Sunday, August 20, 2023

நானும் அவள்களும்

என் நினைவு தெரிந்து என் எட்டு வயதிலிருந்தே இவ்உணர்வு கொண்டிருக்கிறேன். எதிர் பாலினம் என்பது எப்போதுமே ஒரு தீராப்புதிர்தான். அது நம்மை ஈர்க்கும், மயக்கும், நெருங்கும், விலகும், மகிழ்விக்கும், வலி கொடுக்கும் , தாங்கும், தள்ளும், தவிக்கும், தவிர்க்கும் ஆனால் ஏதோஒரு வகையில் உடனேயே  பயனிக்கும். இப்படி என் வாழ்வில் நிகழ்ந்த தருணங்களின் தொகுப்பாய் இப்பதிவு.

ஒரு பெண்ணால் நேசிக்கப்படுவோம் என்ற எண்ணம் என்னுள் என்றுமே வந்ததில்லை காரணம் என்னுருவம் என்ற எண்ணம். ஒரு வகுப்பு என எடுத்துக்கொண்டால் அதில் உள்ளதிலேயே சிறிய உருவம் எனதாகத்தானிருக்கும். சிரித்தாலும் சரியில்லாத பல்வரிசை பல்லிளித்து விடும். என்னுடனிருக்கும் யாரும் அழகாய் தெரிந்து விடுவார்கள். இப்படி பல அரண்கள் என்னைச் சுற்றி இருப்பதாய் எப்போதும் உணரும் நான். ஆனால் இவை ஒரு குறையுமில்லை நம்மை நெருங்க நினைக்கும் பெண்ணுக்கு இவை ஒரு பொருட்டுமில்லை என எனக்கு உணர்வித்த (நிஜ) தருணங்களே இவை.

இங்கே உக்காந்துக்கோ என நகர்ந்து அவள் அருகில்  இடம் தந்த முதல் அவள்.

ஓடி வந்து மூச்சு வாங்கியபோது தன் தண்ணீர் குவளையை நீட்டிய அவள்.

மழைச்சாரல் தொடங்கிய போது தன் குடைக்குள் வரச்சொல்லியவள்.

மழையில் நனைவோம் எதற்கு குடை என்ற அவள்

கோவிலிலிருந்து வெளிவந்து இந்தா எடுத்துக்கோ என விபூதிக்கரம் நீட்டியவள்

இருட்டி விட்டது என்னை என் வீடு வரைக்கும் கொண்டு வந்து விடுறியா என கேட்டு, சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையாய் என்னை உணர வைத்தவள்.

போகிற போக்கில் என் தட்டிலிருந்து சாப்பாட்டை எடுத்து தன் வாயில் போட்டவள்.

என் ஏட்டில் அவள் பெயரை எழுதி விட்டு போனவள்

போகும்போது எனை கூட்டிப்போ என்றவள்

ரொம்ப வழியிறான் என என் நண்பனை பற்றி என்னிடமே கூறியவள். அப்ப நான் என கேட்டதும் ச்ச... ச்ச... என தீர்கமாய் மறுத்தவள்.

முதல் முறை புடவை கட்டியிருக்கிறேன் எப்படி இருக்கிறது என கண்ணாலேயே கேட்டவள், என்னையும் கண்களாலேயே பதில் சொல்ல வைத்தவள், என் பதில் புரிந்ததாய் புன்னகையுடன் தலை குனிந்தவள்.

காலதாமதாய் நான் வருவதறியாது வகுப்பினுள்ளிலும் வாசலிலும் எனை தேடியவள்.

சுற்றி தோழிகளிருந்தும் தனை அறியாமலே எனை நோக்கிக்கொண்டிருந்தவள். 

என்னிடம் பேச என் நண்பர்கள் மூலம் முற்சித்தவள்.

எதேச்சையான சாலை சந்திப்பை, பேரூந்து, ரயில் பயணங்களை மீத தூரமறியாத அளவு தன் அழகு உரையாடலால் மாற்றியவள்

ஜிமிக்கி கம்மல் எனக்கு பிடிக்குமென கூற அடுத்த  நாளே அதை அனிந்து வந்து கூந்தல் ஒதுக்கி காட்டியள்.

நான் நினைத்த மாதிரியே நீ இருக்கிறாய் என கூறியவள்.

நான் நினைத்து போல் அல்ல நீ என கூறியவள்.

அங்காடியில் நான் எடுக்க நினைத்து தொட்ட பொருளை அதே நேரத்தில் தொட்டவள்.

என் கோபத்தினை அவள் மீது கொண்ட அக்கறையாய் பணிந்து ஏற்றுக்கொண்டவள்

என் கண்ணீரின் காரணமறிய எனை தேடி வந்தவள்.

தன் கண்ணீரை என் முன் மறைத்தவள்.

பிரியும் தருணம் வந்ததும் மறைக்க முடியாமல் உடைந்தழுதவள்

உன் அருகாமை மட்டுமே போதும் வேறெதுவும் உன்னிடமிருந்து வேண்டாமென்றவள்.

சாய்ந்தழ உன் தோள் வேண்டும் என்றவள்

துவண்டு விடாதே மீண்டும் எழு என்றவள்

தன் துப்பட்டாவை தெரிந்தே என் முகத்தில் பறக்க விட்டவள்

பிறந்தநாள் வாழ்த்து எதிர்பாராதவள், வாழ்த்தினால் உள்ளுக்குள் மகிழ்பவள்.

அரும்பு மீசை மழித்ததற்காய் கோபித்துக்கொண்டவள்

சாலை கடக்கையில் அவளறியாமலே என் கரம் பற்றியவள்

நான் ஜெயிக்க வேண்டுமென பிரார்த்தித்தவள்

என் வெற்றிகளை கொண்டாடியவள்

என் தோல்விகளை ஏற்றுக்கொள்ளாதவள்

இனி நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என்றவள்

ஏன் முன்பே சொல்லவில்லை என காலம் கடந்து கேட்டவள்

காலம் கடந்தால் என்ன பிள்ளைகள் இருந்தால் என்ன காதலிக்கலாமே அதனால் என்ன என்றவள்

என் சுமாரான நகைச்சுவைக்கும் விழுந்து புரண்டு சிரித்தவள்

எனை சிரிக்க வைத்தவன் நீ என்றவள்

எனை அழ வைத்துவிடாதே என்றவள்

எனக்கு பிடித்தாற்போல் இருக்க முயற்சித்தவள்

அவளுக்கு பிடித்தாற்போல் இருக்க வற்புறுத்தாதவள் 

நீ நீயாகவே இரு என்றவள்

உன் நினைவாக இது என்னுடனிருக்கட்டும் என என்னுடைய ஏதோ ஒன்றை எடுத்துச்சென்றவள்

இவையனைத்தும் எனக்கு உணர்த்தியது ஒன்றுதான், உருவம் மீறி உள்ளழகு வெளிப்படும் போது நாம் ரசிக்கப்படுவோம். காதல் துளிர்க்கும் தருணங்கள் இவையெனில் எனக்குமுன்டு பல காதல்கள். வாழ்வு என்பது கடமைகளை நிறைவேற்றுவதற்கும் பொருளீட்டுவதற்கு  மட்டுமல்ல அழகான நினைவுகளை சேர்ப்பதற்கும்தான். தொடர்ந்து சேர்ப்போம்.










No comments:

Post a Comment