Wednesday, February 15, 2017

பிரியக்காதல் - பகுதி 1



உறக்கமில்லா இரவு

உறக்கமில்லா பிறிதொரு இரவு, வேலை நிமித்தம் சுவிட்சர்லாந்தில் ஒரு சிறிய மலை உச்சியில் உள்ள ஹோட்டலில் தாமசம். மாறிய இடமோ அல்லது ஒவ்வாத இரவு உணவோ ஏதோ ஒன்று என்னை உறங்க விடவில்லை. நீண்ட நேரம் உருண்டு புரண்ட பிறகு பின் youtube ஐ browse செய்து அதில் ஒரு A R Rahman இன் பாடல் தொகுப்பை play செய்து விட்டு காதில் ear phone ஐ மாட்டிக்கொண்டு நித்திரை கொள்ள முயற்சித்தேன் ஆனால் நடந்ததோ வேறு. ரோஜா வில் தொடங்கி பம்பாய், காதலன், மின்சாரகனவு என ரகுமானின் இசை முன்னோக்கி நகர என் நினைவுகளோ பின்னோக்கி நகர தொடங்கியது. அந்த கானங்கள் என் பதின்மப்பருவத்தின் காதல் உணர்வுகளை ஊட்டி வளர்த்தவை. அந்த இரவு என் விடலைக்கால நினைவுகளை அசை போடும் சுகமான இரவாக மாறிப்போனது.

இது நடந்தது என் பதினோராம் வகுப்பில். ஒரு ஆணுக்கு காதல் என்பது இந்த வயதில்தான் வருகிறது என்றில்லை, பால்வாடியில் பக்கத்தில் அமரும் பெண் பிள்ளையிடமிருந்து தொடங்கி அ, ஆ, இ, ஈ சொல்லிக்கொடுக்கும் ஆரம்பப்பள்ளி ஆசிரியைக்கு தாவி பின் பல்லாங்குழி, பரமபதம் ஆடக்கூப்பிட்ட பக்கத்து வீட்டு அக்காவிடம் தொற்றி தன் பயணத்தை தொடர்ந்து கொண்டே போகிறது. அதுவே பருவம் எய்தும் போது இளமைக்காதலாக உருவெடுக்கிறது. அதில் ஏதோ ஒன்றைத்தான் முதல் காதல் என முடிவு செய்கிறோம். இப்பருவத்தில் அவனுக்கு வாழ்க்கைத்துணை தேடலை விட ஒரு காதலிக்கான தேடலே அதிகமாய் இருக்கும். சரி விஷயத்துக்கு வருகிறேன்.

முதல் காணல்

"ப்ரியா" - காதலிக்க ஏற்ற பெயர், என் பதின்ம காதல் உணர்வுகளின் மொத்த தாகத்துக்கும் அவளே சொந்தக்காரி ஆகிப்போனாள். அவளை முதன் முதலில் கண்டது ஒரு அற்புதக்காட்சி போல இன்றளவும் நினைவில் நிலைத்து நிற்கிறது. அன்று பள்ளியில் ஒரு Morning Prayer Assembly. காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு சான்று வழங்கப்படும் நிகழ்வு. ஒவ்வொரு பெயராக வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது 11A section ல் "ப்ரியா" என்ற பெயர் அழைக்கப்பட்டது. எல்லோரின் கண்களும் அவளை எதிர்நோக்கியிருக்க முதிர்ந்த மலர் மொட்டிலிருந்து வெளிப்படும் மெல்லிதழ் போல கூட்டத்தின் நடுவிலிருந்து மெல்ல வெளிப்பட்டாள். அவள் பாதம் படும் மண்ணுக்கு வலிக்கக்கூடாது என்பது போல மெல்லிய நடை பயின்று வந்தாள். புன்சிரிப்புடன் தலைமை ஆசிரியர் முன் சிரம் சிறிது தாழ்த்தி சான்றிதழை பெற்றுக்கொண்டு திரும்பிச்செல்ல முற்பட்ட அவளின் அழகிய பெயர் மீண்டும் அழைக்கப்பட்டது, அடுத்த பாடத்திலும் அவள்தான் முதல் மதிப்பெண் அதற்கடுத்த பாடத்திலும் அவள்தான் முதல் மதிப்பெண். இப்படி மீண்டும் மீண்டும் அவள் பெயர் அழைக்கப்பட ஆழமாக என் மனதில் பதிந்து போனது அந்த எழில் (அரசியின்) பெயர். அவள் உருவத்துக்கும் அந்தப்பெயருக்கும் அவ்வளவு பொருத்தம். ஒரு நான்கைந்து சான்றிதழை பெற்றுக்கொண்டதும் அந்த கால் முளைத்த மலர் அதே மென்நடையில் மாணவியர் கூட்டத்திற்குள் சென்று மறைந்து விட்டது.

அப்போதைக்கு என் பார்வையிலிருந்து மறைந்துவிட்ட அவள் அன்று முழுவதும் என் நினைவிலிருந்து மறையவில்லை.  வட துருவம் அருகில் சென்ற தென் துருவ காந்தம் போல் தானாகவே அவள் என்னை ஈர்த்தாள். பள்ளிகளில் முதல் மதிப்பெண் மாணவிக்கான பொதுவான அடையாளம் என்பது எண்ணெய் வழித்து வாறப்பட்ட தலை, சுருக்கம் தோய்ந்த உடை, புத்தகத்துடனேயே நெளிந்து கொண்டிருக்கும் புழு, மதிப்பெண்ணுக்காக மனனம் செய்து கொண்டேயிருக்கும் மறை கழண்ட நிலை, இப்படி எந்த ஒரு குணாதிசயமும் அவளிடம் இல்லை. ஆகாயத்திலிருந்து அப்போதுதான் வந்திறங்கிய தேவதை போல அத்தனை வனப்புடன் இருந்தாள், நேர்த்தியான உடை, நேர் வகிடு எடுத்து, Side இருபுறமும் தூக்கிபடி slide குத்தி, பின்புற ஜடை அணிந்து அதை பாதியாக மடித்து உள்புறம் செருகி என அவளது சிகையலங்காரமே தனித்துவமான ஒரு வடிவில் இருந்தது. மடித்துக்கட்டிய ஜடையின் இருபுறமும்  கோபுரம் போன்று இரு கோடுகளாக மல்லிகைப்பூ தொங்க விடப்பட்டிருக்கும், சில நேரம் மல்லிகையின் நடுவில் கனகாம்பரமும் அலங்கரிக்கும். அதைக்காணவே பல நாள் அவளை எதிர்பார்த்து காத்திருந்ததுண்டு. இன்று வரை அப்படியொரு நேர்த்தியான சிகையலங்காரம் பார்க்கவில்லை நான். பச்சமலப்பூவு (கிழக்கு வாசல்) பாடலில் பார்த்த ரேவதியின் அதே முகவண்ணம் அதே சிகைவண்ணம்.

காணல் தொடர்ந்தது

ஒவ்வொரு நாளும் அவளை எப்போது பார்ப்போம் என தேடத்தொடங்கியது மனது. அவள் கம்ப்யூட்டர் சயின்ஸ் நான் பயாலஜி. நாங்கள் வெவ்வேறு பிரிவென்பதால் அங்குள்ள சில நண்பர்களை காண வேண்டி வெறுமனே அங்கு செல்ல தொடங்கினேன். அவள் கடந்து போகும் நேரம் ஓரக்கண்ணில் அவளை பார்ப்பேன்(சைட் அடிப்பேன்), அவ்வழி அவள் கடந்துபோகும் வரை அவள் மீதான என் பார்வை விலக மறுக்கும். அவளோ என்னை திரும்பிப்பார்த்ததாக கூட நினைவில்லை. இப்போதுள்ள விடலைகளை போல் அவ்வகுப்பு நண்பனை பிடித்து மச்சான் ஒரு இன்ட்ரோ குட்றா என கேட்க தெரியாத கால கட்டம். இப்படியாக ஆரம்பித்த அவளைப்பற்றிய எண்ண ஓட்டம் நாளடைவில் காதலாக (சேர்ந்தால் காதல் சேராவிட்டால் infactuation) மாறத்தொடங்கியது. கண்கள் அவள் வரும் திசையை எதிர்நோக்க ஆரம்பித்தது. அவள் வகுப்பை கடக்கும் போது, காலை Prayerக்கு செல்லும் போது, பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது என எந்த தருணத்தையும் தவறவிடாமல் அவளை பார்த்தேன். இது போன்ற ஒரிஜினல் தேவதைகளுக்கு அதன் சாயலை ஒத்த அதே போன்ற டூப்ளிகேட்களும் கூடவே வருவதுண்டு. அப்படி வந்த டூப்ளிகேட்டின் பெயர் 'கவிதா', அதே போன்ற சிகையலங்காரம் ஆனால் அவளை விட உயரம், அதே போன்ற Makeup ஆனால் மாநிறம் என சரியாக எடுக்கப்படாத Xerox copy போன்று கவிதா உடனிருக்கும் போது பிரியா ஒரு படி அதிகமாகவே அழகாய் தெரிந்தாள்.

ஒரு நாளுக்கு எத்தனை முறை அவளை காண்கிறேனோ அத்தனை சந்தோஷம் அந்த நாள் எனக்கு. வீட்டிற்கு வந்ததும் தனியறை சென்று ரஹ்மான் பாடல்களை போட்டுவிட்டு (ராஜாவை பற்றிய அறிவு அப்போது இல்லை) கண்மூடி அந்த நாளில் அவளை  கண்டதின் நினைவுகளில் மூழ்கிவிடுவேன். இது ஒரு வழக்கமாகவே ஆகி விடத்தொடங்கி விட்டது. பத்தாம் வகுப்பு வரை முதல் மதிப்பெண் மட்டுமே வாங்கிக்கொண்டிருந்த நான் இப்போது எல்லா பாடத்திலும் பாஸ் மார்க் வருமளவு மட்டுமே படித்தேன், சில நேரம் ஃபெயிலும் ஆனேன், ட்யூஷன் சரியில்லை என அப்பா நினைத்தார். பாடம் கஷ்டம் போல என அம்மா நினைத்தாள். Actualஆக நினைவுகள் மாறியது, சிந்தனைகள் மாறியது, மதிப்பெண்கள் பற்றியெல்லாம் கவலை கொள்ள தோணவில்லை, நான் மார்க் வாங்கும் கருவியல்ல ஒரு உணர்வுபூர்வமான மனிதன் என்ற புரட்சிகரமான சிந்தனைகளெல்லாம் தோன்றியது. மற்ற மாணவர்களெல்லாம் cutoffக்காக முக்கிக்கொண்டிருந்த போது நான் மனதை கட்டவிழ்த்து விட்டிருந்தேன். எனக்கென ஒரு உலகம் உருவாகத்தொடங்கியது அதை அவள் மட்டுமே ஆட்சி புரியத்தொடங்கினாள்.

அவளின் முதல் பார்வை

சரி இப்போது அவளின் பாகம், அவளுக்கு நான் யார் என தெரியப்போகும் தருணம் வந்தது, அன்று ஒரு சுதந்திர தின கொண்டாட்டம் (1996), மாணவர் அனைவரையும் பள்ளிக்கு வர சொல்லி கொடியேற்றி பின் கலைந்து செல்லும் முன் இனிப்பு கொடுத்துக்கொண்டிருந்த தருணம். இரு அப்பாவி நண்பர்களை உடன் வைத்துக்கொண்டு அவள் இருக்கும் திசைக்கு என் பார்வையை திருப்பினேன். அவளுக்கும் எனக்குமான தூரம் சற்று அதிகம்தான். வழக்கம் போல அவளுடனும் இரு தோழிகள் அதில் ஒன்று கவிதா. ஒரு ஹிப்னாடிச புத்தகத்தில் படித்திருக்கிறேன் ஒருவரைப்பற்றி ஆழமாக சிந்தித்து அவரின் இரு புருவங்களுக்கு நடுவே உற்றுநோக்கினால் அந்த நபரை நம்மை நோக்கி திரும்ப வைக்க முடியுமாம், அது இங்கே பலித்ததா அல்லது எதேச்சையாக நிகழ்ந்ததா என்று எனக்கு தெரியாது ஆனால் அவள் என்னை பார்த்தாள், நான் பார்த்ததை அவள் பார்த்தும் விட்டாள் எனக்குள் படபடப்பு தொற்றிக்கொண்டது இருந்ததாலும் வைத்த கண்ணை எடுக்க மனமில்லாமல் (குருட்டு தைரியத்துடன்) அவளையே பார்த்தேன். அவளோ ஒரு முறை குனிந்து கீழே பார்த்துவிட்டு மீண்டும் விழியுயர்த்தி என்னை நோக்கினாள். நானும் என் பார்வையை விலக்கவேயில்லை. இம்முறை அவள் உடனிருந்த தோழியை (கவிதாவை) கூப்பிடுகிறாள் அவளும் என்னை திரும்பி பார்க்கிறாள். யார் பார்த்தால் எனக்கென்ன நான் நினைத்தது கொஞ்சம் கொஞ்சமாக நடக்கிறது. அவளுக்கு என்னை தெரிய வைக்க வேண்டும், நான் அவளைக்காண தவமிருக்கிறேன் என அவளுக்கும் புரிய வைக்க வேண்டும், இன்று அதற்கான விதையைதான் ஊன்றிக்கொண்டிருக்கிறேன். இப்படி நாங்கள் பார்க்க ஆரம்பித்ததுமே கூட்டம் கலைய ஆரம்பித்தது எல்லோரையும் வீட்டுக்கு போக சொல்லி அனுப்பி விட்டார்கள் (சண்டாளர்கள்) வேறு வழியில்லாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.

அன்று முதல் அவள் என்னை கடந்து போகும் நேரங்களில் அவள் பார்வையும் என்னை நோக்கி திரும்ப ஆரம்பித்தது. நான் அவளை பார்க்கிறேன் என்பது அவளுக்கு புரிந்ததாலோ என்னவோ நான் பார்க்கிறேனா இல்லையா என தெரிந்து கொள்ளவாவது அவள் என்னை பார்த்திருக்க கூடும். முன்பு எப்போதெல்லாம் அவளை கண்டேனோ அதே இடங்களில் இப்போதும் அவளை காண்கிறேன் ஆனால் இப்போது அதே இடங்களில் அவளும் என்னை காண்கிறாள். அதை என் இரு டுபாக்கூர் நண்பர்களும் காண்கின்றனர்.

பார்க்கும் படலம் தொடங்கி விட்டது அடுத்து பேசும் படலம் ஆரம்பிக்க வேண்டும். வாய்ப்பு தேடி அலைகிறேன். ஒன்றும் அமைய வில்லை. தூரத்தில் நான் இருக்கும்போது என்னை கண்டவள் நாங்கள் ஒருவரையொருவர் எதிர் கொள்ளும் வேளையில் வளைந்த தாமரை மொட்டைப்போல் சிரம் தாழ்த்திக்கொள்கிறாள். அப்படி செல்பவளை வலுக்கட்டாயமாக பெயர் சொல்லியோ ஹலோ என்றோ கூப்பிடும் தைரியம் அப்போது இல்லை.  இப்படியே சென்று கொண்டிருக்க அவளை பள்ளிக்கு வெளியே அவளை காண வேண்டும் என்று தோன்றியது. 


தொடரும் .....

No comments:

Post a Comment