Sunday, December 22, 2024

என்றென்றும் புன்னகை: பகுதி 3

பகுதி 3 - ஊலலலா

அந்த வார இறுதி முடிந்து திங்கள் காலை கல்லூரி பஸ்ஸில் ஏறும் வரைக்கும் எனக்கு தெரியவில்லை எனக்கொரு விசாரணை கமிஷனே காத்திருக்கிறதென்று. நான் தாம்பரம் வரை ட்ரெய்னில் சென்று அங்கிருந்துதான் காலேஜ் பஸ்ஸில் ஏறுவேன். ஆனால் பஸ் கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜில் இருந்தே கிளம்பும் அங்கேயே ஏறுபவன் சம்பத். அன்று நான் அவனை அம்போவென விட்டுவிட்டு வீணாவுடன் கடலை போட கிளம்பிவிட்டேன் என ஒட்டுமொத்த பஸ்ஸுக்கும் பரப்பிவிட்டான். அதெப்படி அவனை விட்டுவிட்டு அவளுடன் பேசப்போகலாம் என அத்தனை நண்பர்களும் கட்டம் கட்டி விட்டனர். அன்றைய நாள் இதன் காரணம் எல்லோருக்கும் நன்றாக நேரம் போயிருக்கும். மற்ற எல்லோரும் மறந்தாலும் சம்பத் விடுவதாயில்லை. பார்க்குமிடமெல்லாம் சொல்லித்திரிந்தான். 'அன்னக்கி இவன் என்ன பண்ணான் தெரியுமா, என்று முதலிலிருந்து ஆரம்பிப்பான்'. 'யப்பா சாமி, தெரியாம பன்டேன், வேணா பாரு‌ அடுத்த வாட்டி உங்கூடவே இருக்கேன்' னு சத்தியம் பணணாத குறையாக சமாளித்தேன். 'ஒன்ன எல்லாம் இனி நம்ப மாட்டன்டா' என ஓட்டிக் கொண்டே தான் இருந்தான். இதெல்லாம் நடக்கும் போது வீணா பஸ்ஸில்தான் இருந்தாள் அவளுக்கும் இதெல்லாம் கேட்டிருக்க வேண்டும். அன்று இடைவேளையின்‌போது கேட்டாள். 'நல்லா மாட்டிக்கிட்ட போல, ஒழுங்கா அவன் கூடவே இருந்திருக்கலாம்ல' என கிண்டல் தொனியிலேயே அவளும் கேட்டாள். 

முதலாமாண்டு காலேஜ் கல்ச்சுரல்ஸ் அறிவித்தார்கள்.‌எல்லா டிபார்ட்மென்ட்களிலும் பாட்டு, டான்ஸ் ப்ராக்டிஸ் என 2ஆம் பாதி எந்த வகுப்பும் நடக்காமல் இருந்தது. நான் எதிலும் பங்கேற்க வில்லை. சொல்லப்போனால் அந்த நேரம் எனக்கு ஓய்வெடுக்க ஏதுவாக இருந்தது. காலை 4:30 மணிக்கு எழுந்து கிளம்பி இரவு 10 மணிக்கு வீடு திரும்பிய எனக்கு அந்த ஓய்வு தேவைப்பட்டது. வீணாவும் அவள் தோழிகளும் ஆடிடோரியத்தில் ஊலலலா பாட்டிற்கு ப்ராக்டிஸ் செய்து கொண்டிருந்திருப்பார்கள் போல. நான் வகுப்பில் உறங்கிக்கொண்டிருந்தேன். அப்போது வீணாவின் தோழி சுனிதா வந்து என்னை எழுப்பினாள். வீணா உன்னை கூப்பிட்டு வரச்சொன்னாள். அவள் டான்ஸ் பர்பார்மென்ஸில் நீ ஒரு போர்ஷன் பண்ண வேண்டுமாம் என்று சொன்னாள். நானும் ஆடிடோரியம் போனேன் வீணா அங்கே டிஸ்பென்சரில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தாள், நான் கூப்பிட்டதும் சட்டென திரும்பியவள் பின்னால் நின்று கொண்டிருந்த பையன் மேல் இடித்து விட்டாள், 'பாத்து' என்றேன், நாக்கை கடித்து கொண்டு அவனிடம் சாரி சொல்லிவிட்டு என்னை நோக்கி வந்தாள். 'வா , உக்காரு' ஒரு ஹெல்ப் வேணும் என்றாள். நானும் ப்ரபுதேவா போர்ஷன் ஆடதான் கேட்கப்போகிறாள் என நினைத்தேன். 'நாங்கள் ஆடும்போது பின்னாடி பெய்ன்ட் டப்பாவை தூக்கிக்கொண்டு செல்லும் ஒரு கேரக்டர் வேண்டும், நீ செய்ய முடியுமா? தப்பா நெனச்சுக்காத' என்றாள். நம்ம ஒர்த் அவ்வளவுதான் போல என தோன்றினாலும் அவள் தயங்கிதான் கேட்கிறாள் என புரிந்தது. 'சரி செய்றேன்' என்றேன். ஆனால் அதன்பின் அவளிடமிருந்து அழைப்பு வரவேயில்லை. நானும் கேட்டுக்கொள்ள வில்லை. கல்ச்சுரல்ஸ் நாளும் வந்தது. ஊலலலா பாடலுக்கு அவளும் தோழிகளும் ஆடினார்கள் நன்றாகவே இருந்தது அவளின் பர்பார்மன்ஸ். ப்ரபுதேவா போர்ஷனுக்கு யார்தான் ஆடப்போகிறார்கள் என காண காத்துக்கொண்டிருந்தேன். அந்த பீட் ஆரம்பித்ததும் கூட்டத்துக்கு நடுவிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. 'அட சுனிதா! பேண்ட் சட்டையை மாட்டிக்கொண்டு அவள்தான் வந்து ஆடிக்கொண்டிருந்தாள்' எந்த ஆணையும் சேர்க்கக்கூடாதென முடிவு செய்து விட்டார்கள் போல என நினைத்துக்கொண்டே கை தட்டிக்கொண்டிருந்தேன்.

கோகுல் வகுப்பில் எனக்கு கிடைத்த இன்னொரு நட்பு. ஆண்பாவம் பாண்டியன் சாயல். தடித்த மீசை. சிரித்தால் சிம்பு போல பல்வரிசை. பெண்கள் அவனிடம் தானே வந்து பேச ஆசைப்படுவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் சீனியர்கள் உட்பட அத்தனை பேரையும் ஓரங்கட்டிய தடகள வீரணாக இருந்தான். விளையாட்டு போட்டிகள் நடந்த ஒரே நாளில் அத்தனை கோப்பைகளையும் தட்டி எங்கள் டிபார்ட்மெண்ட்க்கே பெருமை சேர்த்தான். ஒரே நாளில் கல்லூரி முழுதும் தெரியுமளவு பிரபலமாகி விட்டான். பெண்கள் மத்தியிலும். நண்பர்களை தேர்ந்தெடுப்பதிலும் மிக தெளிவாக இருப்பான். எல்லோரிடமும் சகஜமாக பேசினாலும் ஒரு சிலரை மட்டுமே நெருங்கிய வட்டத்துக்குள் வைத்துக் கொள்வான். அவன் என்னை கூட வைத்துக் கொள்ள நினைப்பான் என அப்போது நான் நினைக்கவில்லை. நான் இன்ஜினியரிங் ட்ராயிங் நன்றாக வரைவதை பார்த்து தான் என்னிடம் பேச ஆரம்பித்தான். நமக்கெல்லாம் வராத ஒன்று இவனுக்கு இவனுக்கு இத்தனை லாவகமாக வருகிறதென்றால் இவனிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று அவனுக்கு தோணியிருக்க வேண்டும். நான் யார், எங்கிருந்து வந்திருக்கிறேன், என்‌பின்புலம் என்ன என எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டான். பின் பேசும்போதெல்லாம் ஏதோஒரு விதத்தில் நீ திறமைசாலி, நீ நிறைய செய்ய வேண்டும் என ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பான். கோகுலுடன் பழக ஆரம்பித்த பின்னரே மகேஷுக்கும் எனக்குமான நெருக்கம் குறைய ஆரம்பித்தது. அவன் சுற்றிய ரீல்களும். 

முதலாமாண்டு முழு ஆண்டு தேர்வும் வந்தது. மற்ற பாடங்களில் நான் சுமார்தான் என்றாலும் இன்ஜினீயரிங் ட்ராயிங்கில் நான் முதல் மார்க் வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு என்‌ மீது திணிக்கப்பட்டிருந்தது. நான் எப்போதும் போல்தான் தேர்வு அறைக்குள் சென்றேன். அன்று என் போறாத காலமா தெரியவில்லை. ட்ராஃப்டரில் 'L' வடிவில் இருக்கும் ஸ்கேலை மாட்டி நாபை திருக்கி ட்டைட் செய்யும்போது கொஞ்சம் அதீத அழுத்தம் கொடுத்து விட்டேன் போல பொட்டென உடைந்து போனது. என்ன செய்யப்போகிறோம் என புரிய வில்லை, இனி வாத்தியாரிடம் சொல்லி இன்னொரு ட்ராஃப்டர் ஏற்பாடு செய்வதற்குள் நேரம் போய்விடும். திரும்பி வீணாவை பார்த்தேன், அவளும் என்ன ஆனது என கண்களாலேயே வினவினாள். ஒன்று மில்லை என்பது போல் தலையசைத்தேன். அப்போது என்னவோ எனக்குள் ஒரு எண்ணம் உதித்தது 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்று. உடைந்த நாபை எடுத்து வைத்து விட்டு கைகளிலேயே ஸ்கேலுக்கு இறுக்கம் கொடுத்து வரைய ஆரம்பித்தேன். முழுத்தேர்வையும் அப்படியே வரைந்து முடித்து விட்டு வெளியே வந்து விட்டேன். வீணாவும் வந்தாள். 'என்னடா ஆச்சு?' என்றாள். உடைந்த நாபை காட்டினேன். 'ஐயோ, இது இல்லாம எப்டிடா வரஞ்சே?' என்றாள். 'எதோ சமாளிச்சிட்டேன்' என்றேன். பிறகு விடுமுறை வாழ்த்துக்கள் சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டோம். இப்போது போட்டியே எனக்கும் அவளுக்கும் தான். யார் முதல் மார்க் வாங்கப்போகிறார்கள் என. 

விடுமுறை முடிந்து பார்ப்போம்

- தொடரும்

No comments:

Post a Comment