களிடம் கூட ஆண் வாத்தியார்களிடம்தான் நன்றாக பேசி அரட்டை அடித்துக்கொண்டிருப்பான், பெண் ஆசிரியர்கள் கேள்வி கேட்டால் கூட 2 வார்த்தைக்கு மேல் பேச மாட்டான் அவர்கள் முகம் பார்த்தும் பதில் சொல்ல மாட்டான். சில ஆசிரியைகள் 'நான் இங்க இருக்கேன் எங்க பாத்து பேசிட்ருக்க' என்று கேட்டே விடுவார்கள். மின்னலே ஆரம்பத்தில் வரும் மாதவன், மௌனம் பேசியதே சூர்யா போன்ற கேரக்டர்களை அந்த படங்கள் வரும் முன்னரே அவன் ரூபத்தில் பார்த்து விட்டோம் நாங்கள்.

கோகுலும் வந்து கைகுலுக்கி வாழ்த்துக்கள் சொன்னான். எனக்கு தெரியும் மச்சி நீதான் 1st வருவன்னு, சிவகாமிலாம் மக்கப் பண்ணி மார்க் வாங்குறவ, ஆனா இது புரிஞ்சு பண்ணாதான் வரும் அதனாலதான் இதுல அவளாள மார்க் வாங்க முடில. நீ புரிஞ்சி படிக்றவன்னு எனக்கு தெரியும். இதே மாதிரி படி, நல்லா வருவ என சொல்லி விட்டு போனான். சில விஷயங்கள் சில பேர் சொல்லும் போதுதான் நம்மைப்பற்றி நமக்கே புரியும். அதை அவன் அடிக்கடி எனக்கு செய்து கொண்டிருந்தான்.

இரண்டாமாண்டு கல்லூரி தொடங்கி சில நாட்களில் கிறிஸ்துமஸ் மாதம் வந்தது. அந்த நேரத்தில் கிறிஸ்மா (Chris Ma) கிறிஸ் ச்சைல்ட் (Chris Child) என ஒரு விளையாட்டு விளையாட வேண்டுமாம். வாழ்க்கையில் அப்படி ஒரு விளையாட்டை நான் கேள்விப்பட்டதே இல்லை. அதாவது எல்லோர் பேரையும் சீட்டில் எழுதி குலுக்கிப்போட்டு எடுக்க வேண்டுமாம், அதில் நமக்கு யார் பெயர் வருகிறதோ அவர்களுக்கு நாம் தினமும் ஒரு டாஸ்க் கொடுக்க வேண்டுமாம். ஆனால் அதை நாம்தான் கொடுக்கிறோம் என்று அவர்களுக்கு தெரியக்கூடாது, அவர்களுக்கு தெரியாமல் அவர்கள் இடத்தில் துண்டு சீட்டில் எழுதி வைக்கலாம், அல்லது யார் மூலமாவது குடுத்து குடுக்க சொல்லலாம். அப்படி டாஸ்க் குடுப்பவர்கள் கிறிஸ்மா டாஸ்க் செய்பவர்கள் கிறிஸ் ச்சைல்ட். பின் கிறிஸ்துமஸ்க்கு முந்தைய நாள் நான்தான் உன் கிறிஸ்மா என கிஃப்ட் குடுத்து கிறிஸ் ச்சைல்ட்டிடம் சர்ப்ரைஸ்ஐ உடைக்க வேண்டும். ஒருவாறு புரிந்தது. சீட்டுக்குலுக்கி போட்டு பெயர்களை எடுத்தாகி விட்டது ஆனால் விளையாட்டு தொடங்கப்படவில்லை. ஏதோ ஒன்று சரியாயில்லை. மகேஷ் நீங்கள் தப்பாக குலுக்கிக் போட்டு விட்டீர்கள், நான் கிறிஸ்டியன் பள்ளியில் படித்தவன் எனக்கு இந்த கேம் நன்றாக தெரியும். ஆண்கள் பெயர் பெண்களுக்கும் பெண்கள் பெயர் ஆண்களுக்கும்தான் வர வேண்டும் என சண்டை பிடித்தான். அதன்படியே செய்து அவனே பெயர்களை எழுதி மீண்டும் சீட்டுக்குலுக்கி போட்டு எடுக்க வைத்து விட்டான். சம்பத் என்னை எல்லாம் இந்த ஆட்டத்தில் சேர்க்கக்கூடாது என முதலிலேயே கண்டிசனாக சொல்லி விட்டான். எனக்கு கஜலெஷ்மி எனும் பெண்ணின் பெயர் வந்தது. மகேஷுக்கு சொல்லி வைத்தாற்போல வீணாவின் பெயர், நான் சந்தேகப்பட்டது சரியாய் போனது. இதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறான் என புரிந்தது. வீணாவை அவனுக்கு பிடித்த நிறத்தில் உடை அணிந்து வர வைத்தான், இரு கால்களிலும் வெவ்வேறு செருப்பு அணிந்து வரச்செய்தான், வகுப்பில் விசில் வாங்கி வந்து ஊத வைத்தான், இப்படி தினமும் ஏதாவதொரு டாஸ்க், அவளும் இவன்தான் என தெரியாமல் எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தாள். நானும் கெஜலெஷ்மிக்கு சிற்சில டாஸ்க்குகள் கொடுத்தேன். நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது விளையாட்டு.

கிறிஸ்துமஸ் நாள் நெருங்கிக்கொண்டிருந்தது மகேஷ் ஒரு நாள் அவனுக்கு என்ன டாஸ்க் கொடுப்பதென்று தெரியவில்லை, நீயே எதாவது எழுதி அவளுக்கு கொடுத்து விடு என சொல்லி விட்டு சென்று விட்டான். நானும் ஒரு துண்டு சீட்டில் அவளுக்கான டாஸ்க்கை எழுதிக்கொண்டிருந்தேன். வீணா அதை ஜன்னல் வழியே பார்த்திருப்பாள் போல, பிறகு நானே அதை அவளிடம் கொண்டு போய் குடுக்க நான் தான் அவள் கிறிஸ்மா என முடிவே செய்து விட்டாள் போல. அவள் தோழிகளிடத்தும் சொல்லி விட்டாள் போல. அடுத்த நாள் உண்மையை உடைக்க வேண்டிய கடைசி நாள். எனக்கு என்ன ஆகப்போகிறதோ என்று இருந்தது. அடுத்த நாள் காலை மகேஷ் ஒரு வெளிர் நீல நிற ரோஜா மொட்டை என்னிடம் குடுத்து இதையும் நீயே குடு அப்புறம் மெய்ன் கிஃப்ட்டை என் பெயர் எழுதி பிறகு அவளுக்கு தந்து கொள்கிறேன் என்றான். எனக்கு அந்த ரோஜாப்பூவை குடுக்க தயக்கம் தான் இருந்தாலும் கொண்டு போய் குடுத்தேன். 'ஐ எனக்கா!' என என் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு சென்று விட்டாள். சிறிது நேரம் கழித்து தன் தோழிகளுடன் கை கோர்த்துக் கொண்டு வந்தவள் என் எதிரே வந்ததும் 'ஏய், பாத்தியா' என ஒரு சுற்று சுற்றி அவள் தலையில் நான் தந்த பூ இருப்பதை காண்பித்தாள். 'நல்லாருக்கா' என கேட்டாள். அவள் முகத்தில் நீதான் என் கிறிஸ்மா என்பதை கண்டு பிடித்து விட்டேன், நீயே சீக்கிரம் சொல் எனும் தொனி தெரிந்தது. எனக்கும் ஒரு நிமிடம் நானே அவளுக்கு கிறிஸ்மா வாக இருந்திருக்கலாம் என தோனியது. இதெல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க மகேஷ் அவள் உட்காரும் இடத்தில் அவளுக்கான கிஃப்ட்டை வைத்து விட்டு அதில் அதனுள் அவன் தான் அவளின் கிறிஸ்மா என்பதையும் எழுதி வைத்து விட்டு சென்று விட்டான். வீணா அதை எப்போது பிரித்து பார்த்தாள் என தெரியாது. நான் அப்போது வகுப்பிலும் இல்லை. சிறிது நேரம் கழித்து நான் வகுப்பிற்குள் வந்து பார்த்த போதுதான் அங்கு ஏதோ நிலைமை சரியில்லை என புரிந்தது. வீணா தலை குனிந்த நிலையில் அவள் இடத்தில் உட்கார்ந்திருந்தாள். அவளைச்சுற்றிலும் அவளின் ஹாஸ்டல் தோழிகள், எல்லோருக்கும் தோய்ந்த முகமும் அதோடு சேர்ந்த கோபமும். நான் அவளை நெருங்கி சென்று என்ன ஆனது என கேட்கும் முன்னரே சுனிதா குறுக்கிட்டாள். 'உனக்கு தெரிஞ்சுதான் நீ பண்ணியா. மகேஷ் உன்ன மீடியேட்டரா யூஸ் பன்றான்னு உனக்கு தெரியலயா' என்றாள். நான் வீணாவை பார்த்தேன். அவள் முன்னே இருந்த டெஸ்க்கில் அவன் குடுத்த கிஃப்ட்டும், அதன் மேலே நான் குடுத்த பூவும் இருந்தது. அவள் குரல் தழுதழுத்த நிலையில் வெளி வந்தது 'நான் நீ ன்னு தான் நெனச்சேன்' என்று தலை குனிந்தவாறே சொன்னாள். அவள் கண்களில் தேங்கி இருந்த கண்ணீர் அவள் இமை தாண்டி கன்னத்தில் விழுந்தது. அது என்னை ஏதோ செய்தது. அந்த கிஃப்ட் பாக்ஸையும் பூவையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து விறுவிறுவென கிளம்பினேன்.

- தொடரும்

No comments:

Post a Comment